கோவை ஒண்டிப்புதூர் பகுதியைச் சேர்ந்த 15 வயது பள்ளி மாணவிகள் இருவர் அருகே உள்ள தனியார் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்கள். இந்நிலையில், நடந்து முடிந்த அரையாண்டு தேர்வு விடைத்தாள்கள் பள்ளியில் கொடுக்கப்பட்டது.
இரு மாணவிகளும் சில பாடங்களில் குறைவானமதிப்பெண்களைப் பெற்றதால் வீட்டில் பெற்றோர்கள் திட்டுவார்கள் எனப் பயந்துள்ளனர். இதனால் இரு மாணவிகளும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர்.
அதன்படி இரு மாணவிகளும் தங்கள் வீடுகளில் இருந்த சானிடைசரை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றுள்ளனர். பள்ளியில் சானிடைசரை குடிநீரில் கலந்து குடித்துள்ளனர். இதனால் சிறிது நேரத்திற்குள் அவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இரண்டு பேரையும் கண்ட ஆசிரியர்கள் மாணவிகளிடம் என்ன என்று கேட்டதற்கு தாங்கள் செய்ததைக் கூறியுள்ளார்கள்.
இதனைத்தொடர்ந்து பள்ளி நிர்வாகம் மாணவிகளின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்துள்ளது. பின் இரு மாணவிகளும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த சூலூர் காவல்துறையினர் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.