Skip to main content

கைதியின் மனைவியிடம் 'ஆபாச' பேச்சு; காவலரிடம் விசாரணை!

Published on 07/09/2023 | Edited on 07/09/2023

 

speech to the prisoner's wife... Interrogation with the policeman!

 

சேலம் சிறைக் கைதியின் மனைவிக்கு பலான மெசேஜ்களை அனுப்பிய 'மன்மத' சிறைக் காவலரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

 

நாமக்கல் மாவட்டம், வளையப்பட்டியைச் சேர்ந்தவர் குபேந்திரன் (35). இருசக்கர வாகன பழுதுபார்க்கும் பட்டறை வைத்திருக்கிறார். இவருடைய மனைவி நிர்மலா (29) (கணவன், மனைவி இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளன). வாகனத் திருட்டு வழக்கில் குபேந்திரனை கடந்த 2021ம் ஆண்டு மோகனூர் காவல்நிலைய காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீதான வழக்கின் விசாரணை, நாமக்கல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

 

நிர்மலா, கணவரைப் பார்ப்பதற்காக சேலம் மத்திய சிறைக்கு சென்று வந்துள்ளார். அங்கு கைதிகளைப் பார்க்க வருவோருக்கு அனுமதி சீட்டு வழங்கப்படும் பிரிவில் விஜயகாந்த் என்ற காவலர் பணியில் இருந்துள்ளார். நிர்மலா கணவரைப் பார்க்க சிறைக்கு வந்தபோது அவருடைய செல்போன் எண்ணைப் பெற்றுக்கொண்ட காவலர் விஜயகாந்த், அடிக்கடி செல்போனில் அழைத்து காதல் மொழிகளைப் பேசி வந்துள்ளார். 

 

முதல்முறை பேசும்போதே, ஒருமையில் பேசியதாகவும், தன்னையும் சார் என்று அழைக்காமல் 'வா..., போ...' என்று அழைக்கும்படியும் கூறியுள்ளார் விஜயகாந்த். இப்படியெல்லாம் பேசக்கூடாது என்று நிர்மலா எச்சரித்தபோதும், அவர் விடாமல் வாட்ஸ் ஆப்பில் ஆபாச மெசேஜ்களையும், படங்களையும் பதிவிட்டு வந்துள்ளார். ஒருகட்டத்தில் எல்லை மீறிய விஜயகாந்த், 'சேலத்திற்கு வா... தனிமையாக இருந்துட்டு போகலாம்ல...,' என்று பச்சையாகவே கேட்டுள்ளார். 

 

speech to the prisoner's wife... Interrogation with the policeman!

 

கணவர் குபேந்திரன் எப்போதெல்லாம் பிணையில் வெளியே செல்கிறாரோ அப்போதெல்லாம் விஜயகாந்த், நிர்மலாவை தொடர்பு கொள்வதில்லை. அவருடைய செல்போன் எண்ணையும் பூட்டி வைத்து விடுவார். 

 

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 24ம் தேதி வழக்கு விசாரணைக்காக சேலம் சிறையில் இருந்து குபேந்திரனை நாமக்கல் நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றனர். அப்போது விஜயகாந்த் மீண்டும் நிர்மலாவை அழைத்து ஆபாசமாகப் பேசியுள்ளார். விசாரணை முடிந்து குபேந்திரன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், காவலர் விஜயகாந்த்தின் சேட்டைகள் தொடங்கிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. அவருடைய தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளான நிர்மலா, ஒருமுறை தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் மர்மமான முறையில் இறந்த கனகராஜின் அண்ணன் தனபாலை, கடந்த ஆகஸ்ட் மாதம் நில மோசடி வழக்கில் காவல்துறையினர் கைது செய்தனர். அந்த வழக்கில் தனபால் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவர் இருந்த அதே அனெக்ஸ்-1 பிளாக்கில்தான் குபேந்திரனும் அடைக்கப்பட்டு இருந்தார். 

 

அப்போது குபேந்திரன், தன் மனைவியிடம் காவலர் விஜயகாந்த், செல்போன் மூலம் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாகவும், நீங்கள் பிணையில் வெளியே சென்ற பிறகு சிறைத்துறை அதிகாரிகளிடம் சொல்லி விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்க உதவும்படியும் தனபாலிடம் அழுது புலம்பியிருக்கிறார். 

