தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்கவும், கற்றல் இடைநிற்றலைத் தவிர்க்கவும் அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்படும் என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
முதற்கட்டமாக மாநகராட்சி மற்றும் கிராமப்புறங்கள், மலைக் கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 25 ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி நாட்களிலும் காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள், பெற்றோர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தத் திட்டம் படிப்படியாகத் தமிழகம் முழுவதும் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கிருஷ்ணராயபுரம் ஊராட்சியில் காலை உணவுத் திட்டம் குறித்து பள்ளி மாணவர்கள் வரைந்த ஓவியத்தை ட்வீட் செய்துள்ள தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், 'இந்த குழந்தைகளின் மகிழ்ச்சிக்கு முன்பு அத்தனை பொய் பரப்புரைகளும் தோற்றோடும். அவர்களின் ஓவியத் திறன் மேலும் சிறக்க வாழ்த்துகிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.