Skip to main content

அரசியல் பிரமுகர் ஓட ஓட விரட்டி கொலை... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

Shocking information released during the investigation

 

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் வசித்துவந்தவர் வசீம் அக்ரம். இவர் மனிதநேய ஜனநாயக கட்சியில் முன்னாள் மாநில துணை செயலாளராக இருந்தார். வாணியம்பாடி நகர் இஸ்லாமிய கூட்டு இயக்கத்தில் உறுப்பினராக செயல்பட்டுவந்தார். வசீம் அக்ரம் ஜீவா நகரில் உள்ள பள்ளிவாசலுக்கு செப்டம்பர் 10ஆம் தேதி மாலை 6 மணிக்குச் சென்று தொழுகை முடித்துவிட்டு, தனது 7 வயது குழந்தையுடன் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தார். அப்போது சுமார் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சுற்றி வளைத்து சாலையில் ஓட ஓட விரட்டி சிலர் பார்த்துக்கொண்டிருக்கும்போதே சரமாரியாக வெட்டினர். பின்னர் குற்றவாளிகள் காரில் ஏறி தப்பி சென்றனர். 

 

வாணியம்பாடி நகர காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து கொலை செய்யப்பட்டவரின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கொலையாளிகளைக் காவல்துறையினர் உடனடியாக கைது செய்ய வேண்டுமென உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்து நிலையம் அருகில் வாணியம்பாடி - திருப்பத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாணியம்பாடி பேருந்து நிலையம் மற்றும் முக்கிய வீதிகளில் உள்ள கடைகள் முடப்பட்டன, பதற்றம் காரணமாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வேலூர் சரக டி.ஐ.ஜி பாபு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு), வேலூர் எஸ்.பி. செல்வகுமார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்கள். பின்னர் 3 தனிப்படை அமைத்து குற்றவாளிகளைப் பிடிக்க உத்தரவிடப்பட்டது.  

 

Shocking information released during the investigation

 

மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரமாக்கப்பட்டது. காஞ்சிபுரம் அருகே பாலுசெட்டி சத்திரம் பகுதியில் நடந்த வாகன சோதனையில், வேலூரிலிருந்து சென்னை நோக்கி சென்ற காரில் இருந்து சிலர் இறங்கி ஓடுவதைக் கண்ட போலீசார், அந்தக் காரை மடக்கிப் பிடித்தனர். அப்போது அதில் இருந்த வண்டலூர் அடுத்த ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்கின்ற ரவி, வண்டலூர் பகுதியைச் சேர்ந்த டில்லி குமார் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரித்தபோது, வாணியம்பாடியில் கொலை செய்தவர்கள் என்பதைக் கண்டறிந்தனர். தனது கஞ்சா விற்பனையை போலீசாருக்கு காட்டிக்கொடுத்ததால் கோபமான இம்தியாஸ், வசீம் அக்ரமை கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

அவர்கள் தந்த தகவலின் பேரில் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் உள்ள இம்தியாஸ் என்பவர் கிடங்கில் 10 பட்டா கத்தியைக் கைப்பற்றினர். அதோடு 8 கிலோ கஞ்சா, 10 செல்ஃபோன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதில் சம்மந்தப்பட்ட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தப்பி ஓடிய கார் ஒட்டுநர் உட்பட 5 பேரை போலீசார் தேடிவருகின்றனர். வாணியம்பாடியில் அசம்பாவிதம் எதுவும் நடக்காமலிருக்க வேலூர் டி.ஐ.ஜி பாபு தலைமையில் 2 எஸ்.பிகள், 1 ஏ.டி.எஸ்.பி, 6 டி.எஸ்.பிக்கள், 15 ஆய்வாளர்கள், 40 உதவி ஆய்வாளர்கள் உட்பட 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.