ADVERTISEMENT

தற்கொலைக்கு முயன்ற பெண்ணுக்கு வித்தியாசமான தன்டனை கொடுத்த நீதிபதி

10:07 AM Jul 09, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

" ஒரு வாரக்காலத்திற்கு அரசு மருத்துவமனைக்கு சென்று, அங்குள்ள தற்கொலைக்கு முயன்று சிகிச்சை எடுப்பவர்களுக்கு "தற்கொலைக் கூடாதெனவும், அது எவ்வளவு கொடியது எனவும் மன நல ஆலோசனை" வழங்கவேண்டும்." என தற்கொலைக்கு முயன்ற பெண்ணிற்கு வித்தியாசமான தண்டனையை அளித்துள்ளார் காரைக்குடியை சேர்ந்த நீதிபதி ஒருவர்.

ADVERTISEMENT

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செக்காலை ரோட்டிலுள்ள ஜேம்ஸ் அன் கோ- நிறுவனத்தில் பணிபுரிந்த கார்த்திகா க/பெ.ராஜ்குமார், " எனக்கு 11 மாத கைக்குழந்தை உள்ளது. இருப்பினும் குடும்ப சூழல் காரணமாக இங்கு பணியாற்றி வருகின்றேன். என்னைப் போல் இங்குப் பணிபுரியும் ஒரு பெண்ணின் துணையோடு மூன்று ஆண்கள் எனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வருகின்றனர்.

இதனால் என்னுடைய கணவருடன் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. நிர்வாகமும் கண்டிக்கவில்லை. அதனால் இந்த தற்கொலை முடிவினை எடுக்கின்றேன்." எனக் கூறிக்கொண்டே விஷத்தை வாயில் ஊற்றும் வீடியோவினை சமூக வலைத்தளங்களில் வெளியிட, அது வைரலாகி பிரச்சனை விஸ்வரூபமெடுத்தது. உடனடியாக இதனைக் கண்ட காரைக்குடி வடக்கு காவல் நிலைய எஸ்.ஐ.தினேஷ், பெண்னை மீட்க, அந்தப் பெண் விஷத்திற்குப் பதில் சோப் ஆயில் குடித்ததாக உறுதியாகியது. இது இப்படியிருக்க, அன்றைய மறு தினமே, ஜேம்ஸ் அன் கோ நிர்வாகம் சம்பந்தப்பட்டவர்களை கண்டித்ததாகவும், அதே நிறுவனத்தில் வேலையை தொடர்வதாகவும் மீண்டும் ஒரு வீடியோவினை வெளியிட்டார் அவர். காவல்துறையும் இருதரப்பையும் விசாரித்து கண்டித்து அனுப்பி வைத்தது.

இந்நிலையில், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு கார்த்திகாவின் தற்கொலை வீடியோவினை எதேச்சையாக பார்க்க, அதனை காரைக்குடி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் நீதிபதி பாலமுருகனுக்கு அனுப்பி வைத்து மீது நடவடிக்கை எடுக்க பணித்துள்ளது. நீதிபதி பாலமுருகனும் இரு தரப்பையும் வரவழைக்க விஷம் குடித்த கார்த்திகாவும் ஜேம்ஸ் அன் கோ-நிறுவனம் சார்பில் சீதாராமனும் காரைக்குடி வடக்கு காவல் நிலைய எஸ்.ஐ.தினேஷூம் ஆஜராகினர்.

அனைவரையும் விசாரித்த நீதிபதி பாலமுருகன் இறுதியாக அந்தப் பெண் கார்த்திகாவை நோக்கி, " இந்த உலகத்துல உனக்கு மட்டுமா பிரச்சனை..? சுற்றி திரும்பி பார்..!! எத்தனைப் பேருக்கு என்னென்ன பிரச்சனைன்னு தெரியும். பிரச்சனை உள்ளவங்களுக்கெல்லாம் தற்கொலை தான் தீர்வு என்றால் யாரும் இங்கு வாழமுடியாது.! உங்களுக்கு சமூக வலைத்தளங்கள் இருக்குன்னு அந்த வீடியோவினை பதிவிட்டுள்ளீர்கள்.

அது எத்தனை பேருக்கு.? எவிவித மன உளைச்சலை தந்தது அது தெரியுமா..? உயிரோடு மதிப்பு தெரியாத நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று ஒரு வாரக்காலத்திற்கு தினசரி மதியம் 1 மணிக்கு சென்று மாலை 6 மணி வரை அங்கு தங்கி தற்கொலைக்கு முயன்று சிகிச்சைப் பெற்று வரும் நபர்களுக்கு உயிரின் மதிப்பினை உணர்த்தும் வகையில் நீங்கள் மன நல ஆலோசனை வழங்கவேண்டும்..." என கண்டிப்புடன் வித்தியாசமான தண்டனையை வழங்க நீதிபதியின் தண்டனை வாழ்த்துகளுடன் வைரலாகியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT