Skip to main content

காவலர் கன்னத்தில் அறைந்த எஸ்பி! உயரதிகாரிகளின் மிரட்டலால் புகாரை வாபஸ் பெற்றாரா?

Published on 09/08/2022 | Edited on 09/08/2022

 

SP who slapped the guard on the cheek! Did he withdraw the complaint due to intimidation by higher authorities?

 

சேலம் அருகே, உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி, ரேஷன் அரிசி கடத்திச் சென்ற வாகனத்தைப் பிடிக்காத காவலரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எஸ்பி மீதான புகாரை வாபஸ் பெறும்படி அந்தக் காவலர் மிரட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

 

கோவை மண்டல உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்பி பாலாஜி. இவர், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில், உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவின் செயல்பாடுகள் குறித்து ஆக. 7ம் தேதி ஆய்வு செய்தார். ஆய்வுப் பணிகளை முடித்துவிட்டு, சேலத்தில் இருந்து கோவைக்கு காரில் கிளம்பினார். சேலத்தை அடுத்த காகாபாளையம் பகுதியில் சென்றபோது, இருசக்கர வாகனத்தில் ஒருவர் ரேஷன் அரிசி மூட்டைகளுடன் சென்று கொண்டிருந்தார்.

 

அதை கவனித்துவிட்ட எஸ்பி பாலாஜி, இருசக்கர வாகனத்தில் சென்றவரை காரில் விரட்டிச் சென்றார். அப்போது, காகாபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே கொண்டலாம்பட்டி ரோந்து வாகன சிறப்பு எஸ்ஐ அந்தோணி, ஓட்டுநர் சிவகுமார் ஆகியோர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

 

ரேஷன் அரிசி கடத்தியவர், வாகனத் தணிக்கையின்போது சிக்கிக் கொள்வோம் என பயந்து, அங்குள்ள மண் சாலை வழியாக தப்பிச்செல்ல முயன்றார். அப்போது எஸ்பி பாலாஜி, ரோந்து வாகன ஓட்டுநரான காவலர் சிவகுமாரிடம் ரேஷன் அரிசி கடத்தல் வாகனத்தை மடக்கிப் பிடிக்கும்படி கூறினார்.

 

அப்போது அவர், வாகனத்தை துரத்திப் பிடித்தால் அவர்கள் தாக்குவார்கள் என தெரிவித்ததோடு, வாகனத்தை பிடிக்கச் செல்லாமல் அங்கேயே நின்றார். இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்பி பாலாஜி, ரோந்து வாகனத்தை ஓட்டுநர் சிவகுமாரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.

 

இந்த களேபரத்தில், ரேஷன் அரிசி கடத்திய நபர், தப்பிச் சென்றுவிட்டார்.

 

இதற்கிடையே, காவலரை எஸ்பி அறைந்த சம்பவம் சேலம் மாநகர காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

காவலர் சிவகுமார் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து, சேலம் மாநகர தெற்கு துணை ஆணையர் லாவண்யா விசாரணை நடத்தினார். அப்போது சிவகுமார், தன்னை அறைந்த எஸ்பி மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று எழுதி கொடுத்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து, இந்த சம்பவத்தின் பரபரப்பு சற்று அடங்கியது.

 

என்றாலும், பாதிக்கப்பட்ட காவலர் முதலில் எஸ்பி மீது எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்ததாகவும், பின்னர் அவர் மிரட்டப்பட்டதால் புகாரை திரும்பப் பெற்றதாகவும் காவல்துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதேநேரம், சம்பந்தப்பட்ட எஸ்பியே அந்தக் காவலரிடம் மன்னிப்பு கேட்டதாகவும், அதன்பிறகுதான் எப்ஐஆர் பதிவு செய்ய வேண்டாம் என்று காவலர் கேட்டுக் கொண்டதாகவும் சொல்கின்றனர்.

