
ஈரோடு மாநகரில் ஜவுளி சந்தையானது பன்னீர்செல்வம் பார்க், திருவேங்கடசாமி வீதி, ஈஸ்வரன் கோவில் வீதி ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமை கூடும். இது தவிர இதர நாட்களில் தினசரி சந்தையும் நடக்கிறது. வாரந்தோறும் நடக்கும் ஜவுளி சந்தைக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத், மகாராஷ்டிரா போன்ற வெளி மாநிலங்களிலிருந்தும் வியாபாரிகள் நேரடியாக வந்து ஜவுளிகளை மொத்த விலையில் கொள்முதல் செய்து செல்வர்.
இந்நிலையில், தமிழ் மாதம் ஆடி 18ம் தேதியை ஆடிப்பெருக்காகத் தமிழக மக்கள் கொண்டாடுவது வழக்கம். நடப்பாண்டு ஆடிப்பெருக்கு வருகிற ஆகஸ்ட் மாதம் 3ம் தேதி(வியாழன்) கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு இந்த வாரம் கூடிய ஜவுளி சந்தைக்குத் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து உள்ளூர் வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.
இதனால் சில்லறை விற்பனை 30 சதவீதம் வரை நடைபெற்றது. ஆனால் அதே நேரம் கேரளா, கர்நாடக, ஆந்திரா போன்ற பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால் வெளிமாநில வியாபாரிகள் வரவில்லை. இந்த முறை மொத்த வியாபாரம் கடந்த வாரத்தை விட இந்த வாரம் சுமாராகவே நடந்தது. இன்று மொத்த வியாபாரம் 25 சதவீதம் மட்டுமே நடைபெற்றது. காட்டன் சுடிதார், காட்டன் வேட்டி, சட்டைகள், சிறுவருக்கான காட்டன் சட்டைகள், பனியன் ஜட்டிகள் விற்பனை அமோகமாக இருந்தது.