Skip to main content

பட்டியலின மக்களுக்கு நேர்ந்த துயரம்; குடிக்கும் தண்ணீரில் கிடந்த இயற்கை உபாதை

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

some one  who went to the toilet in public drinking water

 

புதுக்கோட்டையில் குடிக்கின்ற தண்ணீரில் மர்ம நபர் இயற்கை உபாதை கழித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முட்டுக்காடு ஊராட்சியின் இறையூர் கிராமத்தில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் சுமார் 50 குடும்பங்கள் வசிக்கின்றன. இவர்களின் குடிநீர் தேவைக்காக சுமார் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி உள்ளது.

 

இந்தத் தொட்டியிலிருந்து வழங்கப்படும் தண்ணீரை பொதுமக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்தப் பகுதியில் உள்ள மணிகண்டன் மகன் கோமித்திரன் (3), கண்ணதாசன் மகள் தீபிகாஸ்ரீ (2½), கனகராஜ் மகள் கோபிகாஸ்ரீ (6), செல்வம் மகள் பூர்வசாமிலி ஆகியோருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர். இதில் கோபிகாஸ்ரீ மட்டும் இன்னும் சிகிச்சையில் உள்ளார்.

 

இந்த நிலையில், குழந்தைகளின் ஒவ்வாமைக்கு குடிதண்ணீர் தான் பிரச்சனை என்று மருத்துவர்கள் கூறிய நிலையில், கிராமத்தினர் சிலர் இன்று காலை குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் ஏறிப் பார்த்ததும் அதிர்ந்து போனார்கள். பொதுமக்களுக்கான குடிநீரில் இயற்கை உபாதை மிதந்து கொண்டிருந்தது. இந்தத் தகவல் வேகமாகப் பரவியதால் சம்பவ இடத்திற்கு வந்த விசிக நிர்வாகிகள், குடிதண்ணீரில் இயற்கை உபாதை கழித்த சமூகவிரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால், தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என்றனர்.

 

some one  who went to the toilet in public drinking water

 

தகவல் அறிந்து வந்த அன்னவாசல் போலீசார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன் உள்ளிட்டோர் வந்து ஆய்வு செய்த நிலையில் கந்தர்வக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சின்னத்துரை வந்து பொதுமக்களிடம் விபரங்களைக் கேட்டறிந்த பிறகு நம்மிடம் பேசும் போது, “இந்தப் பகுதி மக்களுக்கு குடிநீருக்காக ஒரு தொட்டியும் மற்ற பயன்பாடுகளுக்காக ஒரு தொட்டியிலிருந்தும் தண்ணீர் வழங்கப்படுகிறது. இதில் குடிநீர் தொட்டியில் தான் இப்படி செய்திருக்கிறார்கள். தற்போது அனைத்து அதிகாரிகளும் சம்பவ இடத்தில் இருக்கிறார்கள்.

 

போலிசார் விரைவாக விசாரணை செய்து குற்றவாளிகளைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல விரைவாக குடிநீர் தொட்டி மற்றும் குழாய்களைச் சுத்தம் செய்து பொதுமக்களுக்கு குடிதண்ணீர் வழங்க வேண்டும். சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். ஊராட்சி ஒன்றியம் சார்பில் கேமரா பொருத்துவதாக உறுதியளித்துள்ளனர்” என்றார். கிராம மக்களோ விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

 மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்; அதிர்ச்சி புகார்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Shock complaint on Yet another Vengaivayal lincident at pudukkottai

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி தண்ணீரில் மனிதக் கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குடிநீரில் மனிதக் கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனித உரிமை ஆணையம் எனப் பல தரப்பிலிருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற 20ஆவது நாளில் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு சிபிசிஐடி அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்த விவகாரம் தொடர்பாக குற்றவாளிகளைக் கண்டறிய உண்மை கண்டறியும் சோதனையும், வேங்கைவயல், இறையூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 5 சிறுவர்கள் உட்பட 31 பேரிடமும் டி.என்.ஏ. பரிசோதனைகளையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மேற்கொண்டனர். ஒரு காவலர் உட்பட 5 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், வேங்கைவயல் சம்பவத்தைப் போல், பொதுமக்கள் உபயோகிக்கும் குடிநீரில் மாட்டுச்சாணம் கலக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த சம்பவம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே சங்கன்விடுதி ஊராட்சிக்கு உட்பட்ட தெருவில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன.  

இந்தத் தெருவில், உள்ள 25 பட்டியலின குடும்பங்களும், மாற்று சமூகத்தைச் சேர்ந்த 10 குடும்பங்களும் உபயோகிப்பதற்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, 10,000லி அளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த நிலையில், இன்று (25-04-24) காலை இந்தக் குடிநீர் தொட்டியில் இருந்து அசுத்தமான தண்ணீர் வருவதை அங்குள்ள பொதுமக்கள் கவனித்துள்ளனர். அதன் அடிப்படையில், அந்தத் தொட்டியைச் சுத்தம் செய்வதற்காக தொட்டி மேல் ஏறியுள்ளனர். அங்கு சென்று பார்த்த போது, அந்தத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக, போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின் பேரில், அங்கு போலீசார், வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். குடிநீர் மாதிரி சோதனைக்கு அனுப்பப்பட்ட நிலையில் தற்போது தொட்டி சுத்தம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், விசாரணை முடியும் வரை டேங்கர் லாரி மூலம் கிராம மக்களுக்கு குடிநீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 

Next Story

பாம்பு கடித்து பள்ளி மாணவி உயிரிழந்த சோகம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
nn

புதுக்கோட்டையில் பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் எம்.குளவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சின்னதுரை மகள் விசித்ரா (வயது 14). இவர் அதே ஊரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த ஒரு வார காலமாக தேர்தலுக்காக சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 20 ஆம் தேதி விசித்ரா தனது வீட்டில் வளர்க்கும் ஆடுகளுக்கு இரைதேடிச் சென்றவர் ஒரு கருவேலமரத்தடியில் கொட்டிக்கிடந்த கருவேலங்காய்களை சேகரித்த போது கீழே இருந்த பாம்பு விரலில் கடித்துள்ளது.

பாம்பு கடித்து அலறிய சிறுமியை உடனே அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். பாம்பின் விஷம் வேகமாக உடலில் பரவியுள்ள நிலையில் தீவிர சிகிச்சை அளித்தும் மாணவி விசித்ரா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். சிறுமியின் இறப்பால் கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.