Special permit to serve liquor at public event; Fixation of fees

திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை அருந்தலாம் என தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரின் அனுமதியை பெற்று, மதுவிலக்கு துணை ஆணையர் சிறப்பு அனுமதி வழங்கலாம் என தமிழக அரசு இதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Advertisment

தமிழக அரசின் உள்துறை செயலாளர் பணிந்தர் ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'திருமண மண்டபங்கள் விளையாட்டு, மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை அருந்தலாம். மாவட்ட ஆட்சியரும், துணை ஆணையர்கள் இதற்கான அனுமதியை வழங்குவார்கள். பி.எல் 2எனும் சட்டத்தின் சிறப்பு அனுமதி பெற்று மதுபானங்களை திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பரிமாறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இதனால் டாஸ்மாக்கை தவிர பார்கள் மற்றும் நட்சத்திர விடுதிகளில் வழங்கப்பட்டு வந்த மதுபானங்கள் இனி திருமணங்கள் மற்றும் விளையாட்டு கூடங்களிலும் பயன்படுத்த ஏதுவாக இருக்கிறது. இந்த அறிவிப்பு தொடர்பான கட்டுப்பாடுகளில் அந்தந்த பகுதியில் உள்ள காவல்துறையினர் தேவைப்படும் பட்சத்தில் கண்காணிக்கலாம் எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த அனுமதியைப் பெற மாநகராட்சி, நகராட்சி, ஊரக பகுதிகளுக்கு என தனித்தனி கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்களில் மதுவை அனுமதிக்க வைப்பு தொகையாக ஒரு லட்சம் ரூபாயும், ஒரு நாள் பயன்பாட்டுக்கு 11 ஆயிரம் ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகராட்சி பகுதிகளில் வைப்புத் தொகையாக 75 ஆயிரம் ரூபாயும், ஒரு நாள் பயன்பாட்டுக்கு 7,500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஊரக பகுதிகளில் வைப்பு தொகையாக 50,000 ரூபாயும், ஒருநாள் கட்டணம் 5000 ரூபாயும் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வீடுகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் மதுபானங்களை பரிமாறவும் சிறப்பு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் நாளில் இருந்து ஒரு வாரத்திற்கு முன்பு இணைய வழியில் விண்ணப்பித்து இந்த சிறப்பு அனுமதியை பெற வேண்டும் என அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment