Skip to main content

காதில் விஷம் ஊற்றி காதல் தம்பதி தற்கொலை! மயிரிழையில் உயிர் தப்பிய குழந்தைகள்!!

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

shocking incident in salem

 

ஆத்தூர் அருகே, மாமியார் மருமகள் மோதல் முடிவுக்கு வராததால், விரக்தி அடைந்த காதல் தம்பதியினர் காதில் விஷத்தை ஊற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டனர். குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கொல்ல முயன்றபோது, சுதாரித்துக்கொண்டு தப்பி ஓடியதால் நல்வாய்ப்பாக அவர்கள் உயிர் பிழைத்தனர்.

 

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புங்கவாடியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (37). நெல் கதிரடிக்கும் வாகன ஓட்டுநராக இருந்தார். இவருடைய மனைவி சத்யா (33). கடந்த 13 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு அபிநயா (13) என்ற மகளும், சஞ்சித் (11) என்ற மகனும் உள்ளனர்.

 

வேலை தொடர்பாக வேல்முருகன் அடிக்கடி வெளியூர்களுக்குச் சென்று விடுவார். அப்போது, சத்யாவுக்கும் கணவரின் தாயார் தனலட்சுமிக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. மாமியார் மருமகள் பிரச்னை தீரும் வரை நான் வேலைக்குச் செல்வதில்லை எனக் கூறிய வேல்முருகன், கடந்த 2 மாதமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார்.

 

shocking incident in salem

 

இதைப்பார்த்த தனலட்சுமி, “உன்னால்தான் என் மகனின் வாழ்க்கை வீணாகி, நிம்மதி இல்லாமல் போய்விட்டது” எனக் கூறியுள்ளார். பிப். 9ம் தேதியன்றும் மாமியார், மருகளுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி சத்யா, கணவரிடம் முறையிடுள்ளார். அதன்பேரில் தன் தாயாரிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்தார். ஆனால், தாயாரோ மகனையும் திட்டியுள்ளார்.

 

தன்னைப் பெற்ற தாயின் பக்கம் நிற்பதா, பெற்றோரை உதறிவிட்டு தன்னையே நம்பி வந்த மனைவியின் பக்கம் நிற்பதா எனத் தெரியாமல் வேல்முருகன் கலங்கித் தவித்தார். இருதலைக்கொள்ளி எறும்பு போல தவித்து வரும் கணவனின் நிலை கண்டு, சத்யாவும் மனம் உடைந்தார். முடிவே இல்லாமல் தொடரும் இந்த நிம்மதியற்ற வாழ்க்கை தேவையில்லை என்ற முடிவுக்கு வந்தனர்.

 

இதையடுத்து பிப். 9ம் தேதியன்று மாலை, அவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு மஞ்சினி அருகே உள்ள வால் கரடு பகுதிக்குச் சென்றனர். சத்யாவும், வேல்முருகனும் தங்கள் காதுகளில் விஷத்தை ஊற்றிக்கொண்டனர். குழந்தைகளுக்கும் விஷத்தைக் கட்டாயப்படுத்திக் குடிக்க வைத்துள்ளனர். கொஞ்சம் குடித்தபோது கசப்பாக இருந்ததால், அவர்கள் பெற்றோரை விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

 

குழந்தைகள் இருவரும் அளித்த தகவலின்பேரில் உறவினர்கள் மற்றும் ஆத்தூர் காவல்நிலைய காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். ஆனால் அதற்குள் சத்யாவும், வேல்முருகனும் இறந்துவிட்டனர். இதைப்பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 

காவல்துறையினர் சடலங்களை மீட்டு, உடற்கூராய்வுக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறிதளவு விஷம் குடித்திருந்த குழந்தைகள் இருவரும் சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர். குடும்பத் தகராறில் கணவன், மனைவி இருவரும் காதில் விஷம் ஊற்றி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.