Skip to main content

95 வயது தாயை நடுதெருவில் வீசிய மகன்கள்... கொசுக்கடியில் விடிய விடிய கிடந்த பட்டம்மாள்!

Published on 03/10/2019 | Edited on 03/10/2019

தாயிற் சிறந்த கோயில் இல்லை என்ற முதுமொழி பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்தாலும் பல பேருக்கு அந்த வார்த்தையின் உண்மையான மகத்துவம் போய் சேரவில்லையோ என்று நினைக்க தோன்றுகிறது இந்த சம்பவத்தை காணும்போது. அரியலூர் மாவட்டம் செயங்கொண்டத்தை அடுத்த செங்குந்தபுரம் கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். அவருடைய மனைவி பெயர் பட்டம்மாள். வயது 95. இவருக்கு இரண்டு மகன்களும், இரண்டு மகள்களும் உள்ளனர்.

அவரின் கணவர் உடல்நிலைக் குறைவு காரணமாக 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விடவே, தனிமரமான அவர் மகன்களின் வீட்டில் அடைக்கலம் புகுந்தார். கணவரின் பெயரில் இருந்த சொத்துக்களை பங்கீடும் வரையில் பட்டம்மாளை பார்த்துக்கொண்ட மகன்கள், இதற்குமேல் எந்த சொத்துக்களும் அவரிடம் இல்லை என்ற நிலையில், அவரை சிறிது சிறிதாக புறக்கணிக்க ஆரம்பித்தார்கள். அதுவும் கடந்த சில நாட்களாக எல்லை மீறிய நிலையில் இருந்து உள்ளது. நேற்று அவருடைய இரண்டாவது மகனான சதாசிவம் வீட்டில் தங்கியிருந்த இருந்த தனது அம்மாவை அழைத்து வந்து, தனது அண்ணன் சண்முகம் வீட்டில் விட்டுள்ளார். அம்மாவை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்த சண்முகம் இங்கே ஏன் வந்தாய்? என்று பெற்ற தாயை ஒருமையில் பேசியதோடு அல்லாமல் அவமரியாதையாக நடத்தியுள்ளார்.

 

ghj

நான் வீட்டின் ஓரமாக இருந்து கொள்கிறேன் ராசா... என்று அந்த தாய் சண்முகத்தின் கையை பிடித்து கெஞ்சிய நிலையிலும் அவர் சிறிதும் மனது இறங்காமல் தாயை குண்டுகட்டாக தெருவில் வீசிவிட்டு சென்றுள்ளார். மகனோடு போராட உடல்நிலை ஒத்துழைக்காத நிலையில், நடுத்தெருவில் படுத்து நேற்று இரவு பொழுதை கழித்துள்ளார் பட்டம்மாள். நேற்று இரவு இந்த சம்பவம் நடந்த நிலையில், அதிகாலையில் பட்டம்மாள் சாலையில் கிடப்பதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர் பட்டம்மாளை செயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்துள்ளார். சிகிச்சைக்கு பிறகு பட்டமாளை அவரது மகனிடம் சேர்க்கும் பொருட்டு ஆட்டோவில் செங்குந்தபுரம் அழைத்துவந்துள்ளார்.

ஆனால், பட்டமாளின் மகன்கள் இருவரும் அவரை வீட்டில் சேர்த்துகொள்ள மறுத்துவிட்டனர். பொதுமக்கள் எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவர்கள் இருவரும் அதை காதில் வாங்க மறுத்துவிட்டார்கள். இதனால் செய்வதறியாது தவித்த பொதுமக்கள் பட்டமாளை மீண்டும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு, சம்பவம் தொடர்பாக செயங்கொண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பாக செயங்கொண்டம் காவல்துறையினர் பட்டமாளின் இரண்டு மகன்களிடமும் பேச்சுவார்த்தை மேற்கொண்டார்கள். அவர்களின் சமாதானத்தை ஏற்ற பட்டமாளின் மகன்கள் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆசை ஆசையாய் அம்மாவுக்கு வாங்கிய செல்போன்; காத்திருந்த அதிர்ச்சி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
soap is offered to a teenager who bought a cell phone online for his mother

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் மாங்காடு கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் படிப்பை முடித்துவிட்டு வெளியூரில் வேலை செய்து வருகிறார். தன் தாயாரிடம் பேச முதல் முறையாக தனது சம்பளத்தில் இருந்து அமேசான் ஆன்லைன் வர்த்தக மையத்தில் ரூ. 7100க்கு 'சாம்சங் M04’ ஆர்டர் செய்துள்ளார்.

