Skip to main content

அதிரடி காட்டிய அறநிலையத்துறை; அர்ச்சனை தட்டில் பணம் போடச் சொல்லும் சிவாச்சாரியார்கள்

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

Shivacharyas are said to put money in the offering plate

 

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் நூற்றுக்கு அதிகமான கோவில்கள் மற்றும் சில குளங்கள் உள்ளன. இதில் பல கோவில்கள் தனியார் வசம் உள்ளன. சில கோவில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் வசம் உள்ளன. கடந்த காலங்களில் பராமரிப்பு இல்லாமல் இருந்த இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான கோவில்கள், குளங்களைப் பராமரிப்பதாகக் கூறி இந்து அமைப்பினர் மற்றும் தனியார் ட்ரஸ்டிகள் அனுமதி பெற்றன. கோவில் புனரமைப்பு என்கிற பெயரில் லட்சங்களில் நன்கொடை வாங்கி கோவில் புனரமைத்தனர். இதுகுறித்த கணக்குகள் எதுவும் வெளிப்படையானதாக இல்லை. அதோடு பராமரிப்பு என்கிற பெயரில் கிரிவலப் பாதையில் உள்ள கோவில்களை, அஷ்ட லிங்கங்களைப் பராமரித்தனர். காலப்போக்கில் இங்கு அதிகளவு வருமானம் வருவதோடு இதனை வைத்து தனியாக வசூல் வேட்டை நடத்தினர். இதனைப் பக்தர்கள் எதிர்த்ததால் இந்து சமய அறநிலையத்துறை தங்கள் வசம் கோவிலை எடுத்துக்கொண்டது.

 

திருவண்ணாமலை சேஷாத்திரி ஆசிரமம் அருகே கிரிவலப் பாதையில் அக்னி தீர்த்தம் என்கிற குளம் உள்ளது. சிதிலமடைந்திருந்த அந்த குளத்தை சீரமைக்கிறோம் என சிதம்பர சோனாசல சுவாமிகள் என்பவர் அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்று அதனை நன்கொடைகள் மூலமாக புனரமைத்தார். குளத்தை புனரமைப்பு செய்து சீரமைத்தவர் குளக்கரையில் சிறிய நந்தி மற்றும் சிவன் சந்நதியை உருவாக்கி பூஜைகள் செய்யத் துவங்கினார்.

 

வார இறுதி நாட்கள், பிரதோஷம் மற்றும் பௌர்ணமி தினங்களில் அதிகளவு இங்கு பக்தர்கள் கூட்டம் வந்துகொண்டிருந்தது. இதன் வருமானமும் அறநிலையத்துறை கணக்குக்கு வரவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து கோவில் சிவாச்சாரியார்கள் தரப்பு, கோவில் அறங்காவலர்கள் மற்றும் அதிகாரிகளிடம் புகார் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் 29 ஆம் தேதி மாலை காவல்துறை உதவியுடன் கோவிலை அறநிலையத்துறை அதிகாரிகள் கையகப்படுத்தி தங்களது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தனர்.

 

இதுபோல் கிரிவலப் பாதையில் பல கோவில்கள் தனியார் வசம் உள்ளன. அங்கெல்லாம் உண்டியல் வைத்து பக்தர்களிடம் வசூல் செய்கின்றனர். இந்து சமய அறநிலையத்துறை விதிப்படி தனியார் கோவில்களில் உண்டியல் வைத்தாலே அதனை அறநிலையத்துறை கையகப்படுத்தலாம் என்கிறது. அதன்படி பக்தர்களிடம் வசூல் வேட்டை நடத்தும் தனியார் கோவில்களைக் கையகப்படுத்த வேண்டும். இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் கிரிவலப் பாதையில் உள்ள கோவில்களில் சிசிடிவி கேமரா அமைத்து உண்டியலில் பணம் போடச் சொல்லாமல் அர்ச்சனை தட்டில் பணம் போடச் சொல்லும் சிவாச்சாரியார்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை அண்ணாமலையார் பக்தர்கள் வைக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவில் காவலாளி அடித்துக் கொலை; போலீசார் தீவிர சோதனை!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
69-year-old temple watchman was beaten to passed away near Mappedu

