/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th_1240.jpg)
வாக்காளர் பட்டியலில் இறந்த நபர்களின் பெயரை நீக்கும் வகையில், இறப்பு சான்றிதழ்களில் ஆதார் விவரங்களை இணைப்பது குறித்து தேர்தல் ஆணையமும், நாடாளுமன்றமும் தான் முடிவெடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களையும், இரட்டை பதிவுகளையும் நீக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, மதுரையைச் சேர்ந்த சைலப்ப கல்யாண் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை நீக்கும் வகையில், அவர்களின் இறப்பு சான்றிதழ்களில் ஆதார் விவரங்களை இணைக்கலாம் எனவும், அதன் மூலம் இறந்த வாக்காளர்கள் குறித்த விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும் மனுதாரர் தரப்பில் யோசனை தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், இதுசம்பந்தமாக நாடாளுமன்றமும், தேர்தல் ஆணையமும் தான் முடிவெடுக்க வேண்டும் எனவும், மனுதாரரின் யோசனையை தேர்தல் ஆணையம் பரிசீலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
அதேசமயம், வாக்காளர் பட்டியல் தயாரிப்பில் சிறந்த நடைமுறையை தேர்தல் ஆணையம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)