Skip to main content

மாணவருக்கு நள்ளிரவில் நடந்த ’ராகிங்’ கொடுமை; எஃப்.ஐ.ஆரில் வெளியான அதிர்ச்சி தகவல்

Published on 10/11/2023 | Edited on 10/11/2023

 

Shocking information in F.I.R about The 'ragging' of the student at covai

 

கோவையில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வரும் மாணவர் ஒருவரை சீனியர் மாணவர்கள் ராகிங் செய்ததாகக் கூறப்பட்டது. மது குடிக்க பணம் தராததால் இரண்டாம் ஆண்டு மாணவனை சீனியர் மாணவர்கள் ஏழு பேர் மொட்டை அடித்து ராகிங் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் இதுகுறித்து கோவை பீளமேடு காவல்துறையில் புகார் கொடுத்திருந்தனர். அதன் பேரில் விசாரணையில் ஈடுபட்ட போலீசார், கல்லூரியில் பயின்று வந்த சீனியர் மாணவர்கள் ஏழு பேரைக் கைது செய்திருந்தனர். 

 

இந்த நிலையில், இந்த வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது, ‘பாதிக்கப்பட்ட மாணவர் அந்த கல்லூரி விடுதியில் சி பிளாக் முதல் மாடியில் தங்கியுள்ளார். இதனிடையே, கடந்த 6 ஆம் தேதி தனது அறையில் தூங்கிக் கொண்டிருந்த மாணவரின் அறைக் கதவை சிலர் தட்டியுள்ளனர். இதனையடுத்து, தூங்கிக் கொண்டிருந்த அந்த மாணவர் எழுந்து கதவைத் திறந்து பார்த்தார். அப்போது, சீனியர் மாணவர்களான சந்தோஷ், ஐயப்பன், யாழிஸ், மணிகண்டன், நித்யானந்தன், தில்பர், வெங்கடேஷ், தரணிதரன் ஆகியோர் வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த மாணவர்கள், இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவரிடம் பணம் கேட்டுத் தொந்தரவு செய்துள்ளனர். 

 

இதையடுத்து, அவரின் சட்டையைப் பிடித்து இழுத்து 4வது மாடியில் உள்ள அறைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அறையில் வைத்து அந்த மாணவரைச் சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அதன் பின்னர், வெங்கடேஷ், சந்தோஷ் ஆகியோர் சேவிங் செய்யும் டிரிம்மர் ஒன்றை எடுத்து அந்த மாணவருக்கு மொட்டை அடித்துள்ளனர். மேலும், அந்த மாணவரை முட்டி போட வைத்து கீழே விழுந்த முடியை சுத்தம் செய்து குப்பைத் தொட்டியில் போட வைத்துள்ளனர். இதனையடுத்து, இங்கு நடந்த சம்பவத்தை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டி அந்த மாணவரை வெளியே அனுப்பியுள்ளனர். இதனால், வேதனையடைந்த அந்த மாணவர் அழுது கொண்டே தனது அறைக்கு வந்துள்ளார். 

 

அதன் பின்னர், அந்த மாணவர் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் விரைந்து வந்து பீளமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில், அந்த மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து, ‘ராகிங்’ செய்த வழக்கில் கைதான 7 மாணவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட வெங்கடேஷ் என்ற மாணவர் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீஸார் வலைவீசித் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அர்ச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 27/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கு: என்.ஐ. ஏ அதிகாரிகள் 2-வது நாளாக விசாரணை

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
N.I.A in connection with Coimbatore car blast case. Officer 2nd day of investigation

கோவை மாவட்டம் உக்கடம் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கார் குண்டு வெடிப்பு நடந்தது. இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக உமர் பரூக், அப்துல்லா ஆகியோரை என். ஐ. ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். அவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர். அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்களையும் அடையாளம் கண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் உமர் பரூக், அப்துல்லா ஆகியோரிடம் அதிகாரிகள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் ஈரோடு மாவட்டம் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்னசாலட்டி என்ற பகுதியில் வசிக்கும் குப்புசாமி (65) என்பவர் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றது தெரிய வந்தது. குப்புசாமி ஆடு மாடுகளை விற்பனை செய்யும் தரகராக இருந்து வருகிறார். இது மட்டும் இன்றி உமர் பரூக், அப்துல்லா ஆகியோருடன் குப்புசாமி குன்றி வனப் பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு என்ற அருவியில் ஒன்றாக குளித்த போட்டோவும் என்.ஐ.ஏ அதிகாரிகளுக்கு கிடைத்தது.

இதனையடுத்து குப்புசாமியிடம் விசாரணை நடத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி நேற்று முன்தினம் கோவையில் இருந்து என்.ஐ.ஏ. அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் கடம்பூர் மலைப்பகுதி அடுத்த சின்ன சாலட்டி பகுதிக்குச் சென்றனர். பின்னர் அவர்கள் நேரடியாக குப்புசாமி வீட்டிற்கு சென்று அவரிடம் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். அப்போது அவரிடம் உமர் பரூக், அப்துல்லாவை உங்களுக்கு எப்படி தெரியும்?. அவர்களுக்கும் உங்களுக்கும் எப்படி பழக்கம் என அடுக்கடுக்கான பல கேள்விகளைக் கேட்டனர். பின்னர் உமர் பரூக், அப்துல்லா மற்றும் குப்புசாமி ஆகியோர் போட்டோ எடுத்துக் கொண்ட குன்றி வனப்பகுதியில் உள்ள ஜலுக்க மடுவு அருவிக்கு என்ஐஏ அதிகாரிகள் செல்ல முயன்றனர். ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அதிகாரிகள் திரும்பி விட்டனர்.

இதைத் தொடர்ந்து நேற்று 2-வது நாளாக மாலை 6.30 மணி அளவில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குன்றி மலைப் பகுதிக்கு வந்தனர். அங்கு பல்வேறு இடங்களுக்கு சென்ற அதிகாரிகள் விசாரணை நடத்தினர். உமர் பரூக், அப்துல்லா ஆகியோர் இந்தப் பகுதியில் ஏதும் பயிற்சி பெற்றார்களா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடித்துக் கொண்டு இரவு 9.30 மணி அளவில் கிளம்பி சென்றனர். மீண்டும் அடுத்த வாரம் விசாரணைக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.