Skip to main content

எம்.பி.க்களுக்கே இந்த நிலைமை என்றால்...? ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி 

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

 

ஆறு மாதங்களாகியும் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு டெல்லியில் வீடுகள் தயாராகவில்லை. நவீன இந்தியாவில் மத்திய அரசின் வேகமா இது. இந்தியாவினுடைய சட்டத்தை இயற்றும் வல்லமை படைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மனிதனுடைய தேவைகள் எப்படி பூர்த்தி செய்யப்படும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

 

E.R.Eswaran



இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இதுவரை வீடுகள் தயாராகவில்லை. 2014 -லிலும் இதே நிலைமைதான் ஏற்பட்டு பல கோடி ரூபாய்களை ஓட்டல்களுக்கு அரசாங்கம் தாரைவார்த்தது. இன்றைக்கு இருக்கின்ற அதிநவீன வசதிகளை கொண்டு ஒவ்வொரு காரியமும் சாதிக்கின்ற நேரம் குறைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதிகபட்ச வேகமாக மத்திய அரசு இயங்குகிறது என்று இந்திய மக்கள் நம்ப வைக்கப்படுகிறார்கள்.


ஒரு தொழிற்சாலைக்கு அனுமதி என்றாலும், ஒரு கொள்கை முடிவு என்றாலும் மத்திய அரசு மிக வேகமாக இயங்குகிறது என்று ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் செய்திகளை பார்க்க முடிகிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்பட அனைத்து அமைச்சர்களுமே பொதுமக்களுடைய குறைகளை உடனே தீர்ப்பதற்கு ஆசைப்படுவது போல் தான் நம்பிக்கை கொடுக்கிறார்கள்.


ஆனால் செயல்படுத்துவதில் மிகப்பெரிய சுணக்கம் இருக்கின்றது. இந்தியாவின் பொருளாதார மந்தநிலைக்கும் இதுதான் காரணம். முடிவுகள் வேகமாக எடுக்கப்படுவது போல தென்பட்டாலும் சம்பந்தப்பட்ட துறைகளுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் மிகவும் தாமதம் ஏற்படுகிறது.


புதிதாக GST வரி கொண்டு வந்ததை விட செயல்படுத்துவதில் ஏற்பட்ட சுணக்கம் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறது. பணமதிப்பு இழப்பு நடவடிக்கையின் செயல்பாட்டு தோல்விதான் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது.


டெல்லியில் மத்திய அரசு வேகமாக செயல்பட்டிருந்தால் புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இல்லங்கள் இவ்வளவு தாமதமாக வேண்டிய அவசியம் இருந்திருக்காது. இந்தியாவினுடைய சட்டத்தை இயற்றும் வல்லமை படைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண மனிதனுடைய தேவைகள் எப்படி பூர்த்தி செய்யப்படும்.


இந்தியாவினுடைய தொழில்துறை இன்றைக்கு சந்தித்து கொண்டிருக்கின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு சரியான நேரத்தில் முடிவுகள் எடுக்கப்படாதது தான் காரணம். இது அனைத்து நிலைகளிலும் தேசம் சந்திக்கின்ற பிரச்சினை. நவம்பர் 18-ஆம் தேதி குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன்பாவது இல்லங்களை ஒதுக்குவதற்கு சம்பந்தப்பட்ட அரசுத்துறை தயாராக வேண்டும்.


இதை ஒரு உதாரணமாக தான் சொல்ல விரும்புகிறோம். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். மத்திய அரசு விழித்துக்கொள்ள வேண்டும். பொருளாதார சரிவினுடைய தாக்கம் கொஞ்சம்கொஞ்சமாக மேலிருந்து கீழ்நோக்கி வந்து கொண்டிருக்கிறது. அடிமட்ட மக்கள் பாதிக்கப்படும் போது புரட்சி வெடிக்கும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர். 

Next Story

ராமர் படம் கொண்ட தட்டில் பிரியாணி; வைரல் வீடியோவால் பரபரப்பு!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Action against the shop owner on Biryani on Ram's paper plate set

டெல்லி ஜகாங்கிர்புரி பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில் கடந்த 21ஆம் தேதி அன்று ராமர் உருவம் கொண்ட தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், ‘ராமர் படத்துடன் கூடிய காகித தட்டுகளில் பிரியாணி பரிமாறப்படுகிறது. மேலும், அந்தத் தட்டுக்கள் குப்பை தட்டுகளிலும் வீசப்படுவதாக’ காட்டப்படுகிறது.  தூக்கி எறியும் தட்டுகளில் ராமரின் உருவங்களைக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை அடுத்து, கடையில் பொதுமக்கள் கூடி எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தகவல் அறிந்ததும் உள்ளூர் மக்களும், பஜ்ரங் தள் உறுப்பினர்களும் அந்தத் தட்டுகளில் பிரியாணி விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, காவல்துறையிலும் புகார் அளித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கடை உரிமையாளரைக் கைது செய்தனர். இது குறித்து போலீசார் தெரிவிக்கையில், ‘காகிதத் தட்டுகளின் மூட்டையிலிருந்து ஒன்று அல்லது இரண்டு தட்டுகளில் ராமரின் புகைப்படங்கள் இருந்தன எனக் கூறியுள்ளனர். மேலும் ஜஹாங்கிர்புரி காவல் நிலையம் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது’ எனத் தெரிவித்தனர்.

இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் மார்க்கெட்டிங் நோக்கத்திற்காக இதைச் செய்தார்களா? அல்லது வேறு எதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.