ADVERTISEMENT

ஒரே நேரத்தில் இரட்டை தேர்வுகள்; குறிப்பிட்ட தேர்வுகளை ஒத்தி வைக்க அன்புமணி கோரிக்கை

08:30 PM Dec 01, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்திய வானிலை ஆய்வுத்துறைக்கான தேர்வும் தமிழக பல்கலைக்கழக ஒரு தேர்வும் ஒரே சமயத்தில் வருவதால், பல்கலைக்கழகத் தேர்வுகளை மட்டும் ஒத்திவைக்க தமிழக அரசின் உயர் கல்வித்துறை ஆணையிட வேண்டும் என பாமக அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், " இந்திய வானிலை ஆய்வுத்துறையில் 990 அறிவியல் உதவியாளர் பணிக்கான போட்டித் தேர்வுகள் திசம்பர் 14 முதல் 16 வரை நடைபெறவுள்ளன. அதே காலகட்டத்தில் திசம்பர் 10 - 20 வரை தமிழக பல்கலைக்கழகங்களில் எம்.எஸ்.சி இயற்பியல் படிப்புக்கான பருவத் தேர்வுகள் நடைபெறவுள்ளன. அறிவியல் உதவியாளர் பணிக்கு அடிப்படைத் தகுதி பி.எஸ்.சி இயற்பியல் பட்டம் ஆகும். அதனால், எம்.எஸ்.சி இயற்பியல் படிப்பவர்கள் இந்த பணிக்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். ஆனால், அதே நாட்களில் பல்கலை தேர்வுகளும் நடப்பதால் ஒரு தேர்வை எழுத முடியாத நிலை உருவாகியுள்ளது.

2017-ஆம் ஆண்டில் 1165 அறிவியல் உதவியாளர் பணிக்கு நடைபெற்ற தேர்வில் தமிழகத்திலிருந்து ஒருவர் மட்டும் தேர்ச்சி பெற்றார். நடப்பாண்டின் தேர்வை அதிக எண்ணிக்கையிலானவர்கள் எழுதினால் தான், தமிழகத்திலிருந்து அதிகம் பேர் வானிலை ஆய்வுத்துறை பணிக்குச் செல்ல முடியும். அதற்கு பல்கலைக்கழகத் தேர்வுகள் தடையாக இருக்கக் கூடாது. அதைக் கருத்தில் கொண்டு போட்டித் தேர்வு நடைபெறும் திசம்பர் 14, 15, 16 ஆகிய நாட்களில் நடைபெறவிருக்கும் பல்கலைக்கழகத் தேர்வுகளை மட்டும் ஒத்திவைக்க தமிழக அரசின் உயர் கல்வித்துறை ஆணையிட வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT