Skip to main content

ஆன்மீக நகரமா? திருடர்களின் நகரமா? அச்சத்தில் பொதுமக்கள்! 

Published on 19/09/2022 | Edited on 19/09/2022

 

A spiritual city? A city of thieves? Public in fear!

 

திருவண்ணாமலை நகரத்தின் பல்வேறு பகுதியில் திருட்டு, வழிப்பறி ஆகிய சம்பவங்கள் நடந்துவருகின்றன.

 

திருவண்ணாமலை நகரம் வானவில் நகரைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. 65 வயது முதியவரான இவர், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது வங்கி கணக்கு வேங்கிக்கால் பகுதியில் உள்ள கார்ப்பரேஷன் வங்கியில் உள்ளது. வங்கியிலுள்ள தனது சேமிப்பு கணக்கிலிருந்து 2 லட்ச ரூபாய் பணம் எடுத்துக்கொண்டு வெளியே வந்தார் கிருஷ்ணமூர்த்தி. வங்கி வாசலில் நிறுத்தியிருந்த தனது இருசக்கர வாகனத்தின் முன்பு இரண்டு லட்ச ரூபாய் பணமிருந்த  மஞ்சப்பையை மாட்டிவிட்டு அங்கிருந்து கிளம்ப வண்டியை தள்ளுகிறார். இதனை வங்கி முன்பு சாலையில் நின்று பார்த்துக்கொண்டிருந்தனர் இருவர்.

 

இருவரில் ஒருவர் கிருஷ்ணமூர்த்தியின் இருசக்கர வாகனத்தின் அருகே வந்து, 100 ரூபாய் தாளை கீழே போட்டவர், கிருஷ்ணமூர்த்தியை அழைத்து கீழே பணம் இருப்பதாக கூறுகிறார். கிருஷ்ணமூர்த்தி இரண்டு லட்ச ரூபாய் இருப்பதை மறந்து வண்டியை நிறுத்திவிட்டு கீழே கிடந்த 100 ரூபாயை எடுக்கச்செல்கிறார். 100 ரூபாய் தாளை கீழே போட்டவர், கிருஷ்ணமூர்த்தி வண்டியில் மாட்டியிருந்த பணமிருந்த பையை எடுத்துக்கொண்டு வேகமாக சென்று இருசக்கர வாகனத்தில் காத்திருந்த கூட்டாளியின் வண்டியில் ஏறி செல்வது வங்கி வாசலில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 100 ரூபாயை ஆசையாக எடுத்துக்கொண்டு தனது இருசக்கர வாகனத்தின் அருகே வந்தபோது பணம் இருந்த பை திருடுபோனதைப் பார்த்து அதிர்ச்சியாகி வங்கி முன்பே கண்ணீர் விட்டு அழுதார். பின்னர் திருவண்ணாமலை காவல்நிலையத்தில் புகார் தந்துவிட்டு கண்ணீரோடு காத்துக்கொண்டுள்ளார்.

 

வார இறுதி நாட்களில் வெளிமாநிலத்தைச் சேர்ந்த அண்ணாமலையார் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் திருவண்ணாமலை வந்து கிரிவலம் செல்கின்றனர். கடந்த செப்டம்பர் 18ஆம் தேதி மாலை, ஆந்திராவை சேர்ந்த இருபெண்கள் கிரிவலம் வந்தனர். போளூர் சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் அப்பெண்களிடமிருந்து கழுத்திலிருந்து தங்கசெயினை பறித்துக்கொண்டு சென்றுள்ளனர்.

 

அதேபோல் இன்று காலை மத்தலாங்குளத்தெருவில் கடைக்கு வெளியே நிறுத்திவைத்திருந்த ஸ்கூட்டி வாகனத்தை ஒரு இளைஞரின் வாகனம் திருடு போயுள்ளது. வண்டி உரிமையாளர் அங்குள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தபோது, ஒரு இளைஞர் அந்த வண்டியை எடுத்து செல்வதும், அந்த வண்டி பேருந்து நிலையம் அருகிலுள்ள போக்குவரத்து சிக்னலில் சாகவாசமாக நிற்பதும் தெரியவந்துள்ளது.

