Skip to main content

சாத்தரசன்கோட்டையில் யானைச் சின்னம் பொறித்த சூலக்கல் கண்டுபிடிப்பு!

Published on 17/08/2019 | Edited on 17/08/2019

சிவகங்கை மாவட்டம் சாத்தரசன்கோட்டை அருகே பாப்பாகுடியில் 1000 ஆண்டுகள் பழமையான யானைச் சின்னம் உள்ள சூலக்கல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வேலூரில் கல்லூரிப் பேராசிரியராகப் பணிபுரியும் மூவேந்தன், தனது ஊரான பாப்பாகுடி சமயன் கோயிலில் யானை சின்னம் உள்ள சூலக்கல் இருப்பதாக கொடுத்த தகவலின் பேரில், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு, தொல்லியல் ஆய்வாளர் கொல்லங்குடி புலவர் காளிராசா ஆகியோர் அவ்வூரைச் சேர்ந்த ராமக்கண்ணன் உதவியுடன் ஆய்வு செய்தனர்.
 

இதுபற்றி தொல்லியல் ஆய்வாளர் வே.ராஜகுரு கூறியதாவது,
 

சூலக்கல் மன்னர்கள் காலத்தில் கோயில்களின் தினசரி வழிபாட்டுக்காக, விளைநிலங்கள் மீது விதிக்கப்படும் வரியை நீக்கி அவற்றை கோயில்களுக்குத் தானமாக வழங்குவார்கள். இந்நிலங்களின் விளைச்சல் மூலம் கோயில் வழிபாடு தொடர்ந்து நடைபெறும். அவ்வகையில் சிவன் கோயிலுக்கு வழங்கும் நிலதானம், தேவதானம் என்றும், திருமால் கோயில்களுக்கு வழங்குவது திருவிடையாட்டம் என்றும், சமண, பௌத்தப் பள்ளிகளுக்கு வழங்குவது பள்ளிச்சந்தம் என்றும் அழைக்கப்படுகிறது.

 

 soolakkal discovered with Elephant symbol in Sattarasankottai


இவ்வாறு சிவன் கோயிலுக்குத் தானமாக வழங்கும் நிலங்களின் நான்கு எல்லைகளிலும் திரிசூலம் பொறிக்கப்பட்ட சூலக்கற்கள் நடப்பட்டு அவை பாதுகாக்கப்படும். இதுவே திருமால் கோயில் எனில் சங்கு, சக்கரமும்,  சமணப் பள்ளி எனில் முக்குடையும், பௌத்தப் பள்ளி எனில் தர்மசக்கரமும் எல்லைக்கற்களில் பொறிக்கப்பட்டிருக்கும். பாப்பாகுடி சமயன் கோயிலில் ஒரு சூலக்கல்லும், சக்கரம் பொறிக்கப்பட்ட ஒரு திருவாழிக்கல்லும் மக்கள் வழிபாட்டில் உள்ளன.
 

சூலக்கல் அமைப்பு
 

சமயன் கோயிலில் உள்ள சூலக்கல் 3 அடி உயரம், 1½அடி அகலம் உள்ள  கருங்கல்லால் ஆனது. இதன் நான்கு பக்கங்களிலும் புடைப்புச் சிற்பமாக திரிசூலம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பக்கத்தில் திரிசூலத்தை தன் முதுகில் தாங்கிச் செல்லும் யானையின் சிற்பம் உள்ளது. அதன் மறுபக்கத்தில் சூலத்தின் மேல்பகுதியில் சந்திரனைக் குறிக்கும் பிறை வடிவம் உள்ளது. இக்கல்லில் யானைச் சின்னம் இருப்பதன் மூலம் அத்திகோசத்தார் எனும் யானைப்படை வீரர்கள் வழங்கிய தேவதான நிலத்தில் நட்டுவைக்கப்பட்டதாக இதைக் கருதலாம்.
 

 soolakkal discovered with Elephant symbol in Sattarasankottai

அத்திகோசத்தார்
 

வணிகர்கள் தங்களின் பாதுகாப்புக்காக வைத்திருந்த யானைப்படையினர் அத்திகோசத்தார் எனப்பட்டனர். பெருவழிகளில் வணிகர்களைப் பாதுகாப்பதற்காக இவர்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். மன்னர்கள் கோயில்களுக்கு கொடையளிக்கும்போது உடன் இருந்து, அக்கொடையை பாதுகாக்கும் பணிகளையும் இவர்கள் செய்துள்ளனர். இவர்களைப் பற்றி முதன்முதலில் பூலாங்குறிச்சி கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாப்பாகுடியிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள காளையார்கோயில், மதுரை தொண்டி வணிகப்பெருவழியில் இருந்துள்ளது. இங்கு தங்கியிருந்த அத்திகோசத்தார் எனும் யானைப்படையினர், அவ்வூர் சிவன்கோயிலுக்கு பாப்பாகுடியை தானமாக வழங்கி இருக்கலாம். தானமாக வழங்கிய நிலத்தில் அவர்களின் யானைச் சின்னத்துடன் கூடிய சூலக்கல்லை நட்டு வைத்திருக்கலாம். சோழர்கால கலைப்பாணியில் உள்ளதால் இது கி.பி.11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதலாம். இதேபோல் சோழர்காலத்தைச் சேர்ந்த காளைச் சின்னம் உள்ள நான்முக சூலக்கல்லை புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் புதுக்கோட்டை அருகே வாழமங்கலத்தில் கண்டுபிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.

Next Story

வேங்கைவயல் விவகாரம்; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vengaivayal Affair High Court action order

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில் வழக்கறிஞர் மார்க்ஸ் ரவீந்தரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, தலைமை நீதிபதி கங்காபூர்வாலா அடங்கிய அமர்வில் இன்று (16.04.2024) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு தரப்பில், “இந்த விவகாரத்தில் உண்மை கண்டறியும் சோதனையும், குரல் மாதிரி பரிசோதனையும்” நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மனுதாரர் தரப்பில், “சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதுவரை எந்த ஒரு முழு விசாரணையையும் நடத்தவில்லை” எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “இந்தச் சம்பவம் நடந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிறது. இத்தனை நாட்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். வேங்கைவயல் விவகாரத்தில் 3 மாதத்தில் விசாரித்து இறுதி அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்து வழக்கு ஜூலை 3 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.