தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு புதிதாக தேர்தல் நடத்தத் தடையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த ஆண்டு, ஜூன் 23-ம் தேதி, தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில், தபால் ஓட்டுக்களைப் போட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.கல்யாணசுந்தரம், தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். நடிகர் சங்க நிர்வாகிகள், பதவி காலம் முடிந்த பின்பு எடுத்த எந்த முடிவுகளும் செல்லாது என அறிவித்தார்.
நடிகர் சங்கத்திற்கான மறு தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்து, மூன்று மாதத்திற்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார். வாக்காளர் பட்டியல் சரிபார்க்கப்பட வேண்டும் என்றும், அதுவரை நடிகர் சங்க நிர்வாகத்தை தனி அதிகாரி கவனிப்பார் எனவும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கை நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் விசாரித்தனர். அப்போது, தனி நீதிபதி தீர்ப்புக்கு தடை விதிக்க நீதிபதிகள் மறுத்து விட்டனர்.
நடிகர் சங்கத் தேர்தலுக்கு மீண்டும் தேர்தல் நடத்தும் நடைமுறைகளை மேற்கொள்ள அனுமதி அளித்தும், இந்தத் தேர்தல் தொடர்பான அறிவிப்பை உயர்நீதிமன்ற அனுமதியின்றி வெளியிடக்கூடாது என்றும், இந்தத் தேர்தலை நடத்தும் சிறப்பு அதிகாரியாக உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமனத்தை உறுதி செய்கிறாம் என்றும் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை வருகிற 20-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.