A shock awaited the youth on Touring with the help of Google Map

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதி, தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களின் எல்லைப் பகுதியாக உள்ளது. இந்த மாநிலங்களில் இருந்து வரும், சுற்றுலா பயணிகள், கூடலூர் பகுதி வழியாக உதகை போன்ற பிற சுற்றுலாத்தலங்களுக்கு செல்கின்றனர்.

இந்த நிலையில், கர்நாடகமாநிலத்தைச் சேர்ந்த சில இளைஞர்கள், 3 நாள் தொடர் விடுமுறையையொட்டி தங்களது சொகுசு கார் மூலம் நீலகிரிக்கு சுற்றுலா வந்துள்ளனர். சுற்றுலாவை முடித்துவிட்டு, பின்னர் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல ‘கூகுள் மேப்’ உதவியுடன் காரில் சென்று கொண்டிருந்தனர். அதன்படி, கூடலூர் அருகே வரும் போது, ‘கூகுள் மேப்’ காட்டிய வழியில் திடீரென செங்குத்தான படிக்கட்டுகள் வந்ததால், அதிர்ச்சியடைந்த கார் ஓட்டுநர் காரை சாதுரியமாக படிக்கட்டுகளில் நிறுத்தினார்.

அதன் பின்னர், கார் ஓட்டுநர் காரில் இருந்து இறங்கி ஊர்மக்கள் உதவியை நாடியுள்ளார். இதையறிந்துஉடனடியாக அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் மற்றும் பிற சுற்றுலா பயணிகள் அங்கு வந்து, காரை மீட்க முயற்சி செய்தனர். ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு படிக்கட்டுகளில் கற்களை அமைத்து அந்தக் காரை தேசிய நெடுஞ்சாலைக்கு கொண்டு வந்தனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.