
திருச்சி கீழப்புலிவார் ரோடு, வி.என்.நகரில் அரசினர் கூர்நோக்கு இல்லம் உள்ளது. இங்கு குற்றச்செயலில் ஈடுபடும் சிறுவர்கள், சிறுமிகள் தங்க வைக்கப்படுகிறார்கள். இந்நிலையில் கூர்நோக்கு இல்லத்தில் இருந்த 16 வயதுடைய நான்கு சிறுவர்கள் நேற்று இரவு தப்பியுள்ளனர்.
இதனையடுத்து கூர் நோக்கு இல்லத்தின் பணியாளர் ராஜேஷ் கோட்டை காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில், காப்பக வார்டன் நேற்று இரவு சாப்பிட்டு கொண்டிருக்கும்போது அவரது கையில் இருந்த சாவியை பிடுங்கி கொண்டு ஒடிசா மாநிலம், ரய்டா காந்தி நகரை சேர்ந்த 16 வயது சிறுவன், ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி காந்தி நகரை சேர்ந்த 16 வயது சிறுவன், காஞ்சிபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்த 16 வயது சிறுவன், புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஆகியோர் நேற்று கூர் நோக்கு இல்லத்தில் இருந்து தப்பினர். கூர்நோக்கு இல்ல அலுவலர்கள் இவர்களை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூர்நோக்கு இல்லத்தின் பணியாளர் ராஜேஷ் கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் சிவராமன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தப்பி ஓடிய சிறுவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.