Skip to main content

வயதான பெற்றோரைத் தெருவிற்குத் துரத்தி விடும் மகன்; விரக்தியில் தீக்குளிக்க முயற்சி!

Published on 05/04/2022 | Edited on 05/04/2022

 

Son who chases elderly parents into the street

 

சொத்தை அபகரிக்கும் நோக்கத்தில் வயதான பெற்றோர் குடியிருக்கும் வீட்டை பொக்லைன் வாகனம் மூலம் இடித்து தள்ளுவேன் என மிரட்டிய மகன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தம்பதியர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள மல்லியக்கரை காட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகரன் (65). இவருடைய மனைவி மல்லிகா (61). இவர்கள் இருவரும் திங்கள்கிழமை (ஏப். 4) காலை சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாமிற்கு வந்திருந்தனர். ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்த அவர்கள், திடீரென்று மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை எடுத்து, தங்கள் மீது ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர். 


அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பாய்ந்து சென்று, அவர்களிடம் இருந்த மண்ணெண்ணெய் பாட்டிலை பறித்து வீசினர். அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தீத்தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அந்த தம்பதியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள், ''எங்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களுக்கு சொத்துகளை பிரித்துக் கொடுத்து விட்டோம். 


எங்கள் வீடு அருகே மூத்த மகன் குமரேசன் குடும்பத்துடன் வசித்து வருகிறான். நாங்கள் குடியிருந்து வரும் வீட்டை அபகரிக்கும் நோக்கத்தில், வீட்டை காலி செய்யும்படி தொல்லை கொடுத்து வருகிறான். வீட்டை காலி செய்யாவிட்டால் பொக்லைன் வண்டியை வைத்து வீட்டை இடித்து விடுவேன் என்று மிரட்டுகிறான். மருமகளும் மகனை தூண்டி விடுகிறார். 


நாங்கள் வீட்டை காலி செய்து விட்டால் எங்களுக்கு பிழைக்க வேறு போக்கிடம் இல்லை. எங்கு போவதென்றும் தெரியவில்லை. மகனால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. அதனால் விரக்தியால் தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்து இங்கு வந்தோம். எங்கள் மூத்த மகன் மீதும், அவருடைய மனைவி மீதும்  நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர். 


இது தொடர்பாக அவர்கள் வைத்திருந்த புகார் மனுவை சேலம் நகர காவல்நிலைய காவல்துறையினர் பெற்றுக்கொண்டு, அவர்களை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். கோரிக்கை மனுக்கள் கொண்டு வரும் பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும், அவ்வாறான செயலில் ஈடுபடுவோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அண்மையில் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் எச்சரித்து இருந்தார். 


இந்நிலையில், நடப்பு வாரத்தின் முதல் நாளே வயதான தம்பதியர் ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த போர் வீரனின் நடுகல் கண்டுபிடிப்பு!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
17th century warrior headstone Kantipudi

சேலம் மாவட்டம், மாதநாயக்கன்பட்டி பெருந்தலைவர் காமராசர் நினைவு அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் தலைவர் தலைமை ஆசிரியர், பொறுப்பு ஆசிரியர்களாக அன்பரசி, விஜயகுமார் ஆகியோர் உள்ளனர். இப்பள்ளி மாணவர்கள் கொடுத்த தகவலின்படி ஆசிரியர்களும், மாணவர்களும் களப்பயணத்தின் போது வீரனின்  நடுகல்  ஒன்று கண்டறியப்பட்டது.

பொது ஆண்டு 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த நடுகல்லில் எழுத்துகள் எதுவும் இல்லை. கல்பூமியின் மேற்பரப்பில் 2 அடி உயரமும் 1.5  அடி அகலம் கொண்டது. இந்த நடுகல்லை சுற்றி கல்திட்டை போன்ற அமைப்பும் உள்ளது . நடுகல்லில் போர் வீரனின் சிற்பம்  உள்ளது.
வேட்டைக்கு சென்று இறந்ததற்காக எடுக்கப்பட்ட நடுகல்லாக இருக்கலாம். ஆலிடாசனம் நிலையில் வில்லில் நாணில் அம்பு எய்துவது போன்றும், இடுப்பில் குரு வாளும், காதில் பத்ர குண்டலமும்,   கழுத்தில் சரப்பளி, சவுடி, முத்தாரம் அணிகலன் அணிந்திருப்பது  போன்றும் கையில் தோள்வளை  இருப்பது போன்ற உருவமைப்பு உள்ளது.

17th century warrior headstone Kantipudi

இப்பகுதி தாருகாவனத்திற்க்கு அருகில் இருப்பதால்  இந்த வீரன் வேட்டுவ தலைவனாக இருக்கலாம். இந்த நடுகல் எல்லாம் அவர்களின் நினைவைப் போற்றும் வகையில் வைக்கப்பட்டதாகும்.  தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் சார்பாக தொல்லியல் சார்ந்த வரலாற்று தகவல்களையும், அதனை பற்றிய விழிப்புணர்வையும் இன்றை இளைய தலைமுறை மாணவர்களுக்கு கொண்டு சேர்ப்பது தான் தொன்மை பாதுகாப்பு மன்றத்தின் நோக்கமாகும் என்கின்றனர் தொன்மை பாதுகாப்பு மன்ற ஆசிரியர்கள்.