 

இந்நிலையில், பிணையில் வெளியே வந்த தனபால், நக்கீரன் நிருபரிடம் இந்த தகவலைச் சொன்னார். பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் விசாரித்தோம். “எனக்கு கல்யாணம் ஆகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. பொறுப்பான பணியில் இருந்து கொண்டு இப்படியெல்லாம் என்னிடம் ஆபாசமாக பேசலாமா? என்று காவலர் விஜயகாந்திடம் கேட்டேன். ஆனால் அவர் கொஞ்சமும் பொருட்படுத்தவே இல்லை. மீண்டும் மீண்டும் அவர் வாட்ஸ்ஆப் மூலம் அழைத்து தொல்லை செய்கிறார். ஏற்கனவே, என் கணவர் மீது மோகனூர் காவல்நிலைய காவல்துறையினர் பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளிவிட்டனர் என்று நானும், குழந்தைகளும் தவித்து வருகிறோம். இந்த நிலையில் சிறைக்காவலர் விஜயகாந்தால் நாங்கள் நிம்மதி இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம்” எனக் கண்ணீருடன் கூறினார். 

 

இதுகுறித்து நாம் சேலம் மத்திய சிறை ஏ.டி.எஸ்.பி. வினோத் மற்றும் விஜிலன்ஸ் காவல்துறையின் கவனத்திற்குக் கொண்டு சென்றோம். அவர்களும் இதுகுறித்து முன்பே புகார் வரப்பெற்று, விசாரணை நடத்தி வருவதாகச் சொன்னார்கள். 

 

இதுபற்றி சேலம் மத்திய சிறை ஏ.டி.எஸ்.பி. வினோத்திடம் கேட்டபோது, “காவலர் விஜயகாந்த் மீதான புகார் குறித்து முதல்கட்ட விசாரணை நடத்தி இருக்கிறோம். அவருடைய செல்போன் எண்ணில் இருந்து, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எப்போதெல்லாம் அழைப்பு சென்றிருக்கிறது என்பது குறித்த 6 மாத சி.டி.ஆர். அறிக்கையை சைபர் கிரைம் பிரிவிடம் கேட்டுள்ளோம். இந்த புகார் குறித்து சிறைத்துறை டி.ஐ.ஜி.யின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது. முதல்கட்டமாக அந்த காவலரை, பார்வையாளர்கள் பிரிவில் இருந்து கவாத்து பயிற்சி மைதானத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. செல்போன் சி.டி.ஆர். அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். 

 

இது ஒருபுறம் இருக்க, காவலர் விஜயகாந்த் பற்றி மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. 

 

மணிகண்டன் என்ற சிறைவாசியை அவருடைய மனைவி பார்ப்பதற்காக சிறைக்கு வந்துள்ளார். அப்போது அவர் முன்பாகவே காவலர் விஜயகாந்த், 'நீ ரொம்ப அழகா இருக்க...' என்று கூறி வழிந்துள்ளார். அதோடு நிற்காமல், அவரை சேலம் நீதிமன்றம் வரை பின்தொடர்ந்து சென்று காபி சாப்பிடவும் அழைத்துள்ள சம்பவமும் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்துள்ளது. இதையறிந்த சிறை நிர்வாகம் அவரை எச்சரிக்கை மட்டும் செய்து விட்டுள்ளது. அப்போதே அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்திருந்தால் மீண்டும் ஒரு கைதியின் மனைவியிடம் பல்லைக் காட்டியிருக்க மாட்டார் என்கிறார்கள் சக காவலர்கள்.

 

இதுபோன்ற புகார்களை காவலர் விஜயகாந்திடம் உயர் அதிகாரிகள் விசாரிக்கச் சென்றால், வேண்டுமானால் என் செல்போனை சோதனை செய்து கொள்ளுங்கள் என்று நல்லவன் போல் நடிப்பாராம். நிர்மலாவின் புகார் குறித்து விசாரிக்கச் சென்றபோதும் அதேபோல் உத்தமன் வேடம் போட்டுத் தப்பிக்க முயன்றுள்ளார். பாலியல் ரீதியான பேச்சுகளை அவர் வாட்ஸ்ஆப் மூலமே பேசி வருவதாகவும், பேசி முடித்த பிறகு அழைப்பு விவரங்களையும், குறுந்தகவல்களையும் அழித்து விடுவதாகவும் சொல்கின்றனர். இதனால்தான் அவரை ஆதாரப்பூர்வமாக பிடிக்க முடியாமல் திணறி வந்திருக்கிறது சிறை நிர்வாகம். ஆனால் இந்த முறை நிர்மலா விவகாரத்தில் கண்டிப்பாக அவர் மீது கடும் நடவடிக்கை பாயும் என்கிறது சிறைத்துறை வட்டாரம். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல் தலைமுறையினர் வாக்கு யாருக்கு? சுவாரஸ்யமான தகவல்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Interesting facts about who the first generation voted for

நாடாளுமன்றத் தேர்தலில் முதல்முறையாக வாக்களித்த இளைஞர்கள் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்து வாக்களித்திருப்பதும், சமூக  நலத்திட்டங்கள், ஊழல் ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டு  வாக்களித்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஏப். 19ஆம் தேதி தேர்தல் நடந்தது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முனை போட்டி நிலவியது. தமிழகத்தில் மொத்தம் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் முதல் தலைமுறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர். முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்களின் ஆதரவு யாருக்கு? என்பதில் அரசியல் கட்சிகளிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் முதன் முதலாக வாக்களித்துவிட்டு வந்த இளைஞர்கள், இளம்பெண்களிடம் பேசினோம். அவர்கள் ஊழல் மற்றும் சமூக நலத்திட்டங்களின் அடிப்படையில் வாக்களித்து இருப்பதும், பெரும்பாலானோர் மாநிலக் கட்சிகளுக்கே முக்கியத்துவம் அளித்திருப்பதும் தெரிய வந்தது.

இதில் இன்னொரு சுவாரஸ்ய தகவலும் கிடைத்தது. முதல் முறை வாக்களித்தவர்களில் இளம்பெண்கள் மாநில அரசின் செயல்திட்டங்களின் அடிப்படையிலும், இளைஞர்கள் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளித்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அதாவது ஒரே வயதாக இருந்தாலும் இளம்பெண்கள், இளைஞர்களின் சிந்தனை வேறு வேறாக இருக்கிறது. என்றாலும், அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படையாக கூற மறுத்துவிட்டனர். எனினும், நம்முடைய கேள்விகளுக்கு அவர்கள் அளித்த பதில்கள் மூலம், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை கிட்டத்தட்ட யூகிக்க முடிந்தது.

முதல்முறையாக வாக்களித்த அனுபவம் எப்படி இருந்தது?, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதில் பெற்றோரின் தலையீடு இருந்ததா?, உங்கள் வாக்கு தேசிய கட்சிக்கா? அல்லது மாநில கட்சிக்கா?, எதன் அடிப்படையில் வாக்களித்தீர்கள்?, உங்களைக் கவர்ந்த தமிழக அரசின் திட்டங்கள் என்னென்ன? ஆகிய கேள்விகளை முன்வைத்தோம். சேலம் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் முதல் தலைமுறை வாக்காளர்கள் சிலரைச் சந்தித்தோம். அவர்கள் கூறியதாவது..

 Interesting facts about who the first generation voted for

அக்ஷய பிரியா(பி.எஸ்சி., மாணவி): முதல்முறையாக வாக்குச்சாவடிக்கு வந்து  வாக்களித்ததே ஜாலியான அனுபவமாக இருந்தது. யார் அதிகாரத்திற்கு வந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு கிடைக்குமோ அதை மனதில் வைத்தும், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதை கருத்தில்கொண்டும் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பூர்ணிமா(பி.இ., மாணவி): ஒரு குடிமகளாக வாக்களிப்பது நமது கடமை. யாருக்கு ஓட்டுப் போடணும் என்று அப்பா, அம்மா உட்பட யாருடைய தலையீடும் இல்லாமல் நானாக சிந்தித்து வாக்களித்தேன். யார் வந்தால் நல்லது செய்வாங்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். நான் தேசியக் கட்சிகளுக்கு வாக்களிக்கவில்லை. மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இப்போதுள்ள அரசு செயல்படுத்தி வரும் நலத்திட்டங்களில் உள்ள நல்லது, கெட்டது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.

 Interesting facts about who the first generation voted for

அகல்யா(பி.காம்., சி.ஏ., மாணவி): முதல் முறையாக வாக்களிக்கப் போகிறோம் என்பதே சந்தோஷமாகத்தான் இருந்தது. எங்களுக்குனு ஒரு அடையாள அட்டை கிடைத்திருக்கிறது. தமிழகத்தில் இப்போதுள்ள அரசும் நல்லாதான் செயல்படுகிறது. இன்னும் சிறப்பாக இருந்தால் நன்றாக இருக்கும்.

