Skip to main content

"ஒருவருஷம் தான் உங்க பொண்ணுக்கு டைம்னு சொல்லிட்டாங்க!" - பணம் இல்லாமல் துடிக்கும் தாய்!

Published on 09/03/2022 | Edited on 09/03/2022

 

sivagangai district college student need to help for the treatment

 

இன்னும் மூணு வருஷந்தா உங்க பொண்ணு உயிரோட இருப்பாங்க. புடிச்சத செஞ்சிபோடுங்க என டாக்டர் சொல்லி, ரெண்டு வருஷம் ஆயிடுச்சு. இன்னும் ஒருவருஷம்தான் என் பொண்ணு உயிரோட இருப்பாளாம். ட்ரீட்மெண்ட் பண்ணா காப்பாத்திடலாம்னு சொல்றாங்க. அவ்ளோ காசுக்கு நான் என்ன பண்றதுன்னு தெரியல. எதாச்சும் உங்களால பண்ணமுடியுமா எனக் கண்ணீர் ததும்பிய கண்களுடன் கையறு நிலையில் பேசத் தொடங்கினார் ஜெயபாரத தேவி.

 

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை அன்பு நகரைச் சேர்ந்தவர் ஜெயபாரத தேவி. திருமணம் ஆகி சில ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த கணவர், மூன்று குழந்தைகளுடன் ஜெயபாரத தேவியை கைகழுவிவிட்டார். இவர்களுக்கு 2 மகள், 1 மகன். வீட்டு வேலை செய்து, பத்து பாத்திரம் கழுவி, பிள்ளைகளை வளர்த்துவந்தார் ஜெயபாரத தேவி. பிள்ளைகள் வளர வளர அவர்களுக்கான தேவைகளும் வளர்ந்தது. அவர் ஒருவரின் சம்பாத்தியம் மட்டுமே நால்வரின் தேவைக்கு ஈடு கொடுக்கவில்லை. விளைவு, மகனின் படிப்பு தடைபட்டது. இருளில் தவிக்கும் குடும்பத்தைக் கரையேற்ற, பெயிண்டர் வேலைக்கு புறப்பட்டார் மகன். மூத்த மகள் சிவககங்கை அரசு பெண்கள் கல்லூரியில், முதலாமாண்டு பொருளாதாரம் படித்து வருகிறார். இரண்டாவது மகள் மானாமதுரையில் உள்ள பள்ளியில், 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார். பெரிய வசதி இல்லையென்றாலும், நிம்மதியான சூழலை நோக்கி வாழ்க்கை நகரத் தொடங்கியது.

 

பணம், காசு எல்லாம் வேண்டாம் ஆரோக்கியத்தோட இருந்துட்டா போதுமென நினைத்த ஜெயபாரத தேவியின் ஆசை, மிக விரைவிலேயே கருகிப் போனது. கல்லூரியில் படிக்கும் மூத்த மகளின் பெயர் லாவண்யா. கடந்த சில ஆண்டுகளாக, லாவண்யா வலிப்பு நோயால் அவதிப்பட்டுள்ளார். செருவாடு சேத்துவைத்திருந்த பணத்தையெல்லாம் பிரித்து, மகளுக்கு மருத்துவச் செலவு பார்த்துள்ளார் ஜெயபாரத தேவி. வலிப்பு நோயாக இருந்தவரை கூட அவர் பெரிதாக அச்சப்படவில்லை. இதன்பிறகு, லாவண்யாவின் பாதம், கை, கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் இருந்து தானாகவே ரத்தம் வெளியேறத் தொடங்கியிருக்கிறது. இதனால், பதற்றமடைந்த லாவண்யாவின் அம்மா, மருத்துவமனை அழைத்துச் சென்று வைத்தியம் பார்த்துள்ளார். இதற்காக, லாவண்யா நிறைய மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டு குணமாகியிருக்கிறார். தலைக்கு வந்தது தலைப்பாகையுடன் போனதே என நினைத்து நிம்மதி பெருமூச்சி விடுவதற்குள், அடுத்த பிரச்சனை அணிவகுத்து நின்றுள்ளது.

