Skip to main content

பார் தகராறில் இளைஞர் அடித்துக் கொலை! - தப்பியோடிய நால்வருக்கு போலீஸ் வலை!

Published on 21/04/2021 | Edited on 21/04/2021

 

sivakasi bar incident

 

மது போதை மனிதர்களை என்ன பாடுபடுத்துகிறது? 

 

“ரிலாக்ஸுக்காக பாருக்குச் செல்கிறோம். சின்னதா ஒரு கட்டிங்தான். இதெல்லாம் உடம்புக்கு ஒண்ணும் பண்ணாது” என்று கூலாகச் சொல்லும் அனேகம் பேரை பார்த்திருப்போம்.

 

சிவகாசி – ரிசர்வ் லயன் – வசந்தம் நகரைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணனோ, கடந்த ஞாயிற்றுக்கிழமை (18-ஆம் தேதி), திருத்தங்கல் பிரைவேட் பார் ஒன்றில் மது அருந்தியபோது, அரவிந்தன் என்பவரோடு பிரச்சனை ஏற்பட்டு, கைகலப்பில் இறங்கிவிட்டார். தனக்கு விழுந்த அடியை ஒரு அவமானமாகக் கருதிய அரவிந்தன், தன் நண்பர்களுடன், இன்று (21-ஆம் தேதி) நவநீதகிருஷ்ணன் வீட்டுக்கே போய் தாக்கியதோடு, அவரை டூ வீலரில் கடத்திச் சென்று, பக்கத்து கிராமமான எஸ்.புதுப்பட்டி பகுதியில் வைத்து கொலை செய்து, உடலை வீசிவிட்டுத் தப்பியோடிவிட்டார்.
 

பார் தகராறால் கொலை செய்யப்பட்டு இறந்துபோன, கட்டிடத் தொழிலாளியான நவநீதகிருஷ்ணனுக்கு மனைவியும் இரண்டு மகன்களும் உள்ளனர். 31 வயது இளைஞரான நவநீதகிருஷ்ணனின் குடிப்பழக்கமும், போதையின்போது வெளிப்பட்ட மூர்க்கத்தனமும், உயிரைப் பறித்து, அவருடைய குடும்பத்தினரை நிர்க்கதியாக்கிவிட்டது. அதே குடிப்பழக்கம், தலைமறைவாகிவிட்ட அரவிந்தனையும் அவருடைய மூன்று நண்பர்களையும் கொலையாளிகள் ஆக்கி, எதிர்காலத்தை சூனியமாக்கிவிட்டது.  

 

சிவகாசி டவுண் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story

திமுக பிரமுகரின் வீடு சூறை; மோட்டார் சைக்கிள் எரிப்பு - திருச்சியில் பரபரப்பு

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
beaten on DMK executive house in Trichy

திருச்சி சின்னக்கடை வீதி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார்(45). இவரது வீட்டில் நேற்று இரவு மர்ம நபர்கள் ஐந்துக்கும் மேற்பட்டோர் நுழைந்து அவரது வீட்டை அடித்து நொறுக்கியதுடன் வெளியில் நின்று இருந்த இவரது மோட்டார் சைக்கிளை தீயிட்டு கொளுத்தினர். நள்ளிரவில் திடீரென   அக்கம்பக்கத்தினர் ஓடி வந்ததை கண்டதும் மர்ம நபர்கள்  அங்கிருந்து தப்பி சென்றனர். பிறகு அக்கம் பக்கத்தினர்  தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து  எரிந்து கொண்டிருந்த மோட்டார் சைக்கிளின் தீயை அணைத்தனர்.

இருப்பினும் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது. பின்னர் இது குறித்து சுரேஷ்குமார் கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரில் அவருக்கும் தாராநல்லூர் பகுதியைச் சேர்ந்த ஒரு சில நபர்களுக்கும் கோவில் சம்பந்தமாக பிரச்சனை இருந்து வந்துள்ளது. எனவே அவர்கள் தான் செய்திருக்கலாம் என புகாரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் மர்ம நபர்கள் வீடு புகுந்து, வீட்டை  அடித்து நொறுக்கி மோட்டார் சைக்கிளை எரித்த சம்பவம் அப்பகுதி முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. சுரேஷ்குமாருக்கும் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் பழக்கடை நடத்தி வரும் நபர் ஒருவருக்கும் கோவில் திருவிழா சம்பந்தமான பிரச்சனை ஒன்று ஏற்கெனவே உள்ளது. அதுமட்டுமின்றி தேர்தல் வேலைகளில் சுரேஷ்குமார் தீவிரமாக ஈடுபட்டதும், சுரேஷ்குமார் திமுக பிரமுகர் என்பதும் குறிப்பிடத்தக்கது