Skip to main content

எஸ்.ஐ. தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான உடல் தகுதித்தேர்வு தொடங்கியது...

Published on 30/09/2020 | Edited on 30/09/2020

 

S.I. Physical fitness test for those who have passed the exam started today at the Rajaratnam Stadium in Chennai

 

 

தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும் 969 காலி பணியிடங்களுக்கான காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு அறிவிப்பை 2019 மார்ச் மாதம் வெளியிட்டு, ஜனவரி 12, 13 தேதிகளில் தேர்வு  தமிழகம் முழுவதும் நடைபெற்றது. 

 

இந்த தேர்வில் முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாகவும், மறுதேர்வு வைக்க வேண்டும் எனவும் எஸ்.ஐ தேர்வு எழுதிய மாணவர்கள் நீதி மன்றத்தை நாடியுள்ள நிலையில், இதற்கான நிபுணர் குழு அமைத்து தேர்வு சரியான முறையில்தான் நடைபெற்றதா என்று விசாரணை நடத்தி நீதிமன்றதில் சர்மபிக்க சொன்ன நிலையில், அதனை சமர்ப்பிக்காமலே, தற்போது உடல் தகுதி தேர்வு பணியை  தேர்வாணையம் தொடங்கியுள்ளது.

 

இத்தேர்வானது  செப்டம்பர் 30ஆம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்தம் 5,478 பேருக்கு உடற்தகுதி தேர்வு நடைபெற உள்ள நிலையில் உடற்தகுதி தேர்வு நடைபெறும் 48 மணி நேரத்திற்கு முன்பு கரோனா பரிசோதனை செய்த மருத்துவ சான்றிதழை கொண்டுவர சொல்லி தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் எஸ்.ஐ. தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்குமே சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் உடல் தகுதித் தேர்வு நடைபெறும் என்ற நிலையில் முதல் நாளான இன்று மட்டும் 603 பேருக்கு உடல் தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில் உடல் தகுதித் தேர்வுக்கு வந்த மாணவர்கள் ஸ்டேடியத்தின் முன்பாக எந்த ஒரு பாதுகாப்பு இல்லாமல் கேட்டின் முன்புரத்தில் கூட்டம் கூட்டமாக  அமர்ந்து இருந்த நிலையில் அனைவருக்கும் கரோனா  அச்சத்தை உண்டாக்கியுள்ளது.

 

சென்னையில் கரோனா தீவிரமாக இருக்கும்போது எதற்கு தமிழ்நாட்டின் பல்வேறு  ஊர்களில் இருப்பவர்களை இங்கே வரவைக்கிறார்கள்? ஒரு மைதானத்தில் 600 பேரை வைத்து உடற்தகுதி தேர்வு செய்வது கரோனா காலத்தில் சரியா? அவர்கள் வரும் வழியில் கரோனா தொற்று ஏற்பட்டால் அது அனைவரையும் பாதிக்கும் என்று தேர்வாணையத்திற்கு  தெரியாதா? இவ்வளவு நிபந்தனைகளை சொல்லிய தேர்வாணையமே சமூக இடைவெளியும், பாதுகாப்பும் இன்றி, உடற்தகுதி தேர்வை இன்று நடத்துகின்றது.

 

மதுரை கிளை உயர்நீதிமன்றம் எழுத்து தேர்வின் முறைகேட்டை நிபுணர் குழுவை அமைத்து விசாரிக்க உத்தரவிட்ட நிலையில், எதற்காக இவ்வளவு அவசர அவசரமாக உடற்தகுதி தேர்வை, அதுவும் கரோனா காலத்தில் நடுத்துகின்றனர் என்ற கேள்வியை தேர்வுக்கு வந்தவர்கள் கூறுகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தந்தை உயிரிழப்பு;துயரத்திலும் துவண்டுவிடாமல் தேர்வெழுதிய மகள்

Published on 16/03/2024 | Edited on 16/03/2024
Daughter who has written class 12 exam

தந்தை உயிரிழந்த நிலையில் மகள் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய நெகிழ்ச்சி சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.

கடலூர் சூரப்பநாயக்கன் சாவடி பகுதியைச் சேர்ந்த ரத்தின வடிவேல். இவர் ஓய்வு பெற்ற அளவையர். இவர் வெள்ளிக்கிழமை காலை உடல்நிலை சரியில்லாத காரணத்தால் உயிரிழந்தார். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 16). இவர் கடலூரில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருக்கு வெள்ளிக்கிழமை இயற்பியல் தேர்வு இருந்துள்ளது.  

தந்தை உயிரிழந்ததை பார்த்து கதறி அழுதுள்ளார். ஒரு கட்டத்தில் அவர் தன்னை திடப்படுத்திக் கொண்டு  இயற்பியல் தேர்வு எழுதச் செல்வதாக கூறி தேர்வு எழுதும் பள்ளிக்கு சென்றுள்ளார். இவரை பார்த்து அங்கிருந்த சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மாணவிக்கு ஆறுதல் கூறி ஊக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் பள்ளியில் இயற்பியல் தேர்வு எழுதினார். பின்னர் தேர்வு முடிந்த பிறகு அவரது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டார். இந்நிகழ்வு கடலூரில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்; தேர்வு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
4000 Assistant Professor posts; Exam Notification


தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நான்காயிரம் உதவி பேராசிரியர்களுக்கான பணியிடங்களுக்கான தேர்வு தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு கலை மற்றும் பொறியியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் இதற்காக விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக 569 தமிழ் உதவி பேராசிரியர், 656 ஆங்கில உதவி பேராசிரியர் உட்பட நான்காயிரம் பணியிடங்கள் இந்த தேர்வின் மூலம் நிரப்பப்பட இருக்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.