சவுந்தர்யா(எம்.ஏ., மாணவி, அகல்யாவின் சகோதரி): இந்த நாட்டுக்கு ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை எங்களிடம் கொடுத்திருக்கிறார்களே என்று பெருமையாக இருக்கிறது. நானும், என் சகோதரி அகல்யாவும் ஒரு தேசியக் கட்சிக்குதான் ஓட்டுபோட்டோம். நாடு நல்ல நிலையில் செல்ல வேண்டும் என்பதாலும், வலிமையான பிரதமர் வேண்டும் என்பதாலும் வாக்களித்தோம். இப்போதுள்ள மத்திய அரசும், தமிழகத்தில், திமுக அரசும் நன்றாகத்தான் செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

நிவேதா(பி.ஏ., மாணவி): முதன் முதலாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தது புது அனுபவமாக இருந்தது. நல்லவங்களுக்கு ஓட்டு போட்டிருக்கேன். பாரம்பரியான தேசியக்கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் என்று சிந்தித்து வாக்களித்தேன். அரசு கலைக் கல்லூரியில் படிக்கிறேன். தமிழக அரசின் மகளிருக்கான இலவச பேருந்து திட்டமும், புதுமைப்பெண் திட்டமும் பிடித்திருக்கிறது.

 Interesting facts about who the first generation voted for

வெற்றிவேல் (பி.இ., மாணவர்): 140 கோடி மக்களுக்கான அரசை தேர்ந்தெடுக்கப் போகிறோம் என்ற பொறுப்பை உணர்ந்து எல்லோருமே வாக்களிப்பது அவசியம். வாக்குப்பதிவு குறைவதை தடுக்க, இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தலாம். வெளியூர்களில் வேலைக்குச் சென்றவர்களால் சொந்தஊருக்குச் சென்று வாக்களிக்க முடியாததும் வாக்குப்பதிவு குறைய முக்கிய காரணம். தமிழ்நாட்டில் படித்தவர்கள் அதிகமாக இருந்தும், போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் வெளிமாநிலங்களுக்கு வேலை தேடிச்செல்வது அதிகரித்துள்ளது. அதனால் நம் மாநிலத்திலேயே புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அதற்கு புதிய சிந்தனையுடன் புதியவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். நம்மை நாம்தான் ஆள வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களித்தேன். தமிழ்நாட்டில் இதற்கு முன்பும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தில் இருந்தாலும், இப்போது அதிகமாக புழக்கத்தில் இருக்கிறது. எங்கள்  கல்லூரியில் ஜூனியர் மாணவர்கள்கூட கஞ்சா பயன்படுத்துவதை நேரடியாக பார்த்திருக்கிறேன். இதுவரை ஆட்சியில் இருந்த கட்சிகளுக்கு வாக்களிக்காமல், புதியவர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வாக்களித்திருக்கிறேன். இங்கு எல்லோருக்கும் எல்லாமும் போய்ச் சேருவதில்லை. சாமானியர்களால் எந்தத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை உள்ளது.

 Interesting facts about who the first generation voted for

பிரதீப்குமார் (பி.இ., மாணவர்): வாக்களிப்பது நமது கடமை என்பதால், முதல் தலைமுறை வாக்காளர்கள் கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்பதில் யாரும் தலையிடக்கூடாது என்று என் பெற்றோரிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன். பிறரை குற்றம் சொல்வதை விட, நான் அதிகாரத்திற்கு வந்தால் என்ன செய்யப்போகிறேன் என்று சொல்வதை வைத்து வாக்களித்தேன். இதுவரை மாறி மாறி ஆட்சியில் இருந்தவர்கள் எந்த வகையிலாவது மக்களை ஏமாற்றிக் கொண்டுதான் இருந்துள்ளனர். எனக்கு தேசியக் கட்சிகள் மீது பெரிதாக ஆர்வம் இல்லாததால், மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். மாணவர்களுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்பதை யார் தொடர்ந்து முன்வைத்து வருகிறார்களோ அவர்களுக்கு வாக்களித்தேன். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்கள் மீண்டும் அதிகாரத்திற்கு வருவதை விரும்பவில்லை. அதனால் புதியவருக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

பவித்ரா (பிகாம்., மாணவி): முதல்முறையாக ஓட்டு போட்டபோது நான் கொஞ்சம் பெரிய பொண்ணாகிட்டேன் என்றும், பொறுப்புமிக்க குடிமகள் ஆகிட்டேன் என்ற உணர்வும் ஏற்பட்டது. எனக்கு மட்டுமின்றி, எல்லோருக்கும் நல்லது நடக்க வேண்டும் என்று யோசித்து வாக்களித்தேன். என்னைப்போன்ற இளம் தலைமுறையினருக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும். ஒரே கல்வித் தகுதி இருந்தும் சிலருக்கு முன்னுரிமை கிடைக்கிறது. சிலர், சில காரணங்களால் ஒதுக்கப்படுகின்றனர். இப்படி எந்த விதமான மத, சாதி வேறுபாடுகளும் இருக்கக்கூடாது என்றுயோசித்து வாக்களித்தேன். சாதி, மத வேறுபாடுகளின்றி எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். தமிழக அரசின் பெண்களுக்கு இலவச பேருந்து திட்டம், மாணவ, மாணவிகளுக்கு ஸ்காலர்ஷிப் திட்டங்கள் பிடித்திருக்கிறது. எல்லோருக்கும் இந்த அரசு உணவு கொடுப்பது பிடித்திருக்கிறது. நான் ஒருமாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன்.

