Special buses run to Velankanni

வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழாவை முன்னிட்டு சிறப்புப்பேருந்துகள் இயக்கப்படும் என அரசுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

Advertisment

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழா வருடந்தோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவிற்குத்தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் மேலாண் இயக்குநர் மோகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா ஆண்டு திருவிழாவை முன்னிட்டு 28.08.2023 முதல் 09.09.2023 வரை சென்னை, திண்டுக்கல், மதுரை, திருச்சி, மணப்பாறை, தஞ்சாவூர், கும்பகோணம், பூண்டி மாதா கோவில், ஒரியூர், சிதம்பரம், புதுச்சேரி, மயிலாடுதுறை, பட்டுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், நாகூர் காரைக்கால் ஆகிய முக்கிய ஊர்களிலிருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.

Advertisment

அதேபோன்று மேற்கண்ட ஊர்களிலிருந்து வரும் பக்தர்கள் திரும்பச் செல்ல வேளாங்கண்ணியில் இருந்தும் 28.08.2023 முதல் 09.09.2023 வரை இரவு மற்றும் பகல் என எந்நேரமும் சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டம் சார்பாக இயக்கப்பட உள்ளது. மேற்கண்ட ஊர்களின் பேருந்து நிலையங்களிலும், வேளாங்கண்ணி பேருந்து நிலையத்திலும் பயணிகள் வசதிக்காக சேவை மையங்கள் இரவு, பகலாகச் செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சேவை மையங்களில் சிறப்பு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு பணிபுரிய உள்ளனர். எனவே இச்சிறப்பு பேருந்து சேவையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளக் கேட்டுக்கொள்கிறோம்” எனத்தெரிவித்துள்ளார்.