Skip to main content

“நிறைய கருப்பு பணம் இருக்கு.. ஒன்னு கொடுத்தா ரெண்டா தரோம்” - பதறும் கோவை

Published on 27/12/2022 | Edited on 27/12/2022

 

some persons cheated a mechanic of one lakh rupees in Coimbatore

 

நீங்கள் ஒரு லட்சம் கொடுத்தால், இரண்டு லட்சம் தருகிறோம் என மெக்கானிக்கை ஏமாற்றிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியைச் சேர்ந்த திருவேங்கடசாமி, அதே பகுதியில் மோட்டார் மெக்கானிக் தொழிலை செய்து வருகிறார். இந்நிலையில், திருவேங்கடசாமி வேலை பார்க்கும் கம்பெனிக்கு கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் மோட்டார் சரி செய்ய வந்துள்ளார். அப்போது, திருவேங்கடசாமிக்கும் மணிகண்டனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

 

அந்த சமயத்தில், மணிகண்டன் கூறும்போது, "என்னுடைய முதலாளி கார்த்தி என்பவர் நிறைய கருப்பு பணம் வைத்துள்ளார். அந்தப் பணத்தை எங்களால் வெளியே கொண்டுவர முடியாது. அதனால், நீங்கள் ஒரு லட்சம் கொடுத்தால், நாங்கள் இரண்டு லட்சம் தருவோம்" எனப் பேசியுள்ளார். இதில், சிறிது பதற்றமடைந்த திருவேங்கடசாமி, இப்போது என்னிடம் பணம் இல்லை எனக் கூறியுள்ளார்.

 

ஆனால், திருவேங்கடசாமியை விடாத மணிகண்டன், அவரை தினமும் செல்போனில் அழைத்து, பணம் ரெடி ஆகி விட்டதா? சீக்கிரம் வாருங்கள். இல்லையென்றால், உங்களுக்குப் பணம் கிடைக்காது என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் இதை உண்மை என நம்பிய திருவேங்கடசாமி அவருக்குத் தெரிந்த பைனான்சியர் கணேஷ் என்பவரிடம் நடந்த விஷயத்தை கூறியுள்ளார்.

 

இதையடுத்து, ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுப்பதற்கு பைனான்சியர் கணேஷ் சம்மதம் தெரிவித்துள்ளார். அதன்பிறகு, மணிகண்டனுக்கு போன் செய்த திருவேங்கடசாமி, என்னிடம் பணம் தயாராக உள்ளது. எங்கு வந்து வாங்கிக் கொள்ளலாம் எனக் கேட்டுள்ளார். மணிகண்டனோ ஆனைமலை அருகே உள்ள அம்பராம்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வாருங்கள். உங்களுக்கு பணம் கொடுத்து விடுகிறேன் எனக் கூறியுள்ளார்.

 

இந்நிலையில், பணம் கிடைக்கும் என்ற ஆசையில் இருந்த திருவேங்கடசாமி, அம்பராம்பாளையத்தில் காத்துக் கொண்டிருந்த  கார்த்தி மற்றும் மணிகண்டனிடம், தான் வைத்திருந்த ஒரு லட்சத்தை கொடுத்துவிட்டு அவர்களிடம் இருந்து நான்கு 500 ரூபாய் கட்டுகளில் இரண்டு லட்சத்தை வாங்கியுள்ளார். இதையடுத்து, டூவீலரில் வந்த மர்ம நபர்கள் பணத்தை கொடுத்தவுடன் அங்கிருந்து மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர். அவர்கள் சென்றவுடன் அந்த நான்கு 500 ரூபாய் கட்டுகளை எடுத்து பார்த்தபோது திருவேங்கடசாமிக்கு பேரதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

 

அதில், முன்பக்கம் பின்பக்கம் என 4 அசல் 500 ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருந்துள்ளது. மற்றவை எல்லாம் வெறும் வெள்ளைத் தாள்கள் தான். இதனால், திடுக்கிட்டுப்போன திருவேங்கடசாமி, என்ன செய்வது எனத் தெரியாமல் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த ஆனைமலை போலீசார், திருவேங்கடசாமியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கருப்பு பணம் தருகிறோம் எனக் கூறி வெள்ளைத் தாள்களை கொடுத்து ஏமாற்றிய சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.