Skip to main content

“சிறப்பு டிஜிபி வழக்கில் நியாயமாகவும், நேர்மையாகவும் விசாரணை நடைபெற வேண்டும்” - நீதிபதி

Published on 21/04/2021 | Edited on 21/04/2021
Special DGP case should be investigated fairly and honestly

 

பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிறப்பு டிஜிபிக்கு எதிரான வழக்கை சிபிசிஐடி விசாரணை செய்து வருகிறது. இந்நிலையில், ஐபிஎஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்டுள்ளதால், இந்த வழக்கை சிபிஐ'க்கு மாற்றக் கோரி, சென்னை அண்ணா நகரை சேர்ந்த ஓய்வுபெற்ற காவல்துறை கூடுதல் எஸ்.பி.-யான கே.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த புகார் விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து வழக்கை எடுத்து, விசாரணையை கண்காணித்து வருவதாகவும், சிறப்பு டிஜிபி-க்கு எதிரான விசாரணையின் முன்னேற்றம் குறித்து அறிக்கை தாக்கல் செய்து வருவதாகவும் தெரிவித்தார். அந்த வழக்கு ஏப்ரல் 30ஆம் தேதி தள்ளிவைக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். 

 

இதற்கிடையில் பெண் எஸ்பி அளித்த புகாரில் விசாரணை மேற்கொண்ட உட்புகார் விசாரணை குழு, அதன் அறிக்கையை அரசிடம் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். அப்போது சிறப்பு டிஜிபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், உட்புகார் விசாரணைக் குழுவின் விசாரணைக்கும், சிபிசிஐடி விசாரணைக்கும் நேரில் ஆஜராகி முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், இந்த விவகாரம் தொடர்பாக நடைபெறும் விசாரணையை தனி நீதிபதி கண்காணித்து வருவதால், மேற்கொண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதற்கு அவசியம் இல்லை எனக் கூறி மனுவை முடித்து வைத்தார்.

 

மேலும், நீதிமன்றத்தின் இந்த உத்தரவு சிறப்பு டிஜிபிக்கு மீதான விசாரணையில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் தெளிவுபடுத்தியுள்ளனர். அதேபோல நியாயமாகவும் நேர்மையாகவும் விசாரணை நடைபெற வேண்டுமென தெரிவித்துள்ள நீதிபதிகள், ஒருதலைப்பட்சமாக முடிவெடுக்கக் கூடாது என்றும் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். 

 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

ராஜேஷ் தாஸ் குற்றவாளி! சரணா? கைதா? - இறுதிக்கட்டத்தில் பாலியல் வழக்கு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Police are serious to arrest the accused Rajesh Das

