Skip to main content

போட்டிப் போட்டுக் கட்சிகள் கொடுக்கும் நிவாரணம்... நிர்வாகிகள் இல்லாமல் திருப்புத்தூரை தக்க வைக்குமா தி.மு.க.?

Published on 29/05/2020 | Edited on 29/05/2020

 

sivagangai district admk and dmk parties coronavirus lockdown


கரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டி குறிப்பிட்ட பகுதியிலுள்ள மக்களுக்கு தி.மு.க.வினர் நிவாரணப் பொருட்கள் வழங்கினால், அடுத்த நாள் அதே பகுதிக்குச் சென்று, அதே மக்களுக்கு தன் பங்கிற்கு நிவாரணப் பொருட்களை அ.தி.மு.க.வும் வழங்கி வருகின்றது. இந்த நிவாரணப் பொருட்கள் வழங்குதல் போட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறுவதால் தொகுதியில் அரசியல் களைக்கட்டியது.
 


2018- ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 1,36,241 ஆண் வாக்காளர்களும், 1,39,783 பெண் வாக்களர்களுமாக, திருநங்கைகள் சேர்த்து மொத்தமாக 2,76,031 வாக்காளர்களைக் கொண்டது சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புத்தூர் சட்டமன்றத் தொகுதி. பொதுவாக விவசாயம் சார்ந்த தொகுதியாக இருப்பினும் கயிறு திரிக்கும் தொழிலும், செங்கல் காளவாசலும் இங்கு மிகுந்த வருவாயைக் கொடுக்கின்றது. 

முதலில் திருப்புத்தூர் சட்டமன்றத் தொகுதியாக இருந்து, திருக்கோஷ்டியூர் தொகுதியாக மாறிய இத்தொகுதி பின்னாளில் மீண்டும் திருப்புத்தூர் தொகுதியாக மாறியது. திருப்புத்தூர் தாலுகாவும், காரைக்குடி தாலுகாவிலுள்ள கானாடுகாத்தான், பள்ளத்தூர் மற்றும் கோட்டையூர் உள்ளிட்ட மூன்று பேரூராட்சிகளையும் கொண்ட இத்தொகுதியில் கடந்த 2006 தொடங்கி 2011 மற்றும் 2016- ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்று எம்.எல்.ஏ-வாக இருப்பது தி.மு.க.வினை சேர்ந்த பெரியகருப்பன். 

sivagangai district admk and dmk parties coronavirus lockdown

 


ஆனால், இந்த முறை இத்தொகுதியினை தி.மு.க.விற்கு விட்டுவிடக் கூடாது என்பதற்காக அ.தி.மு.க. தரப்பு தேர்தல் பணிகளை முன்கூட்டியே துவக்கியுள்ளது. இதற்காகவே அ.தி.மு.க.-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் தான் தான் என்பதனை அறிவிக்காதக் குறையாக தொகுதியில் முகாமிட்டு நிவாரணப் பொருட்களையும், மக்களுக்குத் தேவையான மருத்துவச் சேவைகளையும் வழங்கி வருகின்றார் நமது அம்மா நாளிதழின் ஆசிரியரும், அ.தி.மு.க. மாநிலச் செய்தி தொடர்பாளருமான மருது அழகுராஜ்.

திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காரையூர் பஞ்சாயத்து பகுதிகளுக்கு உட்பட்ட காரையூர், மாங்குடி, மணக்குடி, நாராயணமங்களம், சோழம்பட்டி, புதுவளவு பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் சுண்டக்காடு பகுதிகளில் உள்ள மக்களுக்கும் தலா 5 கிலோ அரிசி வீதம் அரிசி பொட்டலங்கள் மற்றும் 3 கிலோ காய்கறிகளை எம்.எல்.ஏ. பெரியகருப்பன் தலைமையிலான தி.மு.க. தரப்பு வழங்கியிருக்க, தலா 5 கிலோ அரிசி, 5 கிலோ மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட தொகுப்பினர் அதே சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உடன்பட்டி, சொக்கன்பட்டி, ஊதம்பட்டி மாதவரயான்பட்டி, ஆலம்பட்டி உள்ளிட்ட பல பகுதிளில் வழங்கியிருக்கின்றது மருது அழகுராஜ் தலைமையிலான அ.தி.மு.க. தரப்பு. இப்படியாகத் தொகுதி முழுவதும் ஏறக்குறைய 50 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்குப் போட்டி நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளது இரு கட்சியும்.
 

http://onelink.to/nknapp


திருப்புத்தூர் தொகுதியில் தி.மு.க. பெரியகருப்பனுக்கு தான்தான் தகுதியான மாற்று வேட்பாளர் என அ.தி.மு.க.வின் மருது அழகுராஜ் போட்டிப் போட்டு தேர்தல் பணிகளை துவக்கிய வேளையில், "இந்த முறை இதே தொகுதியில் மீண்டும் பெரியகருப்பன் வெற்றிப் பெற வாய்ப்பில்லை. தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் கட்சிக்கான கட்டமைப்பே இல்லை. பெரியகருப்பனுக்கு பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றுத் தரும் சாக்கோட்டை ஒன்றியத்தில் தற்பொழுது வரை மேற்கு ஒன்றியச் செயலாளர் பதவி நிரப்பப்படவில்லை. தன்னுடைய ஆதரவாளர் முக்கியமா..? கட்சி முக்கியமா..? என்றால் கட்சி தான் முக்கியம் எனத் தேர்தலை நடத்த ஒத்துழைப்பு தந்திருக்க வேண்டும். அதை விடுத்து சாக்கோட்டை மேற்கு ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் பதவியினை தன்னுடைய ஆதரவாளர் ஒருவருக்குப் பெற்றுத் தரும் வேகத்தில் தேர்தலே நடத்த விடாமல் செய்தவருக்கு எப்படிக் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றுவார்கள்..? இதுக்குறித்து தலைமைக்கும் தெரிவித்துவிட்டோம். வெறும் நிவாரணப் பொருட்கள் கொடுத்தால் வெற்றிப் பெற்று விடுவாரா என்ன..?" எனக் குமுறுகின்றனர் சாக்கோட்டை மேற்கு ஒன்றியக் கட்சியினர்.

முறையாக உட்கட்சித் தேர்தலை நடத்தி, கட்சியினர் அனைவரையும் அரவணைத்து, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் தேர்தலைச் சந்தித்தால் மட்டுமே திருப்புத்தூர் சட்டமன்றத் தொகுதியினை தக்க வைக்கும் தி.மு.க. தரப்பு. தலைமை கவனிக்குமா..?

 



 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்