 

காவல்துறை உயர் அதிகாரி ஒருவர், தன் கட்டுப்பாட்டின் கீழ் இல்லாத ஒரு காவலரிடம் வரம்பு மீறி நடந்து கொண்டதற்கு காவல்துறை வட்டாரத்திலும் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

நொடிப்பொழுதில் நிகழ்ந்த மரணம்! வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Youth passed away after falling into water tank in Hyderabad

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அருகே அமைந்துள்ளது கஜ்ஜிபவுலி. இப்பகுதியில் உள்ள தனியார் விடுதியில் வசித்து வந்தவர் ஷேக் அக்மல் சுபியான். 24 வயதான ஷேக் அக்மல் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவர், பணி செய்வதற்கு ஏதுவாக வேலை செய்யும் ஐடி நிறுவனம் அருகிலேயே தனியார் விடுதியில் தங்கியிருந்துள்ளர்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி விடுமுறை என்பதால் ஷேக் அக்மல் விடுதி அருகில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார். தேவையானதை வாங்கி முடித்தவர் மீண்டும் தனது விடுதிக்கு திரும்பியுள்ளார். அப்போது, அவர் தங்கியிருந்த விடுதியின் கேட் அருகே தண்ணீர் தொட்டி திறந்து கிடந்துள்ளது. ஆனால், அதனைக் கவனிக்காமல் சென்ற ஷேக் அக்மல், விடுதி வாசல் அருகே திறந்து வைக்கப்பட்டு இருந்த தண்ணீர் தொட்டில் தவறி விழுந்துள்ளார். நொடி பொழுதில் எதிர்பாராமல் தண்ணீர் தொட்டியில் விழுந்த வேகத்தில் ஷேக் அக்மல் சுபியானின் முக நாடிப் பகுதி தண்ணீர் தொட்டியின் கான்கீரிட் மீது பலமாக மோதி உடைந்தது. அதில், ரத்தம் கொட்டி மயக்க நிலையில் அவர் தண்ணீர் தொட்டியினுள் மூழ்கியதாக கூறப்படுகிறது. இதனை யாரும் கவனிக்காத நிலையில், இளைஞர் கீழே விழுந்த சத்தம் வீட்டின் உள்ளே இருந்த சிறுவனுக்கு மட்டும் கேட்டுள்ளது. சத்தம் கேட்ட அந்தச் சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததை விட்டுவிட்டு விடுதி பொறுப்பாளரிடம் கூறுயுள்ளார். அப்போது, விடுதி வாசலுக்கு வந்தவர், திறந்துக்கிடந்த தண்ணீர் தொட்டிக்குள் யாரேனும் உள்ளனரா எனத் தேடிப்பார்த்துள்ளார்.

ஆனால், யாரும் தென்படாத நிலையில், தனது வழக்கமான பணிகளை மேற்கொள்ள அவர் சென்றுவிட்டார். அதன் பிறகு அங்கிருந்தவர்களும் தங்களது பணிகளை மேற்கொள்ள சென்றுவிட்டனர் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, மாலை நேரத்தில் ஷேக் அக்மல் காணவில்லை என்ற தகவல் விடுதி காப்பாளருக்குச் சென்றுள்ளது. அவர், விடுதியின் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அப்போதுதான் நடந்த அதிர்ச்சி சம்பவம் அனைவருக்கும் தெரிய வந்தது. கடைசியாக கடைக்குச் சென்று திரும்பிய ஷேக் அக்மல் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த காட்சிகள் சிசிடிசியில் பதிவிவாகி இருந்தது. இதைப்பார்த்து அதிர்ந்து போன விடுதி காப்பாளர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த  ஷேக் அக்மலினை மீட்டனர். ஆனால், அவர் இறுதியில் சடலமாகவே மீட்கப்பட்டார். இதையடுத்து, நடந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஷேக் அக்மல் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதனிடையே, ஷேக் அக்மல் தவறி விழும் சிசிடிசி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி  வருகிறது. அதில், ஷேக் அக்மல் தவறி விழுவதும், உடனே சத்தம் கேட்டு குழந்தை விடுதி பொறுப்பாளரை எச்சரிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. ஆனால், விடுதி பொறுப்பாளர் தேடிப்பார்த்தும் யாரும் உள்ளே விழுந்தது போல தெரியாததால் அவர் மற்ற பணிகளைச் செய்வதும் தெரிய வந்துள்ளது. இதற்கிடையில், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் துவங்கிய போலீசார் அஜாக்கிரதையாக தண்ணீர் தொட்டியைத் திறந்து வைத்த விடுதி உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இளைஞர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹைதராபாத் அருகே வீட்டின் தண்ணீர் தொட்டியில் விழுந்த ஐடி ஊழியர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.