Skip to main content

ரயில்களை இயக்க தயாராகும் தென்னக ரயில்வே!

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

SOUTH RAILWAY DECISION LOCKDOWN TRAINS


உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலபடுத்தப்பட்டுள்ளது. 

ஊரங்கால் இந்தியா முழுவதும் ரயில், விமானம், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் அடியோடு நிறுத்தப்பட்டது. ஊரடங்கிற்கு முன்பு ரயில் முன்பதிவு செய்தவர்களுக்கு முழு பணமும் திரும்பக் கொடுக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில் இந்திய ரயில்வே துறைக்குக் கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இது மத்திய அரசுக்குப் பொருளாதார ரீதியாகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 


ரயில்வேயில் பெரும்பாலான ஊழியர்கள் ஓய்வில் உள்ளனர். அத்தியாவசியப் பொருட்கள் கொண்டு செல்லும் சிறப்பு பார்சல் ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. சென்னையில் இருந்து திருச்சி வழியாக நாகர்கோவிலுக்கும், நாகர்கோவிலில் இருந்து திருச்சி, தஞ்சை, திருவாரூர், கும்பகோணம், விழுப்புரம் வழியாகச் சென்னைக்கும் எனத் தினந்தோறும் சிறப்பு பார்சல் ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்களில் தேவையான மருந்துகள், ரயில்வே ஊழியர்கள், பார்சல்கள் என முக்கியமானவைகள் கொண்டு செல்லப்படுகிறது.

ஏற்கனவே அமலில் உள்ள ஊரடங்கை மே மாதம் 17- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதற்கிடையே ஊரடங்கை நீட்டித்தாலும் ரயில்களைச் சமூக விலகல் இடைவெளியைக் கடைப்பிடித்து இயங்கச் செய்யலாம் என்ற முடிவை மத்திய அரசு எடுத்துள்ளதாகத் தகவல் கூறுகின்றனர். 

 

 

அதற்கு முன்னேற்பாடாகச் சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தெற்கு ரெயில்வே, தனது கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டிருக்கிறது.

 

http://onelink.to/nknapp


இது தொடர்பாக திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட அனைத்து ரயில்வே கோட்டங்களுக்கும் அறிவிப்பு கொடுத்துள்ளனர். மேலும் ரயில் நிலையங்களில் டிக்கெட் எடுத்துக் கொண்டு வரிசையில் வரும் பயணிகள் 6 அடி இடைவெளி விட்டு பிளாட்பாரம் வரும் வகையில், திருச்சி ஜங்சன் ரெயில் நிலையத்தில் அடையாளக் குறியீடுகள் போட்டுள்ளனர்.

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளை வைத்து ரயில்களை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தென்னக ரயில்வே துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, "நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே- 17 ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டிப்பு செய்துள்ளதால், ஊரடங்கு முடியும் வரை எந்த வித ரயில்களும் இயக்கப்படாது" என தெரிவித்துள்ளனர். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

60 சிறப்பு ரயில்கள் - தெற்கு ரயில்வே அறிவிப்பு

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

nn

 

தீபாவளி பண்டிகைக்காக 60 சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

 

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க மொத்தம் 12 வழித்தடங்களில் 60 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. சென்னை, நெல்லை, நாகர்கோவில், கோவை, மங்களூர், பெங்களூரு, கொச்சுவேலி உள்ளிட்ட இடங்களுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

 

சென்னையிலிருந்து நாகர்கோவில், நெல்லை நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. கொச்சுவேலியில் இருந்து பெங்களூரு, சென்னையிலிருந்து சந்திரகாச்சி, சென்னையிலிருந்து புவனேஸ்வர், நாகர்கோவிலில் இருந்து பெங்களூர் ஆகிய இடங்களுக்குச் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது.

 

தாம்பரத்திலிருந்து நாகர்கோவில் இடையே நவம்பர் 10, 17, 24 தேதிகளில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. நவம்பர் 11, 18, 25 ஆகிய தேதிகளில் நாகர்கோவிலில் இருந்து மங்களூருக்கு இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. நாகர்கோவிலில் இருந்து மங்களூர், எர்ணாகுளத்தில் இருந்து தன்பாத் இடையே சிறப்பு ரயில்களும் இயக்கப்பட உள்ளன.

 

தீபாவளி பண்டிகையை ஒட்டி தெற்கு ரயில்வே மட்டுமின்றி மற்ற ரயில்வே மண்டலங்களிலிருந்தும் தென்னிந்தியாவிற்கு 36 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட இருக்கிறது. அதேபோல் சென்னையிலிருந்து நெல்லை இடையே நாளை வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.