கருப்பு பூஞ்சை நோய்க்கான சிறப்பு தனிப்பிரிவு 24 மணி நேரமும் செயல்படும் – டீன் வனிதா அறிவிப்பு!

Special Unit for Black Fungus 24 Hours - Dean Vanitha Announcement

கரோனா நோய் தொற்றுக்குப் பிறகு சர்க்கரை வியாதி உள்ளவா்களையும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவா்களையும் கருப்பு பூஞ்சை நோய் தாக்குவதாக மருத்துவா்கள் தெரிவித்துள்ளனா். இந்நோய் குறித்த விளக்கங்களைஇன்று (28.06.2021) திருச்சி அரசு தலைமை மருத்துவமனை டீன் வனிதா உள்ளிட்ட மருத்துவா்கள் குழு கூறுகையில், கரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்டவா்களுக்கு கொடுக்கப்படும் ஸ்டீராய்டு மருந்துகளால் இந்தப் பூஞ்சை அதிகளவில் பரவ ஆரம்பிப்பதாக தெரிவித்துள்ளனா். எனவே தமிழ்நாடு அரசு இந்த நோயை அறிவிக்கத்தக்க நோயாக கடந்த மே 20ஆம் தேதி அறிவித்துள்ளது.

எனவே இந்நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கும் உடனடியாக சிகிச்சை வழங்க திருச்சி அரசு மருத்துவமனையில் 100 படுக்கை வசதியுள்ள தனியான வார்டு பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இந்நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் அறுவை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்குத் தனியாக அமைக்கப்பட்டு, பொது மருத்துவா், முதுகலை மருத்துவர், செவிலியா்கள் என 4 சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பணியமர்த்தபட்டுள்ளனா். மேலும், அறுவை சிகிச்சைக்கான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய அறுவை சிகிச்சை கூடம் தனியாக அமைக்கப்பட்டுள்ளது. மருந்தியல் மருத்துவா்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனா். கண், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணா்களும், பல் மருத்துவா்களும், நுண்ணுயிரியல் வல்லுநா்களும் தற்போது பணியாற்றிவருகின்றனா்.

ஆம்போடெரிசன் – பி என்ற ஊசி மற்றும் போசகானசோல் என்ற மாத்திரையும் மருந்துகளாக பயன்படுத்தப்படுகிறது. இதுவரை கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு 82 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அதில் 27 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மேலும் 46 பேருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, பூஞ்சை அகற்றப்பட்டுள்ளது. 30 பேர் தற்போது சிகிச்சை பெற்றுவருகின்றனா். எனவே இந்த நோயைக் கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டுவருவதாகவும், அதற்கான உயா்தர சிகிச்சை நம்மிடம் உள்ளதாகவும்திருச்சி அரசு மருத்துவா்கள் குழு தெரிவித்துள்ளனா்.

black fungus Treatment trichy
இதையும் படியுங்கள்
Subscribe