Skip to main content

போதைப்பொருள் கடத்தல் தளமாகும் தூத்துக்குடி! இலங்கை கடத்தல் ஏஜெண்ட் கைது! 

Published on 07/03/2022 | Edited on 07/03/2022

 

 Sri Lankan abduction agent arrested

 

இலங்கை உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்குப் போதைப் பொருட்கள் கடத்துகிற முகத்துவாரமாக மாறி வருகிறது தூத்துக்குடி கடல் பகுதி. கடந்த வாரம், உலகச் சந்தையில் 30 கோடி மதிப்பிலான கிறிஸ்டல் மெத்தாம் பெட்டமைன் எனும் போதைப்பொருள் 10 கிலோ பிடிபட்டது. தற்போது உள்ளூர் மார்க்கெட்டில் ஒரு கோடி மதிப்புள்ள சுமார் 450 கிலோவுக்கும் மேலான அரை டன் கஞ்சா கடத்தலுக்காகக் காத்திருந்தபோது பறிமுதல் செய்யப்பட்டது.

 

 Sri Lankan abduction agent arrested

 

தூத்துக்குடியின் க்யூ பிரிவு இன்ஸ்பெக்டரான விஜய அனிதா, தனக்குக் கிடைத்த உளவுத் தகவலைக் கொண்டு தனது சகாக்களான எஸ்.ஐ.வேல்ராஜ், ஜீவமணி உள்ளிட்ட போலீஸ் படையுடன் தூத்துக்குடியின் தாளமுத்து கடற்கரையோரம் கண்காணிப்பைத் தீவிரமாக்கினார். அங்குள்ள வெள்ளப்பட்டி கடற்கரையை நோட்டமிட்டவர்கள், படகில் ஏற்றுவதற்குத் தயாராகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சைவையும், படகையும் கைப்பற்றினார்கள். அதனைச் சோதனை செய்ததில் 450 கிலோவுக்கும் மேலான எடை கொண்டது எனவும், அதன் மதிப்பு இந்திய மதிப்பில் ஒரு கோடியையும் தாண்டும் என்கிறார்கள்.

 

படகு மூலம் கடத்திச் செல்வதற்குத் தயாராக இருந்த கணேசன் மாரிகுமார், பன்னீர்செல்வம், யோகேஸ்வரன், இசக்கிமுத்து, வினீத் மற்றும் கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் தாலுகாவின் புவனகிரியைச் சேர்ந்த மன்சூர்அலி உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்தனர்.

 

 Sri Lankan abduction agent arrested

 

பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டதில், சென்னையிலிருந்து கடத்திக் கொண்டுவரப்பட்ட இந்தக் கஞ்சா மூட்டைகள், தூத்துக்குடிப் பகுதியில் தண்ணீர் புகுந்து கெட்டு விடாமலிருக்க பிளாஸ்டிக் மூலம் கவனமாகப் பேக்கிங் செய்யப்பட்டுக் கடத்தலுக்குத் தயாராக இருந்திருக்கிறது. இதனை பிடிபட்ட கடத்தல்காரர்களிடம் ஒப்படைப்பதற்காக இதன் முகவரான மன்சூர்அலி, உடன் வந்திருக்கிறார். முறையாக இவை கடத்தப்படுகிறதா?. தரப்பட்ட கஞ்சாவின் அளவு குறையாமல் இலங்கை கடத்தல் புள்ளியிடம் ஒப்படைக்கப்படுகிறதா, என்பதையும் கண்காணிக்கிற முகவர் மன்சூர் அலி, மேலும் இந்தக் கஞ்சாவை வேறு புள்ளிகள் யாரும் திருடி விடக் கூடாது என்றும் கண்காணிக்கப்பதுண்டாம்.

 

பிடிபட்ட குற்றவாளிகள், வாகனங்கள், கஞ்சா ஆகியவைகளை மேல் நடவடிக்கைக்காகப் போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீசாரிடம் க்யூ பிரிவு போலீசார் ஒப்படைத்துள்ளனர்.

 

கரோனா தொற்று காரணமாக இலங்கையில் உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. அதனால் இந்தியச் சரக்குகளுக்கு அங்கு 10 மடங்கு விலை கிடைப்பதால் விரளி மஞ்சள் உள்ளிட்ட உணவுப் பொருட்கள், கடல் அட்டை இவற்றோடு போதைப் பொருட்களும் இங்குள்ளவர்களால் கடத்தப்படுகிறது. பிடிபட்ட கடத்தல் சரக்கு முகவர் மன்சூர்அலி இலங்கையைச் சேர்ந்த போதைக் கடத்தல் மன்னன் சிவா என்பவனின் நெருக்கமான முகவர். இருவரும் 10 ஆண்டுகட்கு முன்பு பிடிபட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளதால் சிவாவிற்காக கடத்தலை மேற்கொண்டிருக்கிறான் மன்சூர்அலி என்கின்றனர். க்யூ பிரிவு போலீஸ் விசாரணை அதிகாரிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்!

Published on 09/04/2024 | Edited on 09/04/2024
Tamil Nadu fishermen incident for Sri Lanka Navy 

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. அதோடு படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இத்தகைய சூழலில் நேற்று காலை (08.04.2024) ராமேஸ்வரத்திலிருந்து 250 மேற்பட்ட விசைப்படகில் மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர்.

அதன்படி ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்து விட்டு இன்று (09.04.2024) அதிகாலை 3 மணியளவில் மீனவர்கள் கரைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்கள் மீது ராட்சத மின் விளக்கு ஒளியை வீசியுள்ளனர். மேலும் ஒலிபெருக்கி மூலம்,‘இங்கிருந்து வெளியேறுங்கள். இல்லையென்றால் உங்களைக் கைது செய்வோம்’ என எச்சரிக்கை செய்துள்ளனர். அதன் பின்னர் மீனவர்களின் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், மின் பிடி வலைகள் மற்றும் ஜி.பி.எஸ். கருவிகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

அதே சமயம் இரும்பு கம்பியைக் கொண்டு மீனவர்கள் மீது தாக்குதல் இலங்கை கடற்படையினர் நடத்தியதாகவும், மீனவர்களின் வலைகளை அறுத்து வீசி சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதல் சம்பவத்தில் ஒரு மீனவருக்குத் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு மீனவருக்குத் தோள் மற்றும் இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் காயம் அடைந்த 2 மீனவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் தாக்குதல் நடத்திய சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுவிப்பு!

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Tamil Nadu fishermen released from Sri Lankan jail

தமிழக மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றது. இத்தகைய சூழலில் மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 19 மீனவர்கள் கடந்த மார்ச் 6 ஆம் தேதி (6.03.2024) மீன் பிடிக்க கடலுக்குச் சென்றிருந்தனர். இவ்வாறு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர். மேலும், மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தி கைது செய்தனர். அதோடு மீனவர்கள் பயன்படுத்திய 2 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. அதே சமயம் மீனவர்கள் 19 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில், மயிலாடுதுறையைச் சேர்ந்த 9 பேர், புதுக்கோட்டையைச் சேர்ந்த 4 பேர், புதுச்சேரி, காரைக்காலில் இருந்து 6 பேர் என மொத்தம் 19 மீனவர்கள் இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். அதன் பின்னர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அப்போது மீனவர்களை தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று, அரசின் சார்பில் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர்.