இந்த ஆர்டரை கர்நாடக மாநிலம் பெங்களூர் மகாவீர் டெலி வோல்டு நிறுவனம் எடுத்துக் கொண்டது. தான் வெளியூரில் இருப்பதால் தனது நண்பர் அருண் நேரு முகவரியையும் கொடுத்து செல்போன் மற்றும் பார்சல் கட்டணம் என முழுத் தொகையும் ஆன்லைனிலேயே செலுத்திவிட்டார். தங்கள் ஆர்டர் பதிவு செய்யப்பட்டது தங்களுக்கான பார்சல் எங்கள் முகவர்கள் தேடி வந்து தருவார்கள் என்று கூறியுள்ளனர்.

ஆர்டர் செய்த 7வது நாள் பார்சல் வந்திருப்பதாக டெலிவரி முகவர் செல்போனில் தொடர்பு கொண்டு அழைத்ததால் அருண் நேரு பார்சலை வாங்கி கார்த்திக் அம்மாவுக்காக முதன் முதலில் வாங்கிய செல்போன் என்பதால் அங்கேயே பிரிக்காமல் அம்மாவே பிரித்துப் பார்க்கட்டும் என்று பார்சலை பெற்றுக்கொண்டு கார்த்திக் வீட்டிற்கு கொண்டு சென்றுள்ளார். அம்மாவுக்காக மகன் ஆசை ஆசையாய் வாங்கிய செல்போன் பார்சலை அம்மாவிடம் காட்டிவிட்டு வீட்டில் வைத்து பிரித்தபோது உள்ளே பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 

கசங்கி இருந்த பார்சலை பிரித்தபோது, கார்த்திக் ஆர்டர் செய்திருந்த செல்போன் பெட்டி இருந்தது. பெட்டியைத் திறந்து பார்த்தால் பெட்டிக்குள் செல்போனுக்கு பதிலாக சலவை சோப், சாம்சங் செல்போன் சார்ஜர், ஆன்லைன் ஆர்டருக்கான பில் ஆகியவை இருந்தது. உடனே சம்பந்தப்பட்ட அமேசான் ஆன்லைன் நிறுவனத்திலும் டெலிவரி செய்த பேராவூரணி நிறுவனத்திலும் கேட்டால் சரியான பதில் இல்லை.

கடந்த 10 வருடங்களாக அமேசானில் பல பொருட்கள் வாங்கி இருக்கிறேன் ஆனால் இந்த முறை என் அம்மாவுக்காக முதல் முறையாக செல்போன் வாங்க அமேசானில் ஆர்டர் பண்ணி நான் வெளியூரில் இருப்பதால் என் நண்பன் முகவரிக்கு பார்சலை அனுப்பச் சொன்னேன். ஆனால் சலவை சோப் அனுப்பி என்னை ஏமாற்றிவிட்டனர். இதனால் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அமேசானில் புகார் பதிவு செய்தும் எந்த பதிலும் இல்லை. டெலிவரி கொடுத்த பேராவூரணி நிறுவனமும் பதில் தரவில்லை. அதனால் காவல் நிலையத்தில் புகார் கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன். என்னைப் போல இன்னும் எத்தனை பேரை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்களோ என்கிறார் கார்த்திக்.

Next Story

இரு பெண் குழந்தைகளுடன் ஓடும் ரயில் முன் பாய்ந்த தாய்!

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
 mother jumped in front of a train with two girls

ராணிப்பேட்டை அடுத்த அம்மூர் அடுத்த வேலம் பகுதியைச் சேர்ந்தவர் 40 வயதான அறிவழகன். ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவரது மனைவி வெண்ணிலா. இந்த தம்பதிகளுக்கு தார்ணிகா(7) ஜெனிஸ்ரீ(5) ஆகிய இரு மகள்கள் உள்ளனர். வெண்ணிலாவுக்கு முன்பே விஜயலட்சுமி என்பவரை அறிவழகன் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

அறிவழகன் – விஜயலட்சுமி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பல ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார் அறிவழகன். சட்டரீதியாக விவாகரத்து கிடைக்கும் முன்பே வெண்ணிலாவை திருமணம் செய்துகொண்டுள்ளார் அறிவழகன்.

இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு விவாகரத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. மீண்டும் அறிவழகனுடன் சேர்ந்து வாழ விஜயலட்சுமி வேலம் கிராமத்தில் உள்ள அறிவழகன் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது என் வாழ்க்கை, என் பிள்ளைகள் வாழ்க்கை இப்படியாகிடுச்சே என கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இந்த குடும்ப தகராறு காரணமாக வெண்ணிலா தனது இரண்டு பெண் குழந்தைகளை அழைத்துக்கொண்டு வீட்டை விட்டு இன்று காலை கிளம்பினார்.

அவர் கோபத்தில் தனது அம்மா வீட்டுக்குத்தான் செல்வார் என அக்கம்பக்கத்தினர் நினைத்தனர். அவர் வாலாஜா ரயில் நிலையத்திற்குச் சென்றவர் காட்பாடி வழியாக சென்னை செல்லும் அதிவிரைவு ரயில் முன்பு  பாய்ந்தனர். இதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்கள்.