 Interesting facts about who the first generation voted for

அக்ஷயா (பி.ஏ., தமிழ்): எனக்கு வாக்காளர் அடையாள அட்டை கிடைத்ததில் இருந்தே முதன் முறையாக வாக்களிக்கப் போவதை எண்ணி ஆர்வமாக இருந்தேன். இந்த நாட்டுக்கு பிரதமரை தேர்ந்தெடுக்க வாக்களிக்கப் போகிறோம் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது. இதுவரை ஆட்சியில் இருக்கும் கட்சிக்குதான் வாக்களித்தேன். அவர்களை ஆதரிப்பதன் மூலம் மேலும் நல்ல திட்டங்கள் கிடைக்கும் என நம்புகிறேன். பெண்களுக்கு இலவச பஸ், மூவலூர் ராமாமிர்தம் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் தருவது மேற்படிப்புக்கு உதவியாக இருக்கிறது. தமிழக அரசு, பெண்களுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறது. பெண்களை ஊக்குவிக்கும் விதமாக மகளிர் உரிமைத் தொகை கொடுப்பதைவரவேற்கிறேன். இதை பிச்சை என்று சிலர் விமர்சிப்பதை ஏற்க முடியாது. நாம் யாரை தேர்ந்தெடுத்தோமோ அவர்கள்தான் நமக்கு உரிமைத் தொகையாக தருகிறார்கள். அதை பிச்சை என்றுசொல்ல முடியாது.

 Interesting facts about who the first generation voted for

சுரேகா (பி.இ., மாணவி): முதல் முறையாக தேர்தலில் வாக்களித்தது மகிழ்ச்சியாக இருக்கு. மக்களுக்கு நல்லது செய்யும் கட்சிக்கு ஓட்டுப் போடும்படி அம்மா சொன்னாங்க. அவர் சொன்ன கட்சிக்கே வாக்களித்தேன். மாநிலக் கட்சிக்குதான் வாக்களித்தேன். இலவச பஸ் திட்டமும், மகளிருக்கு உரிமைத்தொகை திட்டமும் பிடிச்சிருக்கு. குறிப்பாக, பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்த அரசு செயல்படுகிறது.

 Interesting facts about who the first generation voted for

பூஜா மற்றும் ராகுல்: ராஜஸ்தான் மாநிலம்தான் எங்களுடைய பூர்வீகம். தமிழ்நாட்டில் செட்டில் ஆகிவிட்டோம். நாங்கள் பிறந்தது, படித்தது எல்லாம் இங்குதான். எங்கள் மாநிலத்தை விட தமிழ்நாட்டு கலாச்சாரமும், உணவும் பிடித்திருக்கிறது. ஆனாலும் நாங்கள் தேசியக்கட்சிக்குதான் வாக்களித்தோம். இவ்வாறு இளம் தலைமுறை வாக்காளர்கள் தங்கள் அனுபவங்களையும், கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.

Next Story

2 வருட காதல்... இளைஞர் எடுத்த விபரீத முடிவு - சேலத்தில் பரபரப்பு

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Boyfriend lost their life because girlfriend's marriage was arranged with someone else

சேலம் மாவட்டம் அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ்(27). இவர் அதே பகுதி சேர்ந்த இளம் பெண் ஒருவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இதுகுறித்து  கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ் தனது வீட்டு பெரியவர்களின் மூலம் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து முதலில் வீட்டை கட்டி முடியுங்கள், பிறகு திருமணத்தை பார்த்துக் கொள்ளலாம் எனக் கூறப்படுகிறது.

இதையடுத்து வீடுகட்டும் பணியில் பிரகாஷ் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில் அந்தப் பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள்  வேறு இடத்தில் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பிரகாஷ் தனது பெற்றோரிடம் பெண்ணின் வீட்டில் சென்று மீண்டும் திருமணத்திற்கு பேசுமாறு கூறியிருக்கிறார். ஆனால் அவரது பெற்றோர் அதனை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று காலதாமதம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விரக்தி அடைந்த பிரகாஷ் நேற்று முன்தினம் விஷம் அருந்தி மயங்கி கிடந்துள்ளார். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் பிரகாஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.