நேற்று முன்தினம் (10/08/2021) காலைமுதல் அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு சொந்தமான இடங்கள், அலுவலகங்கள்மற்றும் அவருக்கு நெருக்கமான சிலருக்கு சொந்தமான இடங்கள் உள்ளிட்ட 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தினர். கோவையில் 42 இடங்களிலும், சென்னையில் 16 இடங்களிலும், திண்டுக்கல், காஞ்சிபுரத்தில் தலா ஒரு இடத்திலும் இந்த சோதனை நடைபெற்றது. இதில் குனியமுத்தூரில் உள்ள எஸ்.பி. வேலுமணியின் வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நிறைவடைந்தது.
அதனையடுத்து கோவை பீளமேட்டில் உள்ள கேசிபிநிறுவனத்தில் இரண்டாவது நாளாக நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தினர். மொத்தம் 3 தளங்களைக் கொண்ட அந்த நிறுவனத்தின் 2 தளங்களில் நேற்று முன்தினம் சோதனை நடைபெற்றநிலையில், மீதம் உள்ள தளத்தில் நேற்று சோதனை நடைபெற்றது. பச்சாம்பாளையம், கவுண்டம்பாளையம் ஆகிய மேலும் இரண்டு இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்ட நிலையில்,2 கேபிசி நிறுவனங்கள், விஎஸ்ஐ சாண்ட்ஸ் என மொத்தமாக மூன்று இடங்களில் நேற்று சோதனை நடைபெற்றது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கையாக முன்னாள் அமைச்சர் வேலுமணியின் வங்கிக் கணக்கு மற்றும் வங்கி லாக்கர்கள் முடக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக வங்கிக்கு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடிதம் எழுதியிருந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுமட்டுமில்லாமல் அவரது சொத்து ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் லஞ்ச ஒழிப்புத்துறை ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுகமுன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு தொடர்புடைய இடங்களிலிருந்து ரூபாய் 13.08 லட்சம் ரூபாய் மற்றும் நிலம் வாங்கியதற்கான ஆவணங்கள், தொழில் நிறுவனங்களின் பரிவர்த்தனை ஆவணங்கள், ரூபாய் 2 கோடிக்கான வைப்புத்தொகை ஆவணம், மாநகராட்சி தொடர்பான ஆவணங்கள், ஹார்டு டிஸ்குகள், முறைகேடு செய்ததற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகலஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.