Skip to main content

உயிருக்குப் போராடும் தாயாரின் விருப்பத்தை நிறைவேற்றிய மகன்!

Published on 30/10/2021 | Edited on 30/10/2021

 

villupuram district

 

விழுப்புரம் மாவட்டம் பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் எழுத்தராக பணிபுரிந்து வருகிறார் 40 வயதான தயாளன். இவருக்குத் திருமணம் ஆகாத நிலையில் இவரது தாய் (67 வயது) முத்தாலம்மன் என்பவருக்குக் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள அவரை தயாளன் சென்று பார்த்துள்ளார். அப்போது அவரது தாயார் மகன் தயாளனிடம் 'நான் இந்த நோயிலிருந்து பிழைப்பேனா என்பது சந்தேகமாக உள்ளது. எனவே நான் உயிரோடு இருக்கும்போதே நீ திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது என் விருப்பம்' என்று உருக்கமாகக் கூறியுள்ளார்.

 

தாயாரின் விருப்பத்தை நிறைவேற்ற முடிவு செய்த தயாளன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த தனது தாயாரைப் பார்க்க வந்திருந்த கோனூரைச் சேர்ந்த தனது தாய் மாமன் ஏழுமலையிடம் தாயார் கூறியதை எடுத்துக் கூறியுள்ளார்.

 

உடனே ஏழுமலை தனது மகள் 27 வயது காயத்ரியிடம் மாமன் தயாளனைத் திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். காயத்ரியும் திருமணத்திற்குச் சம்மதிக்க உடனடியாக உறவினர்களை அங்கு வரவழைத்து திருமணம் குறித்து மருத்துவமனை வளாகத்திலேயே பேசி முடிவு செய்து காயத்ரியின் சம்மதத்துடன் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மன் கோவிலில் நேற்று காலை காயத்ரிக்கும் தயாளனுக்கும் திடீர் திருமணம் நடந்துள்ளது.

 

அந்த திருமணத்தை அவர்களது உறவினர்கள் மற்றும் மருத்துவமனைக்கு நோயாளிகளைப் பார்க்க வந்திருந்த பொதுமக்கள் உட்பட அனைவரும் வாழ்த்தினர். திருமணம் நடந்தவுடன் மணமக்கள் இருவரும் தயாளனின் தாயார் முத்தாலம்மனிடம் ஆசி வாங்குவதற்காக மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால் அங்கிருந்த டாக்டர்கள் கரோனா நோயாளியாக உள்ள அவரைப் பார்க்கக் கூடாது என்று அறிவுறுத்தியுள்ளனர். மணமக்கள் இருவரும் தாங்கள் திருமணம் செய்து கொண்ட தகவலை மருத்துவர்கள் மூலம் தனது தாயிடம் தெரிவிக்குமாறு கூறிவிட்டு மணமக்கள்  வீட்டுக்குப் புறப்பட்டனர். தாய் முத்தாலம்மன் வீட்டுக்கு வந்து தங்களை ஆசீர்வதித்து வாழ்த்துவார் என்று மணமக்கள் கூறி சென்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

மறைந்த எம்.எல்.ஏ. புகழேந்தி உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
Late MLA pugazhendhi Tribute to CM MK Stalin

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (வயது 71). இத்தகைய சூழலில் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் (05.04.2024) இரவு விழுப்புரம் வந்திருந்தார். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கடந்த 4 ஆம் தேதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார்.

அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. இதனையடுத்து நேற்று (06.04.2024) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர் ஆவார். எம்.எல்.ஏ புகழேந்தி மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (06.04.2024) இரவு விழுப்புரத்தில் உள்ள கலைஞர் அறிவாலயத்திற்கு நேரில் சென்று, உடல்நலக் குறைவால் காலமான விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் நா. புகழேந்தியின் உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.  அப்போது அமைச்சர்கள் கே.என். நேரு, க. பொன்முடி, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எஸ்.எஸ். சிவசங்கர், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சி.வி. கணேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் எனப் பலரும் உடன் இருந்தனர்.