தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான சிலம்பம், சிறந்த தற்காப்பு கலையாகவும் விளங்குகிறது. சிலம்ப பயிற்சியினால் உடல்திறனும், மன வலிமையும் அதிகரிக்கிறது. எனவே சிலம்பம் சுற்ற பழகிக்கொள்ள வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தி ரீதாராசன், பிரிதாராசன் என்ற இரு சகோதரிகள் இணைந்து திருவள்ளூர் மாவட்டம் சோராஞ்சேரியில் தமிழச்சி சிலம்ப பயிற்சிப் பள்ளியை நடத்தி வருகிறார்கள்.
இந்த சிலம்ப பயிற்சி பள்ளியின் சிலம்பம் பயின்ற மாணவர்களுக்கான நட்சத்திர தகுதிநிலை சான்றிதழ் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக நடிகர் இமான் அண்ணாச்சி கலந்து கொண்டு பாராட்டு சான்றிதழும், பதக்கம், கோப்பை ஆகியவற்றை வழங்கினார். நிகழ்வினை ரீதாவும், பிரிதாவும் ஒருங்கிணைத்தனர். இருவரும் உயர்நீதிமன்ற வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.