Skip to main content

சமூக சேவகர் மரணத்தில் சந்தேகம்! உடலை அடக்கம் செய்யாமல் உறவினர்கள் போராட்டம்!

Published on 07/07/2020 | Edited on 07/07/2020

 

Social worker - ulundurpettai

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது விஜயங்குப்பம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். பெயிண்டர் வேலை செய்து வரும் இவர் கிராம ஊராட்சியில் கட்டிடங்கள் பராமரிப்பின்மை, பொதுமக்கள் பிரச்சனைகள், அரசு திட்டங்களைக் கிராமங்களில் முறையாகச் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளில் தீவிரமாக இயங்கியவர். மேலும், ஊர் இளைஞர்களுடன் ஒன்று சேர்ந்து அதிகாரிகளைச் சந்தித்து மனு கொடுப்பது, தீர்க்கப்படாத பிரச்சனைகளைத் தீர்த்து வைக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்துவது என ஊர் மக்கள் சம்பந்தப்பட்ட பல்வேறு விஷயங்களுக்காக முன்னின்று செயலாற்றியவர்.

 

இந்தநிலையில் இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த பாண்டியன் என்பவருடன் ஒரே பைக்கில் உளுந்தூர்பேட்டைக்கு வந்துள்ளார். ஊர் பிரச்சினை சம்பந்தமாக ஏற்கனவே கொடுக்கப்பட்ட புகார்கள் பற்றி வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்துப் புகார் மனு தொடர்பாக துரித நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுள்ளார். பிறகு இரவு மீண்டும் பைக்கில் தங்களது ஊருக்குச் சென்றுள்ளனர் பாண்டியன் மற்றும்  மணிகண்டன் ஆகிய இருவரும்.

 

அப்போது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நகர் ரயில்வே மேம்பாலம் அருகே பைக் செல்லும்போது வாகன விபத்தில் சிக்கி மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற பாண்டியன் காயங்களுடன் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு பிறகு மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

 

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை இன்ஸ்பெக்டர் எழிலரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று மணிகண்டன் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

 

Social worker - ulundurpettai

 

இதனிடையே மணிகண்டன் மனைவி, தனது கணவர் சாவில் சந்தேகம் உள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார். அவர் பொதுநலச் சேவைகள் செய்யும்போது பலர் அவர் மீது காழ்ப்புணர்ச்சியில் இருந்ததாகவும், எனவே அவரது சாவில் சந்தேகம் உள்ளது என்று கூறி உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் மணிகண்டன் விபத்தில் இறந்தாரா? அல்லது வேறு யாரேனும் விபத்து போல் செய்து அவரை கொலை செய்தனரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

 

இந்தநிலையில் மணிகண்டன் தரப்பினர் கூறுகையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு அரசின் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்ட நிலையில் மீதமிருந்த சுமார் 20 சென்ட் காலி இடம் அந்தப் பகுதி மக்களின் தேவைகளுக்காக எதிர்காலத்தில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி பள்ளிக் கட்டிடம் நூலகம் ஆகியவை கட்டுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் அதே கிராமத்தைச் சேர்ந்த பலராமன் இவரது சகோதரர் ஆசீர்வாதம் ஆகிய இருவரும் அடுக்குமாடி கட்டிடத்தைக் கட்டி வருகின்றனர். 

 

Social worker - ulundurpettai


இது தொடர்பாக மணிகண்டன் பொதுமக்கள் தேவைக்காக இருக்கும் காலி இடத்தை ஆசீர்வாதம் பலராமன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்து அடுக்குமாடி கட்டிடம் கட்டி வருவதாக அரசு அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தார். இது தொடர்பாக அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த சனிக்கிழமை மாலை மணிகண்டன் தனது ஆதரவாளர்களோடு வந்து உளுந்தூர்பேட்டை வட்டாட்சியரை நேரில் சந்தித்து கட்டுமானப் பணியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

 

