Skip to main content

தங்க சண்முக சுந்தரம் ரவுடிப் பட்டியலில் இருந்து விடுவிப்பு; விவசாய சங்கங்கள் வரவேற்பு

Published on 01/04/2023 | Edited on 01/04/2023

 

social activist thanga shanmugasundaram name released from wanted list

 

அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள கீழக்காவட்டாங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் பச்சை மனிதன் என அழைக்கப்படும் தங்க சண்முக சுந்தரம். பொது நலன், இயற்கை நலன், மக்கள் நலன் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டங்களை வித்தியாசமான போராட்டங்களை நடத்தி வந்தவர். அரியலூர் மாவட்டம் முடிகொண்டான் கிராமத்தில் வெள்ள நீர் பாதிப்பால் நெற்பயிர்கள் மூழ்கியதால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்காக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைந்து நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது இவர் மீது வழக்கு தொடரப்பட்டு ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் விசாரணை கைதியாக  அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.

 

இயற்கை வளங்களை காக்க வேண்டும்; நீர்த்தேக்கங்களும் அணைக்கட்டுகளையும் கட்டிடவும் ஏரி குளங்களை தூர்வாரிடக் கோரியும் பல்வேறு மாவட்ட ஆட்சியர்கள், தமிழக முதல்வர் உட்பட பலருக்கும் மனு செய்வது; சாயம் சார்ந்த பிரச்சனைகளுக்காகவும் போராடுவதோடு இயற்கை வளம் இயற்கை உணவு ஆகியவற்றை பாதுகாக்கவும் குரல் கொடுத்து வந்தவர். இப்படி  தனது அன்றாடப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தவர் மீது தமிழக காவல்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரியலூர் மாவட்ட காவல்துறை இவரை மக்கள் நல போராட்டங்களில் பங்கு கொண்டு செயல்படுவதை தடுக்கும் பொருட்டும் மிரட்டும் நோக்கத்தோடும் குடும்பத்தினரின் ஒத்துழைப்பை குறைப்பதற்காகவும் இவரை ரவுடிப் பட்டியலில் சேர்த்து வைத்திருந்தனர்.

 

அண்மையில் மாவட்டக் காவல்துறை துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ், திருமானூர் காவல்துறையினர் ஆய்வு நடவடிக்கைகள் மேற்கொண்டனர். அதில் தங்க சண்முக சுந்தரம் மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களை மட்டுமே நடத்தி வருகிறார் என்றும் எந்த ஒரு குற்ற நடவடிக்கைகளிலோ சமூக விரோதச் செயல்களிலோ ஈடுபடவில்லை என்றும் ஆராய்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளருக்கு பரிந்துரை செய்ததன் அடிப்படையில் மாவட்டக் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் உத்தரவின் பேரில் ரவுடி பட்டியலில் இருந்து தங்க சண்முக சுந்தரத்தை நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 

மேலும் இது குறித்து விவசாய சங்க பிரதிநிதிகள் கூறுகையில், "அகில இந்திய மக்கள் சேவை இயக்க விவசாயப் பிரிவு மாநிலத் தலைவராக இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கொள்கை வழியில் பயணிப்பவர் பச்சை மனிதன் என்று அழைக்கப்படும் தங்க சண்முக சுந்தரம். இயற்கை விவசாயம் சிறுதானியங்களை விரிவுபடுத்த குரல் கொடுப்பவர் ஏரி குளங்களை தூர்வாரிட வேண்டும் என்றும் வண்டல் மண்ணை விவசாயிகள் பயன்படுத்தி விவசாயம் செழிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வரை மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்த சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து அனுமதி வாங்கி காவிரி பாசனப் பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க காரணமாக போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டவர். தொடர் கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்தியவர். இவரை ரவுடிப் பட்டியலில் சேர்த்தது தவறு எனக் கருதியும் இதுநாள் வரை எந்த ஒரு குற்றச் சம்பவத்திலும் ஈடுபடவில்லை என்றும் ஆராய்ந்து அரியலூர் மாவட்டக் காவல்துறை அவரது பெயரை நீக்கியது வரவேற்கத்தக்கது" என்கிறார்கள் விவசாய சங்க பிரதிநிதிகள்.

 

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில செயற்குழு நிர்வாகி வேலுமணி மற்றும் அனைத்து விவசாயிகள் சங்க கூட்டமைப்பினர் அரியலூர் மாவட்ட நிர்வாகி டி.பழூர் பாண்டியன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி, இந்திய விவசாய சங்க நிர்வாகி வாரணவாசி இராஜேந்திரன், தஞ்சை மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகி அறுசீர் தங்கராசு, நம்மாழ்வார் வாழ்வாதாரப் பாதுகாப்பு இயக்க நிறுவனர் பா.பாரதிதாசன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் கூட்டமைப்பின் அரியலூர் சங்கர், தமிழ்க்களம் இளவரசன் உள்ளிட்ட பலரும் வரவேற்றுள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.