Skip to main content

"குடிக்கணும் காசு கொடு..." - மறுத்த அம்மா, அப்பாவை வெட்டிய மகன்!

Published on 26/12/2020 | Edited on 26/12/2020

 

Son arrested in father's case in kallakurichi


கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகில் உள்ளது குமாரமங்கலம். இந்த கிராமத்தைச் சேர்ந்த பாலுசாமி (60) என்பவரின் வளர்ப்பு மகன் விஜயராமனுக்கு வயது 38. இவர், தனது வளர்ப்புத் தந்தையை அரிவாள்மனை கொண்டு தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ளார். 

 

இந்தக் கொலை தொடர்பாக உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். அதன்படி, பாலுசாமி ஒரு மாற்றுத்திறனாளி. இவர் தனது மனைவி வெள்ளையம்மாளுடன் வசித்து வந்துள்ளார். இவருடைய வளர்ப்பு மகனான விஜயராமன், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 


இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு இரவு நேரத்தில் தந்தை பாலுசாமியிடம் குடிப்பதற்குப் பணம் கேட்டுத் தகராறு செய்துள்ளார். பாலுசாமி பணம் தர மறுத்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த விஜயராமன், அந்த நள்ளிரவு நேரத்தில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பாலுசாமியை அரிவாள்மனை கொண்டு தலை மற்றும் முகத்தில் வெட்டி படுகொலை செய்துள்ளார். அதைத் தடுக்க வந்த தாய் வெள்ளையம்மாவையும் வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பி ஓடிவிட்டார். கணவன் மனைவி இருவருமே மாற்றுத்திறனாளிகள் என்பதாலும் மற்றும் நள்ளிரவு நேரம் என்பதாலும் இந்தப் படுகொலை சம்பவம் குறித்து போலீசாருக்குத் தாமதமாக தகவல் தெரிய வந்துள்ளது. 


சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் செல்வநாயகம் மற்றும் போலீசார் பாலுசாமி சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடிய ஜெயராமனை பிடிப்பதற்காகத் தனிப்படை போலீசார் தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நேற்று மதுரை ஆரப்பாளையம் பகுதியில் அவரது சொந்த தந்தை ராஜாராம் வீட்டில் விஜயராமன் பதுங்கியிருந்த தகவலை போலீசார் கண்டுபிடித்தனர். 


உடனடியாக அங்கு சென்று விஜயராமனைச் சுற்றிவளைத்துக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். குடிப்பதற்குப் பணம் தர மறுத்த வளர்ப்புத் தந்தையைக் கொலைசெய்த இளைஞரின் வெறிச்செயல் அப்பகுதி மக்களைப் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்