Social worker - ulundurpettai


அதன் பின்பு அன்று மாலை தனது இருசக்கர வாகனத்தில் தனது நண்பர் வீரபாண்டியன் என்பவரோடு மணிகண்டன் வீட்டிற்கு புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தார். உளுந்தூர்பேட்டை நகர் ரயில்வே மேம்பாலம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது மணிகண்டனின் இருசக்கர வாகனம் சாலையோரத்தில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி கீழே விழுந்ததாகக் கூறப்படுகிறது. இதில் மணிகண்டன் ரத்த காயத்தோடு உயிரிழந்த நிலையில் வீரபாண்டியன் உயிருக்கு ஆபத்தான நிலையில் விழுப்புரம் முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனிடையே மணிகண்டன் சென்ற இருசக்கர வாகனத்தின் பின் புறமாக காரில் வந்த ஒரு கும்பல் அவரது இரு சக்கர வாகனத்தில் மோதி இருசக்கர வாகனம் தடுப்புச் சுவரில் மோதிய பிறகு மணிகண்டனும் வீரபாண்டியன் காயமடைந்து கீழே விழுந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால் மணிகண்டன் திட்டமிட்டுக் கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உடலை அடக்கம் செய்ய கிராம மக்களும் அவரது உறவினர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

 

Social worker - ulundurpettai

 

இந்த நிலையில் மணிகண்டனின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு இன்று காலை அடக்கம் செய்ய இருந்த நிலையில் மணிகண்டன் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மணிகண்டன் மரணத்திற்குக் காரணமான பலராமன் ஆசீர்வாதம் ஆகியோரை கைது செய்ய வேண்டும். அத்துமீறி கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி கட்டிடத்தை இடித்து மணிகண்டன் விருப்பத்தின் பேரில் அந்த இடத்தில் அரசு பொது நூலகம் கட்ட வேண்டும் என வலியுறுத்தி மணிகண்டன் உடலை அடக்கம் செய்ய மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுபற்றி தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் விஜயகுமார் உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் காதர் அலி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் மணிகண்டனின் மர்ம மரணம் குறித்து விசாரணை செய்த பிறகு சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

 

http://onelink.to/nknapp


இன்றைய தினமே உடனடியாக அளவீடு செய்து அரசுக்குச் சொந்தமான இடத்தில் உள்ள கட்டிடங்களை இடிக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி கூறியதைத் தொடர்ந்து தங்களது போராட்டத்தைக் கைவிட்ட கிராம மக்கள். பின்னர் அமைதியான முறையில் மணிகண்டனின் உடலை எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.


இதன் காரணமாக அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை நிலவு வாய்ப்பு இருந்ததால் சுமார் ஐம்பதிற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 


கிராம மக்களின் தேவைகளுக்காக போராடியும் அரசு அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தும் அந்தக் கிராமத்தில் நடக்கும் அநீதிகள் தொடர்பாகக் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வைத்த மணிகண்டனின் இந்த மர்ம மரணம் அந்தக் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பாபநாசம் பட பாணியில் கொலை; போலீசாரே அதிர்ந்த சம்பவம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Papanasam film style incident; The incident shocked the police

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ளது மாதாரி குளம் கிராமம். அங்கே உள்ள பூங்கா பகுதியில் வசித்து வந்தவர் ரோஷம்மா. கடந்த புதன்கிழமை அன்று ரோஷம்மா திடீரென மாயமானார். இதனால் பல இடங்களில் அவரை உறவினர்கள் தேடி வந்தனர். எங்கு தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியாததால் இறுதியாக காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் அளித்தனர்.

போலீசார் ரோஷம்மா தொடர்பான நபர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் ரோசம்மாவின் உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது ரோசம்மாவின் சகோதரர் பென்னி என்பவரிடத்தில் போலீசார் விசாரித்த போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கொடுத்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்பொழுது சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது தெரிய வந்தது.

புதைத்த இடத்தை பென்னி அடையாளம் காட்டிய நிலையில் ரோஷம்மாவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. கைப்பற்றப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. கொலைக்கான காரணம் குறித்து பெண்ணிடம் விசாரித்த போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த ரோசம்மாவுக்கும் பென்னிற்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த புதன்கிழமை ஏற்பட்ட தகராறின் போது ஆத்திரத்தில் சுத்தியலால் ரோசம்மாவை அடித்து கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பாபநாசம் பட பாணியில் நடந்த இந்தக் கொலை போலீசாருக்கே அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.