கரோனா தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் மே 10 ஆம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு இன்று (08/05/2021) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழகத்தில் மே 10ஆம் தேதி காலை 04.00 மணிமுதல் மே 24ஆம் தேதி காலை 04.00 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது. மளிகை, பலசரக்குகள், காய்கறி, இறைச்சி, மீன் விற்பனை கடைகள் ஆகியவை மதியம் 12.00 மணி வரை செயல்படும். இதைத் தவிர பிற கடைகள் இயங்க அனுமதி இல்லை. தேநீர் கடைகள் நண்பகல் 12.00 மணிவரை செயல்படலாம். அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை. காய்கறி மற்றும் பூ விற்பனை செய்யும் நடைப்பாதை கடைகள் நண்பகல் 12.00 மணி வரை அனுமதிக்கப்படும்.
இன்றும், நாளையும் அனைத்துக் கடைகள், நிறுவனங்கள் இரவு 09.00 மணிவரை இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது. மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை மாவட்டங்களுக்குள்ளும் மாவட்டங்களுக்கு இடையேயுமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்றும், நாளையும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. பயணிகள் வசதிக்காக இன்றும் நாளையும் சென்னை உள்ளிட்ட நகரங்களில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட இருக்கிறது. குறிப்பாக சென்னையில் இருந்து மற்ற ஊர்களுக்கும், முக்கிய நகரங்களுக்குமிடையே பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சிறப்புப் பேருந்துகளில் பயணிக்கும் மக்கள் அரசின் கரோனா தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றி பயணிக்க வேண்டும் என அறிவுத்தப்பட்டுள்ளது.