கடந்த அதிமுக ஆட்சியில் சிறப்பு டிஜிபியாக இருந்தவர் ராஜேஷ் தாஸ். அவர், அப்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் டெல்டா மாவட்ட சுற்றுப்பயணத்தை கவனித்துக் கொண்டார். அப்போதைய முதல்வருடன் டெல்டா மாவட்டத்துக்கு பாதுகாப்பு பணியை மேற்கொள்ள ராஜேஷ் தாஸ் உடன் சென்றிருந்தார். அப்போது, மரியாதை நிமித்தமாக டெல்டா மாவட்டத்தில் பணியாற்றிய பெண் எஸ்.பி ஒருவர் ராஜேஷ் தாஸை சந்தித்துள்ளார். ஆனால், அதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ராஜேஷ் தாஸ் காரில் வைத்து பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதைச் சற்றும் எதிர்பாராத அந்த பெண் எஸ்பி புகார் அளிக்க சென்னை சென்றார். அப்போது, வழியில் மறித்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி கண்ணன் ராஜேஷ் தாஸுக்கு ஆதரவாக சமாதானம் பேசி பெண் எஸ்பியிடம் கட்டப் பஞ்சாயத்து செய்துள்ளார். இப்படி, பல மிரட்டலையும் மீறி பாலியல் தொல்லைக்கு ஆட்பட்ட பெண் எஸ்பி, அப்போதைய டிஜிபி திரிபாதியைச் சந்தித்து தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து துணிச்சலுடன் புகார் அளித்தார். இதையடுத்து, ராஜேஷ் தாஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு அவர் சஸ்பெண்டும் செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கில் ராஜேஷ் தாஸுக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனையும் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில், பாதிக்கப்பட்ட பெண் எஸ்பியை தடுத்து புகார் அளிக்க இடையூறு செய்த அப்போதைய செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றமும் ராஜேஷ் தாஸுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பை உறுதி செய்தது. ஆனால், ராஜேஷ் தாஸ் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும், சரணடைவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், காவல்துறையினர் குடிமக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். ஆனால், ராஜேஷ் தாஸ் காவல்துறையின் கண்ணியத்தைக் குலைக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார். இதன் காரணமாக, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இதனால், ராஜேஷ் தாஸ் சிறை செல்வது உறுதியானது. இதையடுத்து, வழக்கை விசாரணை செய்து வந்த சிபிசிஐடி போலீஸார் பாலியல் குற்றவாளி ராஜேஷ் தாஸை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, தண்டனை தீர்ப்பு உறுதியான பிறகு ராஜேஷ் தாஸ் வடமாநிலங்களில் தலைமறைவாக இருந்ததாக சொல்லப்பட்டது. அவரை பிடிக்க போலீசார் அங்கு விரைந்தனர். ஆனால், அதற்குள் ராஜேஷ் தாஸ் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால் அவரைப் பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது தண்டனை உறுதியானதால் ராஜேஷ் தாஸ் எங்கு இருக்கிறார் என்று தனிப்படை போலீஸார் விசாரணை செய்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ராஜேஷ் தாஸ் நீதிமன்றத்தில் சரண் அடையலாம் என்றும், அப்படி இல்லை என்றால் உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து, ராஜேஷ் தாஸ் வழக்கு குறித்து சட்ட நிபுணர்களுடனும், காவல்துறை உயரதிகாரிகளுடனும் தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து, போலீசாரின் தேடுதல் வேட்டை தீவிரமடைந்திருப்பதால் ராஜேஷ் தாஸ் தலைமறைவாக இருந்தாலும், கைது செய்யப்படுவார் என சிபிசிஐடி காவல் துறையினர் தகவல் தெரிவிக்கின்றனர்.

Next Story

‘ராஜேஷ் தாஸ் மனு தள்ளுபடி’ - உயர்நீதிமன்றம் அதிரடி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Rajesh Das petition dismissed High Court in action

தமிழக சிறப்பு டி.ஜி.பி. பொறுப்பில் இருந்த ராஜேஷ் தாஸ், கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியின் சுற்றுப் பயணத்தின் போது பெண் எஸ்.பி.யை தமது காரில் அழைத்துச் செல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறி சம்பந்தப்பட்ட அப்பெண் எஸ்.பி. அப்போதைய தலைமைச் செயலாளரிடம் புகார் அளித்திருந்தார். இந்த சம்பவம் தமிழக போலீசார் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கை தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதையடுத்து இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு தமிழக அரசு மாற்றம் செய்தது. அதன் பின்னர் ராஜேஷ் தாஸ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணன் ஆகியோர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனடிப்படையில் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்ப ராணி முன்னிலையில் நடந்து வந்த இந்த வழக்கில் கடந்த ஆண்டு (16.06.2023)  தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தத் தீர்ப்பில், ராஜேஷ் தாஸ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதோடு, அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி புஷ்ப ராணி உத்தரவிட்டிருந்தார்.

இந்த தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தாஸ் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் கீழமை நீதிமன்றம் விதித்த 3 ஆண்டு சிறைத்தண்டனையை விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்திருந்தது. அதனைத் தொடர்ந்து ராஜேஸ் தாஸ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில், “தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (23.04.2024) மீண்டும் நீதிபதி தண்டபானி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ராஜேஷ்தாஸ் சரணடைய விலக்களிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததுடன் இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.