நாகை - கோடியக்கரை கடற்பகுதியில் நேற்று இந்திய கடலோர காவல்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுருந்தனர். அப்போது தோப்புத்துறை அருகே 45 கடல் நாட்டிக்கல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கு இடமான வகையில் 5 படகுகளில் மீனவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்ததை கண்ட இந்திய கடலோர காவல்படையினர் , அதன் அருகில் சென்று சோதனை மேற்கொண்டனர். அதில் இலங்கை மத்தாரா, கேளோ, திரிகோணமலை பகுதிகளை சேர்ந்த வக்கமாலித், நிமேஷ் , சத்ரங்கா, குமாரா, நிஷாந்தா, மன்பந்து ஆகிய 25 மீனவர்கள் இந்திய கடல் எல்லையில் அத்துமீறி மீன்பிடித்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இலங்கை மீனவர்கள் 25 பேரை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது 5 படகையும் இன்று காரைக்கால் தனியார் துறைமுகம் கொண்டுவந்து, அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இலங்கை மீனவர்கள் 25 பேரும் பிப்ரவரி 17,ஆம் தேதி திரிகோணமலை துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றதாகவும், இந்திய கடல் பகுதியில் கேரை மீன் அதிக அளவில் கிடைப்பதால் அவர்கள் இந்திய எல்லைக்குள் நுழைந்து மீன் பிடித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.