Skip to main content

பென்னிக்ஸ் கடை வாசலில் கண்ணீர் விடும் நாய்... ஆறுவருட வளர்ப்பு பாசம்...

Published on 11/09/2020 | Edited on 11/09/2020

 

Six years of pet affection ... a dog that sheds tears at the door of a fennix shop ...

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த பென்னிக்ஸின் வளர்ப்பு நாய் டாமி, அவரைத் தேடி அவரின் கடைக்கு வந்து, கடை வாசலிலேயே காத்திருப்பது பார்க்கும் அனைவரின் மனதையும் உருக்கியுள்ளது.
 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கடந்த ஜூன் மாதம் 20- ஆம் தேதி இரவில் ஊரடங்கு விதிகளை மீறி கடையைத் திறந்து வைத்துள்ளதாகக் கூறி செல்போன் கடை நடத்தி வந்த மகன் பென்னிக்ஸ் மற்றும் தந்தை ஜெயராஜ் இருவரையும் 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த சாத்தான்குளம் போலீசார், இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று இரவு முழுக்க கடுமையாக தாக்கியதில் அடுத்தடுத்த நாட்களில் மகன் பென்னிக்ஸ் மற்றும் தந்தை ஜெயராஜ் ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

 

சி.பி.சி.ஐ.டி போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து காவல் ஆய்வாளர், உதவி காவல் ஆய்வாளர் உட்பட 10 காவலர்களைக் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து சி.பி.ஐ இந்த வழக்கை தற்போது விசாரித்து வருகின்றனர். தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் இருவரின் மீது போடப்பட்ட FIR பொய்யாக ஜோடிக்கப்பட்டது என நீதிமன்றத்தில் சி.பி.ஐ தெரிவித்துள்ளது.

 

இந்தநிலையில் மூன்று மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த பென்னிக்ஸின் கடை திறக்கப்பட்டதும், பென்னிக்ஸ் வீட்டில் ஆறு வருடமாக பாசமாக வளர்த்த அவரது நாய் டாமி மொபைல் கடை உள்ளே சென்று அவரை தேடி கடையின் உள்புறம் முழுக்க சுற்றிவிட்டு பின் மீண்டும் வாசலில் வந்து சோகத்துடன் படுத்துக் கொள்கிறது. கடையைவிட்டு நகராமல் பென்னிக்சுக்காக காத்திருக்கிறது. முன்பு பென்னிக்ஸ் கடைக்குச் செல்லும்போதெல்லாம் டாமியும் அவருடன் கடைக்குச் செல்லும் என அங்குள்ளவர்கள் கூறுகிறார்கள். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; இன்ஸ்பெக்டர் ஜாமீன் மனு தள்ளுபடி

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
Satankulam father, son case; Inspector dismisses bail plea

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா காலத்தில் நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்ததாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தந்தை, மகன் தாக்கப்பட்டு உயிரிழந்த வழக்கில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஜாமின் கோரி 5 வது முறையாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிஐ தரப்பு வழக்கறிஞர், “சாட்சிகளில் ஒருவரான மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தப்பட்டுள்ளதால், வழக்கின் விசாரணை தாமதமாகிறது” என வாதிட்டார். இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, “மாஜிஸ்திரேட் பாரதிதாசனிடம் 28 நாட்கள் குறுக்கு விசாரணை நடத்தினால், அவர் தன்னுடைய பணிகளை செய்வாரா அல்லது தினசரி நீதிமன்றம் வந்து சாட்சியம் அளிப்பாரா?” என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இதனையடுத்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமின் மனுவை 5 வது முறையாக தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஏற்கெனவே காவல் ஆய்வாளர் ஸ்ரீதரின் ஜாமீன் மனு 4 முறை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Next Story

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு; எஸ்.ஐ. ஜாமீன் மனு தள்ளுபடி

Published on 08/09/2023 | Edited on 08/09/2023

 

Satankulam father son case SI Bail petition dismissed

 

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் போலீஸ் எஸ்.ஐ.யின் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியில் கடந்த 2020 ஆம் ஆண்டு கரோனா காலத்தில் நேரம் கடந்து கடையைத் திறந்து வைத்ததாக விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் காவல் நிலையத்தில், காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கினை சிபிஐ விசாரித்து வருகிறது.

 

இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ், தலைமைக் காவலர்கள் முருகன், சாமிதுரை, காவலர்கள் முத்துராஜா, செல்லத்துரை மற்றும் தாமஸ் பிரான்சிஸ் உள்ளிட்ட 9 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு மதுரை மாவட்ட முதன்மை அமர்வு முதலாவது நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகு கணேஷ் ஜாமீன் வழங்கக் கோரி 5வது முறையாகச் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களைக் கலைக்க வாய்ப்பு உள்ளதாகவும், வழக்கு விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதால் ஜாமீன் வழங்கக் கூடாது என சிபிஐ வாதத்தை முன் வைத்தது. மறைந்த ஜெயராஜின் மனைவி ஜெயராணி தரப்பிலும் எஸ்.ஐ. ரகு கணேஷுக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்ததால், நீதிபதிகள் ஜாமீன் மனுவை 5வது முறையாகத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.