southern railway description about pregnant woman falling in train incident 

சென்னையில் இருந்து தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு வளைகாப்பிற்காக கடந்த வாரம் கொல்லம் விரைவு ரயிலில் சென்னையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி கஸ்தூரி (வயது 21) என்ற பெண் பயணித்துள்ளார். இவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவர் பயணித்த ரயில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே சென்று கொண்டிருந்த போது கஸ்தூரிக்கு வாந்தி வந்ததால் காற்றோட்டமாக ரயிலின் கதவு ஓரத்தில் நின்று வாந்தி எடுக்க முற்பட்டபோது ரயிலில் இருந்து தவறி விழுந்தாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரது உறவினர்கள் ரயிலின் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்த முயற்சித்தபோது அபாய சங்கிலி வேலை செய்யவில்லை என்றும், இதனால் சுமார் 10 நிமிடங்கள் கழித்து 8 கி.மீ. தூரம் தள்ளிச் சென்று ரயில் நின்றது எனவும் கூறப்பட்டது. ரயில் நின்ற இடத்திலிருந்து பின்னோக்கி வந்து கர்ப்பிணியை அவரது உறவினர்கள் தேடியுள்ளனர். அதன் பின்னர் சுமார் 2 மணி நேர தேடலுக்குப் பின் உளுந்தூர்பேட்டை அருகே கர்ப்பிணி கஸ்தூரி சடலமாக மீட்கப்பட்டார். கடந்த 5 ஆம் தேதி (05.05.2024) வளைகாப்பு நடக்க இருந்த நிலையில் கர்ப்பிணி தவறி விழுந்து உயிரிழந்தது அவரது உறவினர்களிடம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருந்தது. அதே சமயம் ரயிலில் அபாய சங்கிலி வேலை செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கப்படும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

southern railway description about pregnant woman falling in train incident

Advertisment

இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து தெற்கு ரயில்வே சார்பில் விளக்க அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், “கர்ப்பிணி பெண் பயணித்த கொல்லம் ரயிலில் உள்ள 17 பெட்டிகளையும் தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு செய்தனர். அதில் அனைத்து அபாய சங்கிலிகளும் வேலை செய்துள்ளது. ஆகவே விரைவு ரயிலில் கர்ப்பிணி பயணித்த எஸ் 9 உட்பட அனைத்து பெட்டிகளிலும் அபாய சங்கிலி செயல்படும் நிலையிலேயே இருந்ததுள்ளது என்பதை ஆய்வு குழுவினர் உறுதி செய்துள்ளனர். சம்பவம் நிகழ்ந்த போது அபாய சங்கிலியை முறையான அழுத்தத்துடன் இழுத்திருந்தால் ரயில் நின்றிருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.