 

வங்கி வாசலில் பட்ட பகலில் கவனத்தை திசை திருப்பி திருட்டு, கிரிவலப்பாதையில் கிரிவலம் வந்த பகல் பொழுதில் பெண்களின் கழுத்திலிருந்து தங்கசெயின் பறித்து சென்ற திருடன், காலை நேரத்தில் கடைக்கு வெளியே நிறுத்தி இருந்த இருசக்கர வாகனம் திருட்டு என தொடர்ச்சியாக திருவண்ணாமலை நகரில் திருட்டுகள் பட்டப்பகலில் நடப்பது ஆன்மீக நகரம் திருடர்களின் நகரமாகிறதோ என அச்சப்படுகின்றனர் பொதுமக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வலி தாங்க முடியவில்லை” - மனைவி அடிப்பதால் கணவன் தற்கொலை முயற்சி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Husband try lost their life due to wife beating in Hyderabad

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே  வசித்து வருபவர் நாகேஷ். இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் நாகேஷ் திடீரென்று ஜெயப்பேரி பூங்காவில் இருக்கும் ஏரியில் தற்கொலை செய்வதற்காக இறங்கி உள்ளார். எனக்கும், என் மனைவிக்கும் விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்று கத்திக் கொண்டே ஏரியில் நாகேஷ் இறங்கி இருக்கிறார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த  அங்கிருந்தவர்கள் நாகேஷை ஏரியை விட்டு வெளியேறுமாறு கூச்சலிட்டு உள்ளனர். ஆனால் நாகேஷ் ஏரியை விட்டு வெளியே வர மறுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நீண்ட நேரம் கழித்து அங்கிருந்த மக்களே ஏரியில் குதித்து  நாகேஷை மீட்டு வெளியே அழைத்து வந்தனர்.

பின்பு நாகேஷிடம் ஏன் தற்கொலை செய்ய முயற்சி செய்தீர்கள் என்று விசாரித்ததில், என் மனைவி என்னை தினமும் அடிக்கிறாள்; என்னால் வலி தாங்க முடியவில்லை. அதனால் நான் தற்கொலை செய்து கொள்ள முயன்றேன். என் குழந்தைகளிடம் கூட என்னை பேச அனுமதிப்பதில்லை. அவர்களிடம் அப்பா இறந்துவிட்டடாக கூறியிருக்கிறாள். அவள் என்னை சித்திரவதை செய்கிறாள். எனக்கும் என் மனைவிக்கும் விவகாரத்து வாங்கிக் கொடுங்கள். இல்லாவிட்டால் நான் இறந்து விடுவேன்” என்று வேதனையோடு கூறியிருக்கிறார். இதனை அங்கிருந்த ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். தற்போது இது வேகமாக பரவி வருகிறது.

Next Story

பிரதமர் மோடி மீது காவல் நிலையத்தில் புகார்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Police complaint against Prime Minister Modi

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கியது. நாடு முழுவதும் மொத்தமாக ஏழு கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இறுதிக் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். 

Police complaint against Prime Minister Modi

இந்நிலையில் வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது டெல்லி மந்திர்மார் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவர்  பிருந்தா காரத் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், “ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்பூட்டும் வகையில் பிரதமர் பதவியில் உள்ள மோடி பேசியுள்ளார். எனவே இந்த வெறுப்பு பேச்சு தொடர்பாக பிரதமர் மோடி மீது குற்ற வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முறையிடவும் வழக்கறிஞர்கள் திட்டமிட்டுள்ளனர். மேலும் வெறுப்பு பேச்சுக்களை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று (23.04.2024) விசாரணைக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.