உலகம் முழுவதும் இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி சார்பில் மாற்றுத்திறனாளிகள் கடலுக்கு அருகில் சென்று அலைகளை ரசிப்பதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட மணலில் செல்லக்கூடிய சக்கர நாற்காலிகள் மெரினாவில் வைக்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக இன்றைய தினம் சாலையில் இருந்து கடல் வரை சிறப்பு பாதை அமைக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் இருக்கக்கூடிய இந்த பாதையை பயன்படுத்தி மாற்றுத்திறனாளிகள் எளிதாக கடல் அருகில் சென்று அலைகளில் நனைந்து மகிழ்ந்தனர். மாநகராட்சியுடன் இணைந்து தொண்டு நிறுவனங்களின் தன்னார்வலர்களும் அவர்களுக்கு உதவி செய்தனர்.