கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அண்ணாநகரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகள் தமிழரசி திருமணத்திற்காக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பதிவு செய்ய விருத்தாச்சலம் ஒன்றிய அலுவலகத்திற்கு வந்துள்ளார். அப்போது சமூகநலத்துறை விரிவாக்க அலுவலர் ஜெயபிரபா மற்றும் அவருக்கு உதவியாக உள்ள இடைத்தரகர் கார்த்திக் ஆகிய இருவரும், கோவிந்தராஜிடம் தாலிக்கு தங்கம் திட்டத்திற்கு பதிவு செய்ய லஞ்சம் கேட்டுள்ளனர்.
மேலும் கோவிந்தராஜின் வீட்டிற்கே சென்று ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டு வாங்கி உள்ளனர். மேலும் 3000 ரூபாய் பணம் தர வேண்டும் என்றும் கேட்டு நிர்ப்பந்தித்துள்ளனர். இதனால் மனவேதனையடைந்த கோவிந்தராஜ் கடலூர் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். அதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கோவிந்தராஜிடம் கொடுத்தனர். அதை சமூக அலுவலர் ஜெயபிரபா மற்றும் இடைத்தரகர் கார்த்தியிடம் கொடுக்க முற்பட்ட போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் அவர்கள் இருவரையும் தனியறையில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு கைது செய்து கடலூருக்கு அழைத்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் ஜெயபிரபா இரண்டு நாளில் ஓய்வு பெறப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.