Skip to main content

நீச்சல் பயிற்சியின் போது தந்தை கண்முன்பே உயிரிழந்த மகன்!

Published on 11/11/2020 | Edited on 11/11/2020

 

The son who drowned in front of his father while trying to learn to swim

 

மகனை கிணற்றுத் தண்ணீரில் நீச்சலடிக்க கற்றுக் கொடுக்கப்போய், அந்தக் கிணற்றிலேயே மகனை பறிகொடுத்த சம்பவம் ஈரோடு பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ஈரோடு வீரப்பன் சத்திரத்தைச் சேர்ந்தவர் கதிரேசன். இவர் கார் டிரைவராக உள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி. இவர்களுக்கு, 16 வயது அபிராம் விஷால் என்ற மகனும் 11 வயது யோகஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். இதில், அபிராமி விஷால் பிளஸ் 1 படித்து வந்தார். கரோனா காலத்தில் பள்ளிகள் விடுமுறை என்பதால், தனது மகனுக்கும் மகளுக்கும் நீச்சல் கற்றுக் கொடுக்க விரும்பினார் தந்தை கதிரேசன்.


மொடக்குறிச்சி அருகே குளூர் என்னுமிடத்தில் உள்ள தனது நண்பரின் தோட்டத்துக் கிணற்றில், மகனுக்கும் மகளுக்கும் நீச்சல் கற்றுக் கொடுக்கச் சென்றுள்ளார். 11ஆம் தேதி மகன், மகள் இருவரது இடுப்பிலும் பிளாஸ்டிக் கேன்களை கட்டி, இருவருக்கும் நீச்சல் கற்றுக் கொடுத்தார். சிறிது நேரம் பயிற்சிபெற்ற நிலையில், மூச்சு வாங்குவதாகக் கூறி ஓய்வு எடுப்பதற்காகக் கிணற்றுத் திட்டு மீது ஏறிய மகன் ஆபிராம் விஷால் அங்கு சிறிது நேரம் நின்றுள்ளார். 


அப்போது, இடுப்பில் கட்டியிருந்த பிளாஸ்டிக் கேன்களை கழட்டி கீழே வைத்தார். எதிர்பாராத நிலையில், நிலைதடுமாறிய அந்தச் சிறுவன் அப்படியே கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். அப்போது அந்தக் கிணற்றுக்குள் மகளுக்கு நீச்சல் கற்றுக் கொடுத்த கதிரேசன் இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, வேறு வழி இல்லாமல் ஒரு கையில் மகளை பிடித்துக் கொண்டு மறுகையில் மகனை காப்பாற்ற முயன்றார். ஆனால் அவரால் மகனை காப்பாற்ற முடியவில்லை. இதனால் அவர் கண் முன்னே மகன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டார். 

 

cnc


பிறகு, மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு நிலைய வீரர்கள், அந்த 70 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி, சில மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, இறந்த சிறுவனின் உடலை மீட்டனர். மொடக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

நீச்சல் பழகிவிட்டால், தண்ணீரில் ஆபத்து இருக்காது எனத் தனது குழந்தைகளுக்கு நீச்சல் பழக்கிய தந்தையின் கண்முன்னே, மகன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

ஈரோடுக்கு வந்து சேர்ந்த தபால் ஓட்டுகள்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
postal vote arriving at Erode

ஈரோடு லோக்சபா தொகுதிக்கு பிற மாவட்டங்களில் பதிவான, 2,258 தபால் ஓட்டு வந்தடைந்தது.

கடந்த பொதுத் தேர்தல்களில் பிற மாவட்டங்களில் வசிப்போர், தேர்தல் பணி செய்வோர், ராணுவத்தினர் போன்றோர் தாங்கள் வசிக்கும் லோக் சபா தொகுதிக்கான ஓட்டை, தபால் ஓட்டாக பெற்று, தபாலில் அனுப்பி வைப்பார்கள். இம்முறை தங்களின் ஓட்டுக்களை, பணி செய்யும் இடத்திலேயே தபால் ஓட்டாக பதிவு செய்தனர். கடந்த, 19ல் ஓட்டுப்பதிவு முடிந்ததும், பிற மாவட்டத்துக்கான பெட்டிகள் திருச்சிக்கு சென்று, அங்கு தொகுதி வாரியாக தபால் ஓட்டுக்களை பிரித்தனர். இரண்டு நாட்களுக்கு முன், அந்தந்த லோக்சபா தொகுதி வாரியாக அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி ஈரோடு மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறியதாவது, 'ஈரோடு மாவட்டத்தில், 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் போன்றோரிடம், 2,866 தபால் ஓட்டை பதிவு செய்துள்ளோம். இத்துடன் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டோரிடம், 4,268 ஓட்டு, விருதுநகர் மாவட்டத்தில் பதிவான 6 ஓட்டு, ராணுவத்தில் இருந்து பதிவான, 8 ஓட்டு என, 7,148 தபால் ஓட்டுகள் சேகரிக்கப்பட்டன. அதேசமயம் பிற லோக்சபா தொகுதிக்காக பதிவான ஓட்டு, திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, லோக்சபா தொகுதி வாரியாக பிரித்து, அந்தந்த தொகுதிக்கு அனுப்பப் பட்டது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் பெறப்பட்ட, 2,908 ஓட்டு, பிற லோக்சபா தொகுதிக்காகவும், 2 ஓட்டு விளவங்கோடு சட்டசபை தொகுதிக்காகவும் பெட்டியில் வைத்து திருச்சியில் ஒப்படைத்தோம்.

பிற மாவட்டங்களில் பதிவாகி, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக, 2,258 தபால் ஓட்டுகள் தனி பெட்டியில் ஈரோடு வந்தடைந்தது. தற்போதைய நிலையில், 7,000 தபால் ஓட்டு வரை, ஈரோடு லோக்சபா தொகுதிக்காக பதிவாகி உள்ளன. தவிர ராணுவத்தில் பணி செய்யும், 'சேவை வாக்காளர்கள்', 182 பேருக்கு தபால் ஓட்டு அனுப்பி வைத்துள்ளோம்' என்றார்.