
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஜெகபர் அலி, திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கனிம வளம் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்குப் பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். இதனால், அவர் பல்வேறு அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்தார் என்று கூறப்படுகிறது. இத்தகைய சூழலில் தான் கடந்த 17ஆம் தேதி (17.01.2025) ஜெகபர் அலி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று ஜகபர் அலி மீது மோதி விபத்தானது. இந்த விபத்தில், ஜெகபர் அலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஜெகபர் அலியின் மரணத்தில் சந்தேகம் உள்ளதாகக் கூறி, அவரின் உறவினர்கள் திருமயம் அரசு மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மையைக் கண்டறிய வேண்டும் எனத் தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து ஆர்.ஆர். நிறுவனங்களின் உரிமையாளர்களான ராசு, அவரது மகன் தினேஷ் குமார், ராமையா, ராசுவின் டிப்பர் லாரி வைத்துள்ள நண்பர் முருகானந்தம் மற்றும் அவரது ஓட்டுநர் காசி ஆகிய 5 பேர் மீதும் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்திருந்தனர். இதற்கிடையே ஜெகபர் அலி கொலை வழக்கில் மெத்தனமாகச் செயல்பட்டதாக திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகர் மீது புகார் எழுந்ததாகக் கூறப்பட்டது. தொடர்ந்து ஆய்வாளர் குணசேகரனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் நேற்று அறிவித்திருந்தார்.
இந்த சம்பவம் பேசுபொருளாகி இருக்கும் நிலையில் சம்பவத்தின் எதிரொலியாக புதுக்கோட்டையில் திருமயம் தாசில்தார் புவியரசன் உட்பட நான்கு தாசில்தார்களை பணியிட மாற்றம் செய்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.