Skip to main content

பட்டாசு ஆலையில் பெண் ஊழியர் ஆட்டம்! 'ஆபத்தை' உணரவில்லையே?

Published on 11/03/2020 | Edited on 12/03/2020

‘ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பு இருக்காது! அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகு இருக்காது!’- நாட்டுப்புறப் பாடலொன்றின் வரிகள் இவை!
 

சில வேலைகளைச் செய்பவர்கள் பாடிக்கொண்டே செய்வதை நாம் பார்த்திருப்போம். தாங்கள் பார்க்கின்ற வேலையை, அது ஒரு வேலை என்பதே தெரியாமல், எளிதாகவும் இன்பமாகவும் செய்வதற்காகத்தான், பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் வேலை செய்கிறார்கள்.  
 

ஆட்டமும் பாட்டமுமாக வேலை செய்வது எல்லா வேலைகளுக்கும் சரிவராது. குறிப்பாக,‘அபாயகரமான தொழில்’ என்று தொழிற்சாலை சட்டமே வரையறுத்துள்ள, பட்டாசுத் தொழிலுக்கு முற்றிலும் பொருந்தாது. 

SIVAKASI WOMEN EMPLOYEE DANCE VIRAL VIDEO IN SOCIAL MEDIA

பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டு கொத்துக்கொத்தாக உயிர்கள் மடிவதெல்லாம் சர்வ சாதாரணமாகிவிட்டது. பணியில் அலட்சியம், தவறாகக் கையாளும்போது ஏற்படும் உராய்வு, அனுமதிக்கப்படாத ஃபேன்சி ரகப் பட்டாசுகளைத் தயாரித்தல், உற்பத்தியை அதிகரிப்பதற்காக விதிமீறலாக அளவுக்கு அதிகமான ஊழியர்களை வேலை வாங்குதல் என வெடி விபத்துகளுக்கான காரணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். 
 

கடந்த பிப்ரவரி 19- ஆம் தேதி, விருதுநகர் மாவட்டம்- சாத்தூர் வட்டம்-  சின்னக்காமன்பட்டியிலுள்ள பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 6 பேர் பலியானார்கள். இதுபோன்ற விபத்துகள்,  பட்டாசு ஆலைத் தொழிலாளர்கள் மனதில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது போலும். அப்படித்தான் நினைக்கத் தோன்றியது - பட்டாசு ஆலை ஒன்றில் பெண் தொழிலாளர் ஒருவரின் குத்தாட்டத்தை வீடியோவில் பார்த்தபோது. 
 

பட்டாசுத்திரி தயாரிக்கும் அறையில், சக பணியாளர்கள் உற்சாகப்படுத்த,‘மொச்ச கொட்ட பல்லழகி’ என்ற பாடல் செல்போனில் ஒலிக்க, அந்தப் பெண் அப்படி ஒரு ஆட்டம் போடுகிறார். ஆண்- பெண் பேதம் பார்க்காமல், அந்த அறையில் தன்னுடன் வேலை பார்ப்பவர்களை ஆட்டத்தின் மூலம் சீண்டி சிரிக்க வைக்கிறார். இதை செல்போனில் வீடியோ எடுத்த பட்டாசுத் தொழிலாளி ஒருவர் பலருக்கும் இதை ‘ஷேர்’ பண்ணியிருக்கிறார். 
 

பட்டாசுத் தொழில் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம் என்று அரசுத்தரப்பில் சம்பிரதாயமான கூட்டங்களை நடத்துவதோடு சரி. அதன் விளைவுதான், தாங்கள் பார்க்கின்ற தொழில் அபாயகரமானது என்பதை, பட்டாசுத் தொழிலாளர்களே சரிவர உணராமல் இருப்பது. ஏதோ ஒரு பட்டாசு ஆலையில், யாரோ ஒரு பெண் ஊழியர், வேலை செய்யும் இடத்தில் ஆட்டம் போட்டார் என்பதற்காக, ஓட்டுமொத்த தொழிலாளர்களையும், அதே பார்வையில் பார்க்கக்கூடாதுதான். ஆனால், மனித உயிர்கள் மலிவானவை அல்லவே!

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றவரை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
The forcing a man to drink urine for eloping with married woman

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றுடன் ஒருவரை, கிராம மக்கள் அடித்து துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்து, காலணி மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர், திருமணமான பெண்ணுடன் ஊரைவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவிய நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்ற அவர்களைப் பிடித்து கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இது தொடர்பான வீடியோவில், பாதிக்கப்பட்ட நபரது தலைமுடி மற்றும் மீசையின் சில பகுதிகள் மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் தாக்கியுள்ளனர். அவரை வலுக்கட்டாயமாக பாட்டிலில் இருந்து சிறுநீரை குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவருடன் தப்பிச் சென்ற பெண்ணையும் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘வீடியோக்கள் காவல்துறையின் கவனத்திற்கு வந்த பிறகு, நாங்கள் பாதிக்கப்பட்டவரின் வீட்டை முன்கூட்டியே தொடர்பு கொண்டோம், ஆனால் அவர் அங்கு இல்லை. பாதிக்கப்பட்ட நபருடன் நான் தொலைபேசியில் பேசினேன். அவர் எங்களை சந்திப்பார். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் சம்பவம் நடந்த இடத்தை சரிபார்த்த பிறகு, சட்ட நடவடிக்கை தொடங்கப்படும். சம்பவத்தின் பின்னணி குறித்து இன்னும் தெளிவாக இல்லை. பாதிக்கப்பட்டவருடன் பேசிய பிறகு உறுதி செய்யப்படும் என்று’ என்று கூறினர். 

Next Story

ஓசியில் சிக்கன் பக்கோடா தராத கடைக்காரருக்கு கத்திக்குத்து-வெளியான பரபரப்பு காட்சிகள்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
shopkeeper who won't serve chicken baguettes;viral video

சென்னையில் ஓசியில் சிக்கன் பக்கோடா தராததால் கடைக்காரருக்கு கத்திக்குத்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை அம்பத்தூர் பகுதியில் சிக்கன் பக்கோடா கடை ஒன்றுக்கு வந்த இளைஞர்கள் சிலர் ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் கடைக்காரர் தர மறுத்ததால் அந்த இளைஞர்கள் கடை உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த சாலையில் திடீரென சிக்கன் பக்கோடா கடையில் மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் ஹெல்மெட் மற்றும் மரப்பலகையால் கடை உரிமையாளரை தாக்கியதோடு, கத்தியால் கடை உரிமையாளரின் கழுத்தில் தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளனர்.

அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பிடிப்பதற்குள் அந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பினர் .பக்கோடா கேட்டு தகராறு செய்த அந்த இளைஞர்கள் மது போதையில் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்த போலீசார் ஓசியில் சிக்கன் பக்கோடா கேட்டு தகராறு செய்து கடை உரிமையாளரை கத்தியால் தாக்கிய அந்த இளைஞர்களை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.