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மப்பேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுமாநகர் பகுதியில் புதிதாக விநாயகர் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் கட்டுமான பணிக்காக செங்கல் இறக்கி வைத்திருப்பதால், அதனை பாதுகாப்பதற்காக  கோவிலுக்கு காவலாளியாக செல்வம் (69) என்ற முதியவர் கடந்த இரண்டு நாட்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் இன்று காலை கோவில் காவலாளி செல்வம் தலையில் பலத்த காயங்களுடன் விழுந்து கிடப்பதைக் கண்ட அப்பகுதி மக்கள் மப்பேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து மப்பேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு நடத்தினர். தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த காவலாளி செல்வம் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், முதியவர் செல்வத்திற்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் பிள்ளைகள் ஏற்கெனவே இறந்துவிட்ட நிலையில், தனியாக வாழ்ந்து வந்தது தெரிந்தது. மப்பேடு மாநகரில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த இரண்டு நாட்களாக கோயில் கட்டுமான பணி காரணமாக இரவு காவலாளியாக வேலை பார்த்ததும் தெரியவந்தது. எனவே புதிதாக கட்டப்படும் கோயிலில் 69 வயதான செல்லம் முதியவர் காவலாளியாக வேலை பார்த்த நிலையில் அவரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இந்த கொலை நடைபெற்றது? இந்தக் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து மப்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவலாளிக்கே பாதுகாப்பு இல்லாத சம்பவத்தால் பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.

Next Story

மதுரை வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர்! 

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Madurai Vaigai River woke up Kallazhakar

உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு பெரும் விமரிசையாக ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இதனை லட்சக்கணக்கான மக்கள், பக்தர்கள் நேரில் கண்டு களிப்பர். தகதகக்கும் தங்கக் குதிரையில் கம்பீரமாக வலம்வரும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் மிகவும் பிரசித்தி பெற்றது.

இந்த சித்திரை விழாவின் ஒரு பகுதியான மீனாட்சி - சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் (21.04.2024)  நடைபெற்றது. அதாவது சித்திரைத் திருவிழாவின் 10ஆம் நாளில் முக்கிய நிகழ்வான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் திரளான பக்தர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மீனாட்சி - சுந்தரேஸ்வரர் தேரோட்டம் நேற்று (22.04.224) கோலாகலமாகத் தொடங்கியது. இதனையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை  உற்சாகத்துடன் வடம் பிடித்து இழுத்து பரவசம் அடைந்தனர். இதற்காக அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். அதே சமயம் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக கள்ளழகர் மதுரை வந்தடைந்தார். கள்ளழகர் உடன் பாரம்பரியமாகக் கொண்டு வரப்படுகின்ற அழகர் கோயிலின் உண்டியல்கள் 3 மாட்டு வண்டிகளில் எடுத்து வரப்பட்டது.

இந்நிலையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு இன்று (23.04.2024) நடைபெற்றது. கள்ளழகரை தரிசிக்க ஆயிரக்கணக்கான மக்கள் வைகை ஆற்றில் குவிந்தனர். இதனையடுத்து பச்சைப் பட்டு உடுத்தி தங்கக் குதிரையில் கள்ளழகர் வைகை ஆற்றின் கரைக்கு வருகை புரிந்தார். கள்ளழகர் வைகையாற்றில் இறங்குவதற்கு முன்பு ஆற்றங்கரையில் மாலை அணிவித்து அகழருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பக்தர்களின் கோஷம் விண்ணை முட்ட, தங்கக்குதிரையில் பச்சைப்பட்டு உடுத்தி வைகையாற்றில் கள்ளழகர் இறங்கினார். கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வைக் காண சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை நீதிபதிகள் ஆர். சுரேஷ்குமார், புகழேந்தி, ஆதி கேசவலு மற்றும் அருள் முருகன் உள்ளிட்டோர் வருகை புரிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.