 

அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்ட மருந்து மாத்திரைகளால் மூளைக்குச் செல்லும் ரத்தக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் ஜெயபரத தேவி, சரிவர ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டால் மகளை காப்பாற்றிவிடலாம் எனக் கூறுகிறார். இல்லையென்றால், நீண்ட நாள் மகள் உயிரோடு இருக்கமாட்டார் எனக் கூறுகிறார். நம்மிடம் பேசும்போதே, லாவண்யா மயக்கம் போட்டு தரையில் அமர, அவரை பத்திரமாக கூட்டிச் சென்று படுக்கவைத்து போர்வை போர்த்திவிடுகிறார் தாயார் ஜெயபாரத தேவி. இதையெல்லாம், பார்த்துக்கொண்டு நிற்கும்போதே நமக்கும் கண்ணீர் முட்டியது. எல்லாம் சீக்கிரம் சரியாயிடும் அம்மா.. கவலைப்படாதீங்க எனச் சொல்லும்போதே முட்டிநின்ற கண்ணீர், கொட்ட ஆரம்பித்துவிட்டது. தாளமுடியாத கண்ணீருடன் அங்கிருந்து விடைபெற்றோம்.

 

லாவண்யாவுக்கு அரசு தலையிட்டு உதவவேண்டும் என்பதை விட, அவரை உயிருடன் காப்பாற்ற வேண்டும் என்பதே அனைவரின் ஏக்கமாகவும் இருக்கிறது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாகிஸ்தானுக்கு இதயம் கொடுத்த இந்தியா; தமிழ்நாட்டில் கிடைத்த மறுவாழ்வு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Indian gave heart to Pakistan girl for treatment

பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் ஆயிஷா (19). இவர் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார். அப்போது, ஆயிஷாவுக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, இந்தியா வந்த ஆயிஷா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

அந்த சிகிச்சையின் போது, ஆயிஷாவின் இதயம் செயலிழந்ததை உறுதிப்படுத்திய மருத்துவர்கள், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து உயிரை காப்பாற்றினார்கள். சிகிச்சை முடிந்த பிறகு, தனது சொந்த நாட்டிற்கு திரும்பிய ஆயிஷா, அங்கு தனது பள்ளிப்படிப்பை தொடர்ந்து படித்து வந்துள்ளார். 

இந்த நிலையில், பாகிஸ்தான் பெண்ணான ஆயிஷாவுக்கு கடந்த ஆண்டு மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவரின் உடல்நிலை மோசமானதையடுத்து அங்குள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு போதிய உபகரணங்கள் இல்லாததால் அவர் மீண்டும் சென்னை வந்து அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆயிஷாவுக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டால் தான் ஆயிஷாவை காப்பாற்ற முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்கள். 

அதன்படி, இதய தானத்துக்காக ஆயிஷா விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருக்கு அந்த நேரத்தில் மாற்று இதயம் கிடைக்கவில்லை. இதயம் கிடைக்கும் வரை ஆயிஷா, கடந்த 18 மாதங்களாக இந்தியாவிலேயே தங்கி வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் டெல்லியில் மூளைச்சாவு அடைந்த 69 வயதானவரின் இதயம், விமானம் மூலம் சென்னை கொண்டுவரப்பட்டு ஆயிஷாவுக்கு மாற்று இதய சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆயிஷாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது. 

பாகிஸ்தானுக்கும், இந்தியாவுக்கும் பல காலமாக பிரச்சனைகள் இருக்கும் நிலையில், பாகிஸ்தானைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் இந்தியாவில் தங்கி இருந்து வெற்றிகரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை முடிந்து உயிர் காப்பாற்றப்பட்டிருப்பது மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

Next Story

சிகிச்சையின் போது இளைஞர் பலி; விசாரணைக் குழு அமைக்க முடிவு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Youth treatment incident decision to set up an investigation team

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்துள்ளார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் உறுதியளித்துள்ளார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலை அமைச்சர்  மா. சுப்ரமணியன் தெரிவித்தார். இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.