Skip to main content

ஹெலிகாப்டரில் சேசிங்... பிடிப்பட்ட இலங்கை மீனவர்கள்... கைப்பற்றப்பட்ட தங்கம்....!!!

Published on 16/02/2020 | Edited on 16/02/2020

இலங்கையிலிருந்து கடல் மார்க்கமாக தமிழ்நாட்டிற்கு தங்கம் கடத்தி வருவதையறிந்த இந்தியகடற்படை வீரர்கள், கடத்தல் படகினை ஹெலிகாப்டரில் சேசிங் செய்து இலங்கை மீனவர்களை பிடித்து, அவர்களிடமிருந்த 35 தங்கக் கட்டிகளை கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையில் நடைப்பெற்று வந்த உள்நாட்டு யுத்தத்திற்கு பிறகு தமிழ்நாட்டிலிருந்து கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளை இலங்கைக்கும், அதற்கு ஈடாக இலங்கையினர் தங்கக்கட்டிகளையும் கடத்தி வருவது ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் மாறாத வழமைகளில் ஒன்று. இருப்பினும், ஒருவருக்கொருவர் ஒத்துழைக்காமல் தங்களுடைய டீமை மட்டும் வைத்து சுங்க இலாகா, கடற்படையினர், தமிழக கடலோரகாவல் படையினர் மற்றும் மத்திய, மாநில உளவுப்பிரிவவு போலீசாரும் களத்தில் இறங்கி கடத்தலை தடுக்கப் போராடி வருகின்றனர்.

 

 Sri Lankan fishermen caught in helicopter ...

 

இது இப்படியிருக்க, நேற்று காலை உச்சிப்புளி ஐஎன்எஸ் விமானப்படை முகாமிலிருந்து கடற்படை வீரர்களை தாங்கிய ஹெலிகாப்டர் ஒன்று மன்னார்வளைகுடா பகுதியில் ரோந்து சென்ற பொழுது, தனுஷ்கோடி கடல் பகுதியில் இலங்கையைச் சேர்ந்த மூன்று நபர்கள் பிளாஸ்டிக் படகின் இந்திய பகுதிக்குள் வருவதை அறிந்து அவர்களை தடுத்தும் நிறுத்தும் நோக்கில் முதலில் அறிவிப்பு செய்துள்ளனர். படகும் நிற்காமல் செல்ல, விடாமல் அதனை விரட்டி சேசிங் செய்து தனுஷ்கோடி அருகில் அரிச்சல்முனை கடல் பகுதியில் வைத்து பிடித்து தமிழக கடலோர காவல் குழும போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர் ஹெலிகாப்டரில் இருந்த கடற்படை வீரர்கள்.

 

 Sri Lankan fishermen caught in helicopter ...

 

விசாரணையில், "தாங்கள் மன்னார் பகுதியில் இருந்து மீன் பிடிப்பதற்காக அதிகாலை 4 மணிக்கு வந்ததாகவும், காற்று காரணமாக இந்திய கடல் பகுதிக்கு தவறுதலாக வந்துவிட்டதாகவும்" தெரிவித்தனர். எனினும், சந்தேகமடைந்த போலீசாரின் தொடர் விசாரணையில், "தங்கச்சிமடம் பகுதியில் உள்ள சிலரிடம் கொடுப்பதற்காக தங்கம் கடத்தி கொண்டு வந்ததாகவும், அது படகின் பின்பகுதியில் ஒளித்து வைத்திருப்பதாகவும் கூறி இடத்தினையும் காண்பித்தனர். படகின் பின்புறத்தில் உடைத்து பார்த்தபோது அதில் சுமார் 100 கிராம் அளவு கொண்ட 35 தங்க கட்டிகள் இருப்பதையறிந்து அதனைக் கைப்பற்றி சுங்கத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேவேளையில், கடத்தல் தங்கம் பெற்றுக்கொள்ள தங்கச்சி மடம் பகுதியிலுள்ளவர்கள் யார்..? என்ற விசாரணையை துவக்கியுள்ளது உள்ளூர் போலீஸ் மற்றும் கியூ பிரிவு போலீஸ். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு ஏற்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மீனவர்களின் பிரச்சினையில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
Decisive action should be taken on the problem of fishermen CM MK Stalin

தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி நேற்று (21.03.2024) இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட வேண்டும். மேலும் அவர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளைச் செய்திடவும் வலியுறுத்தி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு இன்று (22.03.2024) கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், “இலங்கைக் கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மைக் காலமாக தொடர்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது. அவர்களது குடும்பத்தினரிடையேயும், மீனவ சமூகத்தினரிடையேயும் பெருத்த மன உளைச்சலையும் நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. 21.03.2024 அன்று (நேற்று) தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, அவர்களது 5 விசைப்படகுகள் இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் 76 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, இப்பிரச்சினையில் தாமதம் ஏதுமின்றி தீர்வு காண, தீர்க்கமான நடவடிக்கை எடுக்க வலியுறுத்திகிறேன். இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களுக்கு தேவையான சட்ட உதவிகளை வழங்கிடவும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது?

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
20 Rameswaram fishermen incident

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து இன்று (20.03.2024) காலை ஏராளமான விசைப் படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்கக் கடலுக்குச் சென்றிருந்தனர். அவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் மீனவர்கள் 20 பேரை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகச் சிறைபிடித்து கைது செய்தனர். அதோடு மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து ராமேஸ்வரம் மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டதுடன் இரண்டு விசைப் படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ள சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம் விசாரணைக்கு பின்னர் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள்  20 பேரும் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.