
புவி வெப்பமடைதல் காரணமாக சுற்றுச்சூழலைப் பாதுகாக்க மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்திவருவதுடன், அரசு நிகழ்ச்சிகளில் மரக்கன்றுகளை நடுவதும் வழக்கமாக உள்ளது. தன்னார்வலர்கள் ஊரெங்கும் மரக்கன்றுகளை நட்டு, பராமரித்துவருகின்றனர்.
முதலமைச்சர், “வனப்பகுதிகளை அதிகரிப்போம்” என்று அறிவித்தார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், “எனக்கு யாரும் பொன்னாடைகள் அணிவிக்கவிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக மரக்கன்று வைத்து, அந்தப் படங்களைக் கொடுங்கள். ஆல்பமாக வைத்து பாதுகாப்பேன்” என்றார்.
இந்நிலையில், கடந்த வாரம் திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் மாமண்டுர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் தன்னார்வலர்களால் நட்டு சில வருடங்களாக வளர்க்கப்பட்ட மரக்கன்றுகளை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் வெட்டிய சம்பவம் தமிழ்நாடு முழுவதும் உள்ள மரங்களின் காதலர்களைக் கொந்தளிக்கச் செய்தது.
புதுக்கோட்டை மாவட்டம், புதுக்கோட்டை நகரில் நட்டு வளர்க்கப்படும் மரங்களை அடிக்கடி வெட்டி சாய்ப்பதாகவும், இது சம்மந்தமாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பிறகும் கூட கடை வாசலில் நிற்கும் மரக்கன்றுகளை வெட்டுவதை நிறுத்தவில்லை எனவும் அப்பகுதியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
நேற்று (23.08.2021) இரவு தெற்கு 2ஆம் வீதியில் உள்ள ஒரு கடை வாசலில் இருந்த 2 மரங்கள், வெட்டி அகற்றப்பட்டதைப் பார்த்த புதுக்கோட்டை மரம் நண்பர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து, வெட்டப்பட்ட மரங்களுக்கு மாலைகள் அணிவித்து பால் தெளித்து அஞ்சலி செலுத்திய நிகழ்வு நெகிழச் செய்தது. செட்டியாப்பட்டி ஜேசுதாஸ், மரங்களின் நன்மைகளைப் பற்றி பாடி அஞ்சலி செலுத்தினார்.