Skip to main content

ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் 'இந்தி'யில் குறுஞ்செய்தி-அடுத்தகட்ட சர்ச்சை!!

Published on 04/10/2020 | Edited on 04/10/2020
Short message in 'Hindi' if booking train tickets

 

தமிழகத்தில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தால் இந்தியில் குறுஞ்செய்திகள் வருவதாக புகார்கள் எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

ஏற்கனவே புதிய கல்விக் கொள்கை தொடர்பாக தமிழகத்தில் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.  ஆளும் கட்சியான அ.தி.மு.க கூட தமிழகத்தில் இரு மொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும் என தெளிவாக தெரிவித்திருந்தது. புதிய கல்விக் கொள்கை வரைவு வெளியிடப்பட்டிருந்த நேரத்தில் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை துவங்கியிருந்த சமயத்தில் கோவையில் மாநகராட்சியில் மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் மூன்றாவது மொழியாக இந்தியை கற்றுக் கொள்ள விருப்பமா? தொழில் கல்வி மேற்கொள்ள மாணவருக்கு விருப்பம் உள்ளதா? போன்ற கேள்விகள் எழுந்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அதேபோல் அக்டோபர் 2 (நேற்று) காந்தி ஜெயந்தி அன்று பள்ளிகளில் நடைபெறும் வினா விடை போட்டிக்கான சுற்றறிக்கை விடப்பட்டிருந்தது. அந்த சுற்றறிக்கையில் போட்டியானது ஆங்கிலம் அல்லது இந்தியில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

 

TT


இந்நிலையில் ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பொழுது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் குறித்த தகவல்கள் குறுஞ்செய்தியாக வரும். எப்பொழுதுமே ஆங்கிலத்தில் இந்த குறுஞ்செய்திகள் வந்து கொண்டிருந்த நிலையில் தற்போது இந்தியில் இந்த குறுஞ்செய்திகள் வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. நாகர்கோவிலைச் சேர்ந்த செல்வி என்பவர் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார். ஆனால் அவருக்கு டிக்கெட் தொடர்பான குறுஞ்செய்தி இந்தியில் வந்துள்ளது. இந்தி தெரியாததால் அவர் இதுகுறித்து நாகர்கோவில் ரயில் பயணிகள் நலச் சங்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து நாகர்கோவில் ரயில் பயணிகள் நலச் சங்கம் தற்பொழுது மத்திய ரயில்வே துறை அமைச்சகம், அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருக்கு இந்த விவகாரத்தை எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.

'நிறைய மாநிலங்களில் இந்தி தெரியாத மக்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நீங்கள் இந்தியில் குறுஞ்செய்தி அனுப்பினால் அவர்களுக்கு என்னவென்றே புரியாது. எனவே அவர்களுக்கு புரிந்து கொள்வதில் சிரமம் இருக்கின்றது. எனவே சேவை என்பது பாதிக்கப்பட வாய்ப்புள்ளது' என அந்த புகாரில் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் 'இந்தி திணிப்பு' குறித்து தமிழகத்தில் அடுத்தகட்ட சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரயிலில் செல்போன்கள் திருட்டு; ஆந்திர வாலிபர் கைது

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
Cell phones stolen from train passengers; Andhra youth arrested

ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடிய இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருச்சி மாவட்டம் உறையூர் சாலை பகுதியை சேர்ந்தவர் முகமது ஜாசிம் (17). திருச்சி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் கடந்த 3ஆம் தேதி நண்பர்களுடன் கோவையில் நடக்கும் போட்டோகிராபி போட்டியில் பங்கேற்க செம்மொழி எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் செய்தார்.

ஈரோட்டில் ரயில் நின்றபோது முகமது ஜாசிம் தின்பண்டம் வாங்குவதற்காக ரயிலை விட்டு கீழே இறங்கினார். பின்னர் மீண்டும் ரயிலில் ஏறி தனது படுக்கைக்கு வந்தார். அப்போது அவர் வைத்திருந்த ரூ.20,000 மதிப்பிலான ஸ்மார்ட்போன் மாயமாகி இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் ஈரோடு ரயில்வே போலீசில் புகார் செய்தார்.

இதனையடுத்து ஈரோடு ரயில்வே போலீசார் ஒவ்வொரு நடைமேடையாக சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஈரோடு ரயில் நிலையத்தில் சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் அங்கும் இங்கும் நடமாடிக் கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரித்த போது அவர் ஆந்திர மாநிலம் நெல்லூர் உதயகிரி பகுதியைச் சேர்ந்த ஓம்காரம் வெங்கட சுப்பையா (27) என்பதும், அவர் ரயில் பயணிகளிடம் செல்போன்களை திருடுவதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரிய வந்தது.

அவரிடமிருந்து 12 ஸ்மார்ட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஈரோடு ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கட சுப்பையாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்கள் உரிமையாளர்கள் விவரங்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

Next Story

ஓடும் இரயிலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
young debate woman speaker rail issue

காரைக்காலில் இருந்து கடலூர் வழியாக பெங்களூர் சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலில் பட்டிமன்ற இளம் பெண் பேச்சாளரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று காலை காரைக்காலில் இருந்து புறப்பட்டு நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விருத்தாசலம் வழியாக பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரெயிலில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த  இளம் பட்டிமன்ற பெண் பேச்சாளர் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ரயில் கடலூர் துறைமுகம்,  குறிஞ்சிப்பாடி நெய்வேலி இடையில் காலை சுமார் 10 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அந்தப் பெண் பயணம் செய்த பெட்டியில் ஒரு சிலர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது முழு மது போதையில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி அந்த இளம் பெண் எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தார்.

அப்படி அமர்ந்த அவர், அடிக்கடி அந்த இளம் பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததோடு, திடீரென தனது ஆடையை விலக்கி இளம்பெண்ணை பார்த்து ஆபாசமாக, அருவருப்பான வகையில் செய்கை செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், அந்த மனிதனை கண்டித்ததோடு அவரது செய்கையை செல்போனில் படம் பிடித்துள்ளார். இளம் பெண் கண்டித்தும் அந்த போதை ஆசாமி, தனது ஆபாச செய்கையை நிறுத்தவில்லை. இதனால் கோபமடைந்த அந்த பெண், அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். ரயில் நெய்வேலி அருகே நிறுத்தப்பட்டது. 

பிறகு அதே ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக பயணம் செய்து கொண்டிருந்த ரயில்வே காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் சம்பவம் நடந்த பெட்டிக்கு விரைந்து சென்றார். அவரிடம் அந்த இளம் போதை ஆசாமி குறித்து புகார் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அந்த நபரை கைது செய்து விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.